அத்தியாயம் 1

48.23k படித்தவர்கள்
2 கருத்துகள்

விடி வெள்ளி

சுமலைக் கிராமம் பனிப் போர்வை போர்த்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது கார்த்திகை மாதத்தின் கடைசி. எந்த நம்பிக்கையும் ஆசையும் அவளைத் தூண்டுகோல் போட்டு அந்தக் கிராமத்துக்கு இழுத்து வந்ததோ, அந்த நம்பிக்கை வறண்டு விட்டது. 

பவானி பெருமூச்சு விட்டபடி படுக்கையில் புரண்டு படுத்தாள். விடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. விடிந்து தான் அவள் என்ன புதுமையை அடையப் போகிறாள்? அண்மையில் படுத்திருந்த அவள் மகன் பாலு, நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

அந்தப் பச்சிளம் முகத்தில் வருங்காலத்தைந் பற்றிய சிந்தனைகளையோ, கவலைகளையோ காண முடியாது தெளிந்த நீரைப் போலவும் நிர்மலமான ஆகாயத்தைப் போலவும் அம் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.

பவானி நன்றாக விழித்துக் கொண்டாள். அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் ஆகாயத்தைக் கவனித்தாள். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து ஓய்ந்த வான வெளியில் திட்டுத் திட்டாக மேகங்கள் சிதறிக் கிடந்தன. அவை வான வெளியில் மெதுவாக தளர்ந்து செல்வதைக் கவனித்த பவானிக்கு மனிதனின் ஆசைகளும், எண்ணங்களும் முடிவு தெரியாத ஒரு நோக்கதுடன் ஓடுவதைப்போல இருந்தன.

மேகக் கூட்டங்கள் எங்கேதான் போகின்றன? கடுங்கோடைக்கு அப்புறம் வறண்டுபோன வயல்களுக்கும், நீர் நிலைகளுக்கும் மழையைப் பொழிந்துவிட்டு அவை மீண்டும் பிரயாணத்தைத் தொடங்குகின்றன. ஆனால், தன்னுடைய வறண்டு போன வாழ்க்கை வளம்பெற வழி இருக்கிறதா?

பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கபடமில்லாத முகத்தைக் கவனித்தாள். களங்கமற்ற அந்த முகம் ஒன்றுதான் அவளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. அவனுடைய சிறு கரங்களைச் சேர்த்து தன் கைக்குள் பற்றிக் கொண்டாள். 

‘இன்று இவை சிறு கரங்கள்தான். ஆனால், நாளடைவில் வளர்ந்து வலிமை பெற்றுவிடும். பிறகு வாழ்க்கையில் ஆதரவற்றுப் போன தனக்கு ஆதரவு தரும் அன்புக் கரங்களாக அவை மாறும்’ என்றெல்லாம் பவானியின் எண்ணங்கள் ஊர்ந்தன.

படுக்கையின் தலைமாட்டில் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த கம்பளிச் சட்டை, ஷர்ட், வேஷ்டி, கைக் குட்டை முதலியவை அவளைப் பார்த்துச் சிரித்தன.

கயிற்றுக் கட்டிலின் மீது விரிக்கப் பட்டிருத்த மெத்தை வெறிச் சென்று கிடந்தது. சில மாதங்களுக்கு முன்பு நோயாளியாக அந்தக் கட்டிலின் மீது வாசு படுத்திருந்தான். நோயாளி என்று சொல்லித்தான், பலரும் அவனை ஒரு நோயாளியாகக் கருதினார்கள்.

துல்லியமான வேஷ்டியும், அதன் மீது வெண்ணிற ஷர்ட்டும் அணிந்து, மேலே கம்பளிச் சட்டையை மாட்டிக்கொண்டு விட்டால் அவன் ஜோராகத்தான் இருந்தான். ஆளை நாளடைவில் உருக்கி உருக்குலைக்கும் காச நோயாளி அவன் வலுவூட்டும் ஆகாரங்களும் டானிக்குகளும் அவனை அவ்வளவு ஜோராக வைத்திருந்தன. 

‘நெட்டியால் செய்த பொம்மை இது. என்றைக்காவது இது சாய்ந்து விடும்’ என்று பவானி நினைக்கவே யில்லை. எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடலாம் என்று தான் நினைத்தாள். நல்ல காற்றுக்காகவும், சுகவாசத் துக்காகவுமே அவள் பசு மலைக்கு வந்தாள்.

கல்யாணமாகிய சுருக்கில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்டாள். செக்கச் செவேலென்று அவள் அந்தத் தங்க மதலையை ஈன்றபோது இருவர் உள்ளங்களும் கரை காணாத ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன. 

‘வாழ்க்கை தித்திக்கும் தேனாகவும், செங்கரும்பாகவும்தான் இருக்கப் போகிறது’ என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால், குழந்தைக்கு நான்கு வயது ஆவதற்கு முன்பு வாசுவின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திடீரென்று அவன் வாய் ஓயாமல் இரும ஆரம்பித்தான்.

“டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடுங்கள்” என்றாள் பவானி.

“ஆமாம், இருமலுக்குப் போய் மருந்து சாப்பிடுகிறார்கள்! ஏதாவது கஷாயம் வைத்துக் கொடு” என்றான் வாசு அவளிடம்.

கஷாயத்திலும் கல்கத்திலும் தற்கால வியாதிகள் மசிந்து போகிறதில்லை என்பதை அவன் என்ன கண்டான்?

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“பவானி! சாயங்காலத்தில் ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கிறது. லேசாகத் தலைவலிகூட இருக்கிறது” என்றான், ஒரு தினம் அவன் காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன்.

பவானி பதறிப் போனாள். “சொன்னால் கேட்டீர்களா? பெரிசாக எதையாவது இழுத்து விட்டுக்கொண்டு?” என்று சொல்லிக் கொண்டே கணவனை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டுக்குக் கிளம்பினாள்.

அங்கே டாக்டர் அவனைப் பரிசோதித்து விட்டு, “என்ன சார்! ஒரு மாசமாக இருமுகிறது என்கிறீர்கள்? சாவகாசமாக வருகிறீர்களே! காசம் ஆரம்பித்திருக்கிறதே” என்றார் ஈனஸ்வரத்தில்.

பவானியின் மனம் ‘திக்’கென்று அடித்துக் கொண்டது. இருந்தாலும் அவள் தைரியசாலி. “நம்மால் முடிந்தவரை நல்ல வைத்தியமாகச் செய்து பார்க்கிறது” என்றாள் டாக்டரிடம் தைரியமாகவே.

“செய்துதான் ஆகவேண்டும் அம்மா. வியாதி பணத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுமே!” என்றார் டாக்டர்.

“பணத்தை நாம்தானே சம்பாதிக்கிறோம்? அதுவா நம்மைச் சம்பாதிக்கிறது? என்னால் முடிந்த வரையில் பார்த்துவிடுகிறேன். பிறகு பகவான் இருக்கிறான்” என்று நம்பிக்கையுடன் பவானி அவருக்குப் பதில் அளித்தாள்.

டாக்டருக்கு அவளுடைய தைரியத்தைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரால் முடிந்த வரையில் வைத்தியம் செய்தார். அருகில் இருக்கும் பசுமலையில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி, தான் அடிக்கடி வந்து கவனிப்பதாகவும் கூறினர்.

பசுமலை கிராமத்துக்கு வந்த பவானிக்குப் படிப்படியாக ஏமாற்றமே ஏற்பட்டது. கணவனைக் காச நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டு அந்தக் கிராமத்துக்கு வந்தாள். ஆனால், கடவுளின் கருணை தான் அவள் விஷயத்தில் வற்றிவிட்டதோ அல்லது விதியின் விளையாட்டுத்தானோ? அதை யார்தாம் தீர்மானித்துப் பதில் கூற முடியும்? அங்கு வந்த சில மாதங்களில் வாசு இறந்து விட்டான். 

அன்று உலகமே அவள் வரைக்கும் அஸ்தமித்து விட்டது போல் இருந்தது. இனிமேல் வாழ்க்கையில் அவளுக்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று தீர்மானித்தாள் பவானி. இல்லை என்பதற்குப் பவானிக்குப் பொருள் விளங்கிவிட்டது. ஒரே சூன்யமான நிலைக்குத்தான் அப்படிப் பெயர் வைத்திருப்பதாக அவள் நினைத்தாள்.

இவையெல்லாம் பழைய நினைவுகள். ஆனால் அவள் மனதில் பசுமையுடன் பதிந்திருப்பவை வியாதியைவென்று எப்படியாவது தானும் கணவனும் இன்ப வாழ்க்கை நடத்தவேண்டும் என்று துடித்த உள்ளத்துக்கு ஆறுதல் தரும் நினைவுகள் என்று அவற்றைச் சொல்ல வேண்டும்.

பவானி பெருமூச்சுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். கீழ் வானத்தில் உதயத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. தொலைவிலே தெரியும் அந்த ஒளிதான் விடி வெள்ளியோ? சூரிய உதயத்திற்கு முன்தோன்றும் விடிவெள்ளி என்று இதைத்தான் சொல்லுகிறார்களோ? 

திரும்பிப் படுக்கையைப் பார்த்த பவானியின் கண்களுக்குப் பாலுவும் ஒரு விடிவெள்ளியாகவே தோன்றினான். ஆம். இன்று சிறு பையனாக இருப்பவன் நாளை உதயசூரியனாக மாறி புண்பட்ட அவள் மனத்துக்கு ஆறுதல் அளிப்பவனாக இருக்கலாம்.

பாலுவின் தூக்கம் கெடாமல் பவானி உள்ளம் கசியக் குனிந்து, பாலுவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

***

பொழுது விடிந்தது

பொழுது பலபல வென்று விடிந்து கொண்டுவந்தது. பவானியின் அடுத்த வீட்டில் கொட்டில் நிறையப் பசுக்கள் கட்டியிருந்தன. அன்று வெள்ளிக்கிழமையாதலால் அந்த வீட்டு அம்மாள் பசுக்களுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டுக் கொண்டிருந்தாள். இங்கொன்றும் அங்கொன்றுமாக நரைத்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டு, பசேலென்று மஞ்சள் பூசியிருந்தாள்.

எழுந்தவுடன் மகாலட்சுமி போல விளங்கும் அடுத்த வீட்டுப் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது. நாற்பத்தைந்து வயதுக்கு மேலாகியும் பார்வதியின் தோற்றத்தில் ஒருவித தனிக் கவர்ச்சி இருந்தது. அவளுடைய கணவர் கல்யாணராமன் அடிக்கடி அவளைப் பார்த்துக் கேட்பது வழக்கம்.

“நீ இப்படிச் சின்னப் பெண் மாதிரி, மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறாயே. அது என்ன ரகசியம்? ஏதாவது காயகல்பம் செய்து கொண்டாயா? சாப்பாடுகூட ஒரு வேளைதானே சாப்பிடுகிறாய்?”

“ஆமாம். காயகல்பமும், காயாத கல்பமும் எனக்கு எதற்கு? நீங்களாவது சாப்பிடுவீர்கள்! இவளுக்குத்தான் குழந்தை இல்லையே. இன்னொரு தரம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று உங்களுக்குச் சபலம் இருக்கலாம்” என்று பார்வதி சிரித்துக் கொண்டே கூறுவாள்.

“இன்னொரு கல்யாணமா? உன்னை விட்டுவிட்டா?” என்று அவர் அகமும் முகமும் மலரச் சொல்வதைப் பவானி தன் வீட்டுச் சமையலறையிலிருந்து எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள். அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த நேச பாவத்தை நினைத்தவுடன், அவளுக்குத் தற்கால விவாகரத்துச் சட்டங்களும் ஜீவனாம்ச வழக்குகளும் ஒரு கேலிக்கூத்தாகவே தோன்றின.

அன்று காலையில் எழுந்தவுடன் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது. இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒரு காரைச்சுவர் தான் இருந்தது. இரண்டடி உயரத்தில் இருந்த அந்த சுவர் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். 

சுவருக்கு அடுத்தாற்போல் பார்வதியின் வீட்டில் ஒரு பவள மல்லிகை மரம் இருந்தது. அதன் கிளைகள் பவானியின் வீட்டுப்பக்கமாகச் சாய்ந்திருந்தன. அதில் மலரும் மலர்கள் யாவும் பவானி பின் வீட்டில் உதிர்ந்திருக்கும்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“இந்த அதிசயத்தைப் பார்த்தாயா பவானி? தினமும் இரண்டுவேளை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவளை மறந்துவிட்டு, இந்த மரம் உன் வீட்டில் பூவாகக் கொட்டுகிறதே!” என்று சொல்லிக் கொண்டு பார்வதி பவானியைப் பார்த்துச் சிரித்தாள்.

“அதுதான் உலக வழக்கம்” என்று பவானி விரக்தியாகப் பதிலளித்து விட்டுக் கீழே உதிர்ந்திருந்த மலர்களைப் பொறுக்கி, பாத்திரத்தில் நிரப்பிப் பார்வதியிடம் கொடுத்தாள்.

இதற்குள் கொட்டிலில் கட்டியிருந்த பசு மாட்டைக் கறந்துவிட்டுப் பால் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதியின் கணவர் கல்யாணராமன். சுவருக்கு அந்தண்டை நிற்கும் பவானியைப் பார்த்ததும் அவர், “உள்ளே போய் ஒரு தம்ளர் கொண்டுவா அம்மா. குழந்தைக்குப் பால் தருகிறேன்” என்றார்.

பவானியின் மகன் பாலுவிடம் அவருக்கு அலாதி அன்பு. சின்னஞ்சிறு வயதில் தன்னந்தனியாக வாழத் துணிந்து விட்ட பவானியிடம் அவருக்கு மதிப்பும் வாஞ்சையும் ஏற்பட்டிருந்தன.

பவானி சிறிதுநேரம் தயங்கி நின்றாள். பிறகு தயக்கத்துடன் உள்ளே சென்று. பாலுக்காகத் தம்ளர் எடுத்து வந்தாள்.

“நேற்று மத்தியானம் வீட்டில் பால் இல்லையென்று குழந்தைக்கு நீ ஒன்றுமே தரவில்லையாமே?” என்று கேட்டுக் கொண்டே அவர். செம்பிலிருந்த பாலைத் தம்ளரில் ஊற்றினார். 
பிறகு அவளைப் பார்த்து. “உனக்குத் தேவைப்படுகிற பாலை நான் கொடுத்துவிடுகிறேன் அம்மா. நீ விலை ஒன்றும் கொடுக்க வேண்டாம்” என்றார்.

பவானிக்கு அவரை எதிர்த்து ஏதாவது சொல்லவே தயக்கமாக இருந்தது. ‘பால் நான்தான் கொடுப்பேன். நீ வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறார்? அவரிடம் போய் எப்படி வேண்டாம் என்று சொல்வது’ என்று நினைத்தாள் பவானி.

இருந்தாலும், அவளுக்கு சுயகௌரவம் அதிகம். பிறத்தியாருடைய தயவிலே அவளுக்கு வாழ விருப்பமிருந்தால் அன்றே- அவள் கணவன் இறந்து போன தினமே வருந்தி வருந்தி அழைத்த அவள் தமையனுடன், சென்னைக்குப் போயிருக்கலாம். 

ஆகவே பவானி விநயமாகக் கல்யாணராமனைப் பார்த்தாள். பிறகு தயக்கத்துடன், “மாமா! காசில்லாமல் வெறுமனே இதை வாங்கிக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஊரிலே மற்றவர்களும் ஏதாவது வம்பு பேசுவார்கள்” என்றாள்.

கல்யாணராமன் பவானியை விழித்துப் பார்த்தார். “பூ! பிரமாதம்! ஊரிலே நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று தானே உனக்குப் பயம் அம்மா? உனக்கு என்னைப் பற்றியோ என் மனசைப் பற்றியோ சந்தேகம் ஒன்றும் இல்லையே? அப்படி இல்லையென்றால் பேசாமல் பாலை வாங்கிக் கொள்.”

கல்யாணராமன் வெள்ளை மனம் படைத்தவர். வடக்கே நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சொந்தக் கிராமத்தில் வீடு வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அவர்களுடையது என்று சொல்ல வீடும் நிலபுலன்களும் மாடும் கன்றும் இருந்தன. ஆனால் ஒரு குழந்தை இல்லை. 

பால்யத்தில் திருச்செந்தூர் முருகனையும் பழனி ஆண்டவனையும் வருஷத்தில் இரு முறை தரிசனம் செய்து தங்கள் குறையை முறையிட்டனர் அத்தம்பதி. ஆனால், மகப்பேறு மட்டும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கல்யாணராமன் தெளிந்த உள்ளத்தைப் படைத்தவர். ஆகவே, அவர் இந்தக் குறையை மறந்துவிட்டார். பார்வதிக்கு இது ஒரு ஆறாத குறை. அவள் இருந்த விரதங்களும், தவங்களும் மேலும் அவளுக்குப் புது ஒளியைத் தந்தன.

அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பாக்கியத்தின் பிள்ளையும், அண்டை வீட்டில் இருக்கும் பவானியின் மகன் பாலுவும் ஒன்றுதான். பாக்கியத்துக்கும் அன்றாடம் பார்வதி மோரும் பாலும் கொடுத்தாள். பவானிக்குக் கொடுத்தால் அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ என்கிற தயக்கத்தினால்தான் பார்வதி இதுவரையில் அதைப்பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.

கல்யாணராமன் கபடமில்லாமல் கேட்டு கொடுத்தும் விட்டார். பவானி, அத்தம்பதியின் உயர்ந்த மனப் பான்மையை வியந்து கொண்டே பால் தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். குழந்தை எழுந்திருப்பதற்குள் அடுப்பைப் பற்ற வைத்துப் பால் காய்ச்சுவதில் முனைந்தாள்.

அடுப்பங்கரையின் சுவரில் ஒரு காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று தேதி பதினைந்து, அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் வாழ்க்கையில் எத்தகைய மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டது! அவள் பார்வைக்கு எதிராகக் கொட்டையான எண்ணில் அது அவளைப் பார்த்து சிரித்தது. 

சரியாக இரண்டு வருஷங்களுக்கு முன்பு அந்தப் பதினைந்தாம் தேதிதான் அவளையும், அவள் கணவனையும் இந்த உலகத்தில் நிரந்தரமாகப் பிரித்த நாள். அந்தச் சனியன் பிடித்த எண் கண் முன்னால் தெரியவே பவானி அவசரத்துடன் எழுந்து ‘சர்’ரென்று அந்தத் தாளைக் கிழித்து எரியும் கும்மட்டியில் போட்டாள்.

- தொடரும்