அத்தியாயம் 1

33.67k படித்தவர்கள்
23 கருத்துகள்

வேரில் பழத்த பலா

உடை என்பது. உடம்பை உடைத்துக் காட்ட அல்ல; மறைத்துக் கொள்ளவே, என்பதை, சரவணன் கொள்கையாகக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகம், எவருக்கும் வரலாம். இதை உறுதிப்படுத்துவதுபோல், ஒன்பதே ஒன்பது நிமிடங்களில், லுங்கி சுற்றிய உடம்பில், பாடாதி பளுப்பு பேண்டை ஏற்றி, பனியனுக்குமேல், கலர் ஜோடி இல்லாத ஒரு வெளுத்த சட்டையைப் போட்டுக்கொண்டு, அலுவலகத்திற்குத் தயாராகி, வாசலுக்கு வந்துவிட்டான்.

சரவணன், யோகாசனங்கள் போட்டவனுமல்ல, போடப் போகிறவனுமல்ல. யோக முறைகளைச் செய்பவனும் அல்ல, செய்யவேண்டும் என்று நினைப்பவனுமல்ல. ஆனாலும், அவற்றின் பலாபலன்கள் கைவரப் பெற்றவன் போல், அவை, அவன் முகத்தில் ரூபமற்ற ஒளியாகவும், அங்கங்களை அழகோடும், அளவோடும் வைத்திருக்கும் ரூபங்களாகவும் காட்டின. பள்ளிக்கூடக் காலத்தில் அடிக்கடியும், கல்லூரி காலத்தில் அவ்வப்போதும், கொஞ்சநஞ்சமிருந்த வயலை விளைவிக்க, குளத்து மடையின் மதகைத் திறந்துவிட, முன்புறமாய் படுத்து, தலையை பின்புறமாய் திருப்பி, புஜங்காசனம் போடுவதுபோல் செயல்பட்டிருக்கிறான். வயல்களில் பாத்திகள் போட, கால்களை சுருக்காமலே, குனிந்து குனிந்து எழுந்து இன்னொரு யோகாசனம் போடுவது போல் பாடுபட்டிருக்கிறான். அவன் பயின்ற கல்லூரியில் தனக்குரியப் பாடங்களை, எழுத்தெண்ணிப் படித்ததோடு, கருத்தெண்ணியும் படித்திருக்கிறான். சிந்தனையை ஒருமுனைப் படுத்தியிருக்கிறான். ஆகையால், ஒருவேளை, அவனுக்கு உழைப்பே ஆசனங்களாகவும், படிப்பே யோக முறைகளாகவும் வலிய வந்திருக்கலாம். சுருட்டை முடிக்காரன், சொந்த நிறக்காரன், அதாவது மாநிறம். நிறமா என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மின்னிய மினுக்கம் சிவப்பையும் சிதறடிக்கும்.

அலுவலகத்திற்குப் போகும் ஆண்களில், அதிகார தோரணை தென்படும்படி நடக்கும் சிலர் கையில் ஒரு பெட்டி வைத்திருப்பார்களே. அப்படிப்பட்ட ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். இந்தப் பெட்டி, முதலில் அவனுக்கு ஒரு பெட்டி பூஷ்வாத் தனமாகத்தான் தெரிந்தது. ஆனாலும் பைல்களையும், சாப்பாட்டுப் பார்சலையும், அதில் வசதியாக வைத்துக் கொள்ள முடிந்ததால், அலுவலகம் கொடுத்த அந்தப் பெட்டியை ஏற்றுக் கொண்டான்.

அலுவலக வராண்டாவாகவும், வரவேற்பறையாகவும் உள்ள முன்னறையில், ஜன்னலோரமாக நாற்காலியில் உட்கார்ந்து, சிறிது இடைவெளியில் கிடந்த விசாலமான மேஜையில், அதுவும் அதன்மேல் வைக்கப்பட்ட டெலிபோனில், இரண்டு கால்களையும் தூக்கி விரித்துப் போட்டு, ஏதோ ஒரு நாவலையோ, கிசுகிசுவையோ படித்துக் கொண்டிருந்த தங்கை வசந்தா, காலடிச் சத்தம் கேட்டு, அண்ணனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல், கால்களை அவசர அவசரமாய் கீழே போட்டுக் கொண்டு, கீழே கிடந்த ஒரு துணியை எடுத்தாள். நாற்காலியையும், "டிபாயையும், துடைக்கப் போகிறாளாம்.

சமயலறையில் இருந்து வெளியே வந்த முத்தம்மா, மகன், அதற்குள் புறப்பட்டுவிட்டதை எதிர்பாராதது போல், சிறிது பின்வாங்கி, முன்வாங்கினாள். ஏதோ பேசப்போனவள் அவனை, அபசகுனமாய் வழிமறிக்க வேண்டாம் என்பது போல், நிர்மலமாகப் பார்த்தாள்.

"என்னம்மா விஷயம்?"

"ஒண்ணுமில்லப்பா."

"ஏதோ சொல்ல வந்தது மாதிரி தெரியுது"

முத்தம்மா, மூக்கின் மேல் விரல் வைத்தாள். இவனும். இவன் அப்பனை மாதிரிதான். வாயால் சொன்னால் புரியுமோ புரியாதோ. ஆனால், மனசுக்கும், வாய்க்கும் இடையே வெளவால் மாதிரி வார வார்த்தைகளைப் புரிஞ்சுக்குவான். அந்த மனுஷனும், நான் வாசலுலேயே நின்னால், என்ன. அரிசி வாங்கக் காசில்லையான்னு கேட்பார். தூசு விழுவது மாதிரி கண்களைத் துடைத்தால் ஒன் அம்மா வீட்டுக்கு போகணுமா என்பார். டங்குன்னு சாப்பிட்டுத் தட்டை வச்சால் 'எங்க அம்மா குணந்தான் தெரியுமே. நான் திட்டினால்தானே நீ வருத்தப்படனும்? என்பார். சீக்கிரமா வரப்படாதா என்று சிணுங்கிச் சொல்வேனோ, சிரிச்சுச் சொல்வேனோ. இன்னைக்கு பெரிய பயல. அம்மாகிட்ட தூங்க வைம்பார். அவர் மாதிரியே தான் இவனும். இப்போ இந்த நிலைமையில பார்க்க அவரும் இல்லை; பெரிய பயலும் இல்லை. முத்தம்மா, சிந்தனையை உள்முகமாய் விட்டபோது, சரவணன். வெளி முகமாகக் கேட்டான்.

எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு நேரமாகுது. சீக்கிரமாச் சொல்லும்மா."

"ஒண்ணுமில்லப்பா. போய் வா."

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"போனால் வரணும். வந்தால் போகணும். இது எனக்குத் தெரியாதா. எரிந்து விழாமல் கேட்கிறேன். சும்மாச் சொல்லு."

"நாங்க வந்து மூணு மாசமாகுது. ஒன் தங்கச்சிக்கு இன்னும் ஒரு வேலை வாங்கி."

சரவணன், அம்மாவைப் பார்க்காமல், மேஜையைத் துடைத்த வசந்தாவைப் பார்த்தான்.

"வசந்தா. நேற்று பேப்பர்ல. ஒன்னைப் பொறுத்த அளவுல ஒரு முக்கியமான விஷயம் வந்தது. என்னன்னு சொல்லு பார்க்கலாம்."

"வந்து. வந்து. கமலஹாசன் இந்திப் படத்துல. ஸாரி. இன்சாட் .."

"இன்சாட்-பீன்னா என்ன.? ஹாசன் நிலையமுன்னா என்ன.? சொல்லு பார்க்கலாம்."

வசந்தா, அண்ணனைப் பார்க்க முடியாமல், அம்மாவைப் பார்த்தாள். அவன் கத்தினான்.

தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் விளம்பரம் பார்க்கல? குரூப் திரீபரீட்சை வைக்கப் போறதாய் வந்த விளம்பரத்தைப் படிக்கலியா? அப்புறம் மத்திய அரசோட ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ஒரு அட்வர்டைஸ்மென்ட் போனவாரம் போட்டாங்க. யூனியன் சர்வீஸ் கமிஷன்ல, செகரட்டேரியட் அஸிஸ்டெண்ட்ஸ் பரீட்சைக்கு விளம்பரம் போட்டிருந்தாங்க இரண்டையும் கத்தரிச்சு ஒன்கிட்டே கொடுத்தேன். அப்ளை பண்ணிட்டியா?"

வசந்தா, அண்ணனுக்கு நெருக்கமாகப் பதில் சொல்வது போல் வந்து, தன்னையறியாமலே அம்மாவின் முதுகுப் பக்கம் போய் நின்று கொண்டாள். அம்மாக்காரிதான் சமாளித்தாள்.

"வசந்தாவுக்குப் பரீட்சை எழுதவே பிடிக்கலியாம். நீ நினைச்சால்." "இவள் பரீட்சை எழுதிப் பாஸாகணும். உழைப்பால் வேலை வாங்கணும். அப்பத்தான் முடியும். வேற வழியும் கிடையாது. சிபாரிசுல கிடைக்கிற வேலைங்க ரொம்ப ரொம்பக் குறைவு. அதுவும் டெம்பரரியாய்தான் கிடைக்கும். அதுக்காக. கண்டவன் கிட்டல்லாம் என்னால பல்லைக் காட்ட முடியாது."

"இருந்தாலும். நீ. நினைச்சால்."

"என்னம்மா உளறுறே. என் தங்கைக்கு நல்ல வேலையா கிடைக்கக் கூடாதுன்னு நான் நினைப்பேனா? போனவாரம் பேங்க் இன்டர்வியூவிற்குப் போயிருந்தாள். இவள் படித்த பாடத்துலயே. ஐஎம்.எப். லோன் பற்றி கேள்வி கேட்டாங்களாம். இவள் கடன்காரி மாதிரி விழிச்சாளாம். ஏய் வசந்தா. இங்கே வா. ஒனக்கு. காம்பெட்டிஷன் மாஸ்டர் வாங்கித் தந்தேன். அதைப் படிக்காட்டாலும், புரட்டியாவது பார்த்தியா? பதில் சொல்லு"

"இன்னும் படி.."

நான் இன்னும் படிக்கத்தான் போறேன். கல்லூரிக் கல்வி, அறிவுலகத்தை மூடியிருக்கும் கதவின் சாவிதான்னு எனக்குத் தெரியும். தெரியுறதாலதான். இப்பவும் இரவில் பல பொது அறிவுப் புத்தகங்களை, இலக்கியங்களைப் படிக்கிறேன். இப்போ முக்கியம் நானல்ல. நீதான். இன்னும் நீ ஏன் படிக்கல.? பாத்தியாம்மா ஒன் மகளோட லட்சணத்தை? இவள் படிச்சால், அறிவு வளர்ந்திருமேன்னு பயப்படுறாள். இவள் பி. காம் படிப்புன்னு பேரு. கோல்ட் ஸ்டாண்டர்டைப் பற்றிக் கேட்டால் தெரியாது. சினிமா நடிகர் நடிகைகளோட லேட்டஸ்ட் காதல் ஸ்டாண்டர்டுகளைப் பற்றிக் கேட்டால், பட்டுப்பட்டுன்னு பதில் சொல்வாள். நான் ஒருத்தன். ஒனக்கு. நான் சொல்றதுல்லாம் புரியும் என்கிறது மாதிரி பேசுறேன் பாரு."

"ஆமாம். ஒனக்கும் நான் இளக்காரமாப் போயிட்டேன்."

"ஒனக்கு ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல. அண்ணன் சொல்றதை ஏன் கேட்க மாட்டேக்கேன்னு ஒன் செல்ல மகளைக் கேட்கறியா? சரிதான். ஒங்க மேல இளக்காரமாய் நான் இருந்திருந்தால், கிராமத்துலயே வயலுல புரள்றதுக்கு விட்டிருப்பேனே. எதுக்காக இங்கே மெட்ராஸ0க்கு கொண்டு வரணும்? இவள் என் மேற்பார்வையில் இருக்கணும். நீயும், அண்ணியும், இனிமேலும் வயல் வேலைக்குப் போகப்படாதுன்னுதானே. நான், போட்டிப் பரீட்சை எழுதித் தேறி. வேலைக்கு வந்தேன். வேலைக்குன்னு பேனாவைத்தான் தொட்டேன். எவன் காலையும் தொடல. இவளுக்கும் தொட மாட்டேன். இவளுக்கு நான் வழிதான் காட்டமுடியும். கூடவே நடக்க முடியுமா?"

முத்தம்மாவுக்கு மகனின் அக்கறை அரைகுறையாகப் புரிந்தது. கண்களை மூடி மூடி திறந்தாள். பிறகு "நீ எரிந்து விழாமல் கேட்பேன்னு சொன்னதாலதான் கேட்டேன்" என்றாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"நான் இப்போ என்ன எரிந்தா விழுறேன்? இவள் தன்னையே எரிச்சுக்கப்-படாதேன்னுதான் பேசுறேன். நான் படிக்கும்போது, இப்போ அவளுக்கு இருக்கிற வசதியும், வழி காட்டுறதுக்கும் ஒரு ஆள் எனக்கு இருந்திருந்தால். இந்நேரம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாய் இருப்பேன். சரி. நான் போறேன்."

"எப்பவும் 'போயிட்டு வாரேன்னு சொல்லுப்பா"

சரவணன், அம்மாவையும், அவள் பின்னால் நின்ற தங்கை வசந்தாவையும் ஒரு சேரப் பார்த்தான். சரஸ்வதிதேவிக்கு வயதானால் எப்படி இருப்பாளோ அப்படிப்பட்ட தோற்றம். வெள்ளைப் புடவையில், கூன்போடாத, பாடவும் தெரியாத, இசைமேதை கே.பி. சுந்தராம்பாள் போன்ற தோரணை. இந்த அறுபதிலும், ஒரு பல்கூட விழவில்லை. ஆடவில்லை. அம்மாவின் தோளில் தலை வைத்த வசந்தா, மாதா என்ற முதுமை மரத்தின் இளமைக்கிளையைப் போலவே இருந்தாள். ஈரப்பசை உதடுகள், குளுமை பொங்கும் கண்கள், கிராமிய உடம்பும், கல்லூரி லாவகமும் கொண்ட ஒய்யாரம்.

அண்ணன், தன்னைப் பார்ப்பதை அப்போதுதான் பார்த்த வசந்தா, எதிர்திசையில் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து பார்வையை விடுவித்தாள். "அண்ணன் போகட்டும். அப்புறம் நானும் நீயுந்தானே." என்று 'அவனுக்கு மானசீகமாய் சொல்லிக்கொண்டாள். சரவணன், தங்கையை அதிகமாய் மிரட்டியதற்கு பிராயச்சித்தமாய், அவளை அன்புத் ததும்பப் பார்த்தபடி, கதவைத் திறக்கப் போனான். வசந்தாவே ஓடிப்போய் கதவைத் திறந்து விட்டாள். அப்போது, படியேறி, வாசலுக்குள் நுழையப்போன அண்ணி தங்கம்மா, அவனைப் பார்த்து, முதல் மாடிப்படி முடிந்த தளத்தில், சற்று ஒதுங்கி நின்றாள். முத்தம்மா கடுப்பாய் பேசினாள்.

"இந்தாப்பா. வீட்டுக்குள்ள வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு, தண்ணி குடிச்சுட்டுப் போ. நாமதான் கறுப்புச் சேலை கட்டுறோமே. ஆபிசுக்கு போற நேரத்துல. ஒண்ணு உள்ள மொடங்கிக் கிடக்கணும். இல்லன்னா வெளில தள்ளி நிக்கணுமுன்னு சொல்லியா கொடுக்க முடியும்? நீ வா. நான்கூட எப்போவாவது நீ புறப்படும்போது. நேருக்கு நேர் நிற்கேனா? தானாத் தெரியணும். இல்லன்னா தெரியுறதைப் பார்த்துத் தெளியணும்."

சரவணன், அண்ணியை நோக்கினான். நாற்பத்திரண்டு வயதிருக்கலாம். அண்ணியின் கழுத்தில் ஆரம் போன்ற வட்டம். வெள்ளைக்கரை போட்ட கறுப்புப் புடவை. அண்ணியின் சிவந்த உடம்பு செம்மைப் படுத்தி, செழுமைப்படுத்தியது. அவனை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல், அவள் ஒதுங்கி ஒதுங்கிப் போனாள். அவனை, இடுப்பிலும் தோளிலும் எடுத்து வளர்த்தவள். பிறந்தகத்திற்கு, அவனையும் கூட்டிக் கொண்டு போனவள். தலையைத் தாழ்த்திக் கொண்ட அவள் கண்களில் இருந்து, நீர் காலில் கொட்டியது. அவனுக்குத் தெரியாமலே, கால்களால் அதைத் தேய்த்துக் கொண்டாள்.

அவள் உதடுகள் துடித்தன. 'ஊர்ல இருக்கும் போது, ஒங்க அம்மா. இப்டி என்னைப் பேசினதில்லப்பா. இப்போ மெட்ராசுக்கு வந்த பிறகுதான் அவங்களோட போக்கே மாறிட்டு. நான் இங்கே 'வந்தட்டின்னு நினைக்காங்க. நான் இந்த வீட்ல வேலைக்காரி மாதிரிதான் இருக்கணுமுன்னு நினைக்காங்க. அவங்க மட்டுமா நினைக்காங்க. ஏதோ ஒன் முகத்துக்காக, என் முகத்தை அப்பப்போ துடைச்சிட்டு இருக்கேன். என்று எப்படிச் சொல்வது?

ஈரம்பட்ட இதயமே கண்ணிற்கு வந்தபடி, படபடத்து, முன்புறமாய் நின்ற சரவணன், பின்புறமாய் திரும்பிச் சீறினான்.

"ஒனக்கு மூளை இருக்குதா அம்மா. இதே அண்ணி, நான் காலேஜுக்கு போறதுக்காக, வீட்டில் இருந்து புறப்படும்போது எதிர்ல வந்து இந்தா என் பங்கு. அம்பது ரூபாய்னு தருவாங்களே- அப்போ மட்டும் ஒன் கண்ணு குருடாய் இருந்ததா? ஒரு காலத்துல. ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இல்லாமல், ஒருத்திக்கு ஒருத்தன்தான்னு வச்சாங்க. அப்போதான் குடும்பங்கள் சிதறாமல் இருக்குமுன்னு நினைச்சாங்க. இதுக்காக, அதாவது தொண்ணுறு குடும்பம் சிதறாமல் இருக்கதுக்காக பத்து குடும்பத்துல புருஷனை இழந்தவங்களுக்கு, வெள்ளைச் சேலை கொடுத்தாங்க. ஒரு போர்ல, வீரர்களையும் பலி கொடுத்து ஜெயிச்சாங்களே அது மாதிரி, குடும்ப முறையோட வெற்றிக்காக இவங்கள மாதிரி. ஒன்னை மாதிரி பெண்களைப் பலி கொடுத்தாங்க.

நீங்களும் குடும்பக்கட்டு குலையாமல் இருக்கிறதுக்காக, மனக்கட்டை விடாமல் பிடிச்சிங்க. போர் வெற்றிக்காக சாகிறவங்களுக்கு நடுகல்னு வச்ச சமூகம் குடும்பக் கட்டோட வெற்றிக்கு சாகாமல் செத்தவங்களை, சாகாமல் சாகடிச்சாங்க. இது என்ன நியாயம்? அப்போ வெள்ளைப் புடவை இப்போ கறுப்பு புடவையாய் மாறிட்டு. சில இடத்துல கலர் புடவையாயும் ஆகுது. நீ இன்னும் பழைய காலத்துலயே இருக்கிறே. நான் ஒருத்தன். இதையெல்லாம் தெரியாத ஒன்கிட்ட போய் பேசுறேன் பாரு. வசந்தார். நான் சொன்னது அம்மாவுக்குப் புரியாது. ஒனக்குப் புரியுமுன்னு நினைக்கேன். அண்ணி. இப்படி வாங்க. அட"

சரவணன், அண்ணியின் கையைப் பிடித்து இழுத்து - பிறகு அவற்றைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அம்மாவை, மீண்டும் கோபமாய் முறைத்தபடியே வெளியேறினான்.

----------------------