அத்தியாயம் 1

9.49k படித்தவர்கள்
0 கருத்துகள்

ரு பக்கம் வேப்பமரமும், மறுபக்கம் புளியமரமும் துவாரபாலகர்களாய் தோற்றம் காட்ட, அதற்குப் பின்னாலிருந்த அந்த மசூதி கம்பீரமாகக் காட்சியளித்தது. ஆனாலும் அதன் கம்பீரத்திற்கு மொக்கை மகுடம் சூட்டப்பட்டது போல், அதன் மாடி ஜன்னல்களோ, கதவுகளோ இல்லாமல் ஆங்காங்கே பொந்துகளைக் காட்டிக் கொண்டு காட்சியளித்தது.

அந்தப் ‘பூச்சியில்லாத’ கட்டிடத்திற்கு வெளியே தரையிலிருந்து குறுக்கு நெடுக்குமாய் கட்டப்பட்ட சாரத்தில் பூச்சிபுழுக்கள் மாதிரியான, அரை நிர்வாண ஆண்களும், தாங்கள் ஆணா அல்லது பெண்ணா என்று அந்தக் கணத்தில் எந்தப் பிரக்ஞையுமில்லாமல் உடையே உடைந்து போக இயங்கிக் கொண்டிருந்த பெண்களுமாக கரணம் தப்பக்கூடிய மரண விளிம்பில் நின்றபடி கைகளைத் தூக்கிக் கொண்டிருந்தார்கள்.

காண்ட்ராக்டர் ராமலிங்கம், “என்னய்யா வேலை செய்றீங்க, வேல...” என்று அவர்கள் வேலை செய்வதைச் சரியாக பார்க்காமலேயே ஒரு கத்துக் கத்திவிட்டு வெளியே வந்தவர், தன்னையே கண்காணிப்பதுபோல் பார்த்த திவான் முகமதுவைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார். பதில் கும்பிடு பற்றிக் கவலைப்படாமலே, “வேலையா பாக்கீக வேல... கூலிய மட்டும் கூட்டிக் கேட்டா எப்படி?” என்று திவானைக் கண்கள் நோட்டமிட, அந்த மசூதியின் நுழைவு வாயிலுக்கு மீண்டும் போய் ஒரு எகிறு எகிறினார்.

தொழுகைக்காக வருகிறவர்களின் தலைகள் தொலைவில் கூடத் தெரியாத நேரம். சூரியன் மேற்குத் திக்கில் நோயாளியாகி, கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டிருந்த வேளை.

அந்த மசூதியின் எதிர்த் திக்கிலிருந்தும், கிழக்குத் திசையிலிருந்தும் ஏழெட்டுப் பெண்கள். தெற்கில் ஒரு பத்துப் பெண்கள். தலைகளில் கோஷாக்கள் இல்லை. அதை ஈடுகட்டுவது போல் நெற்றிக்கு கோஷா போட்டது மாதிரி தலைமுடி தாறுமாறாகச் சிதறிக் கிடக்க, நெற்றிகளை ரத்தமாக்கிய குங்குமக்காரிகள். என்றாலும் இளசுகள் பிளாஸ்டிக் குங்குமப் பொட்டை வைத்திருந்தனர். பெரிதுகள் நெற்றி போதாது என்பதுபோல் சிவப்பு சூரியன் மாதிரி ஆன பொட்டுகள் வைத்திருந்தனர். உல்லி, உல்லி வாயில், சுங்கடி போன்ற விதவிதமான சேலைகளில் வந்த இளம் பெண்கள், நடுத்தரங்கள். கழுத்தில் கிடக்கும் மஞ்சள் சரட்டை ஜாக்கெட்டிற்கு வெளியே காட்டுவது மாதிரியாக சிலர். அது தெரியாததுபோல் ஜாக்கெட்டில் விளிம்புபோல் அவற்றை ஆக்கிக் கொண்டவர் பலர். சில பெண்கள் முரட்டு டயரில் நெய்யப்பட்டது மாதிரியான சேலை கட்டியிருந்தார்கள். அத்தனை பேரும் கூலிப் பெண்கள். இடுப்பிலோ அல்லது தோளிலோ துவண்டு கிடந்த குழந்தைகளைச் சுமந்து வந்தார்கள். அப்படியும் ஒரு குழந்தை ஒருத்தியின் இடுப்பிலிருந்து இன்னொருத்தியின் தலையில் சூட்டிய பூ மொத்தையை பறிக்கப் போனது.

அத்தனை பெண்களும், அந்த மசூதி வாசலில் ஒப்புக்குக்கூட நின்று நிதானிக்காமல், சொந்த வீட்டிற்குள் போவதுபோல் போனார்கள். இடுப்பு வழியாய் இறங்கப்போன குழந்தைகளை ஒரு குலுக்குக் குலுக்கி மேலே ஏற்றிக்கொண்டும், தோளில் கிடந்த குழந்தைகளின் தலைகளை வருடிக் கொடுத்தும் அந்த மசூதிக்குள் நேற்று எங்கே நின்றார்களோ அங்கே நின்று கொண்டார்கள்.

திவான் முகமது அந்தப் பெண்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, மறுதடவை ராமலிங்கத்தைப் பார்த்தார். பின்னவருக்கு லேசான மகிழ்ச்சி. திவான், அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டார். அதுவே பெரிய காரியம். காரியம் கைகூடியது மாதிரிதான். மேலும் அவர் கவனத்தை அதிகமாய்க் கவருவதற்காக சாரத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த ஒரு சித்தாள் பெண்ணை, “மேலே ஏறுவியா, இல்ல கீழே இறங்கி ஒரேயடியா போறியா?” என்று ஓர் அதட்டுப் போட்டார். அதை திவான் ஆமோதிப்பது போல் தலையை மெல்ல மெல்ல ஆட்டுவது போல் இருந்தது.

இதுதான் சாக்கு என்று ராமலிங்கம் பேசப்போனார். இதற்குள் திவானின் கவனம் கலைந்தது.

ஒரு நாற்பது வயது அய்யப்ப பக்தர். காக்கா கறுப்பு வேட்டி, அதைவிட கட்டிக் கறுப்பான சட்டை, கழுத்தில் துளசி மாலை, தோளில் ஒரு குழந்தை. முன்னால் போன மனைவியிடம் குழந்தையை நீட்டிவிட்டு மசூதிக்கு வெளியே ஒதுங்கப் போனார். ஆனால், அவர் மனைவி அந்த வாசலில் நின்றபடி ஒரு முறைப்பு முறைத்ததால், அவர் ஓடுவதுபோல் நடந்து அவளையும் தாண்டி மசூதிக்குள் போனார். ஆனாலும் பெண் வாடைபடாத இடம் என்று ஒன்றை அவரே அனுமானித்துக் கொண்டு தனித்து நின்றார். அவரைப் பார்த்து லேசாய்ச் சிரித்த திவான் மீண்டும் ராமலிங்கத்தைப் பார்த்தபோது, ராமலிங்கத்திற்கு அது நல்ல சகுனமாகப் பட்டது.

ராமலிங்கம், பேச்சை எப்படித் துவக்குவது என்று யோசித்து எதிரே பார்த்தார். மசூதிக்கு இருநூறு அடி தள்ளி காதர் பாட்சாவும் முத்துக்குமாரும் ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். காதர் பாட்சா, ஒரு லுங்கியை அது தேவையில்லை என்பது போல தூக்கிப் பிடித்துக் கொண்டு கரடுமுரடான ஒரு மோட்டா சட்டையை தடவிவிட்டபடியே, முத்துக் குமாரை தோளில் தட்டி எதையோ பேசிச் சிரித்தான்.

அவனைப் போலவே இருபத்தாறு வயது இளைஞனான முத்துக்குமார் பேண்ட் போட்ட ஒரு சிலாக்கன். அதன் காலரைத் திருகியபடியே பாட்சாவைப் பார்க்காமல் எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்தான். அங்கே பப்பாளிப்பழம் ஒன்று பதியம் போட்டது போல் திடீரென்று தோன்றியது. பிறகு அதற்குக் கால் கை முளைத்து ஒரு கொடியாய் ஆனதுபோல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தது. 

காண்ட்ராக்டர் ராமலிங்கத்திற்கு, இது சுபசகுனமா, அல்லது அபசகுனமா என்று தெரிய வில்லை. ஆனாலும், அவர்களையே மூலதனமாக வைத்துப் பேச்சை துவக்குவது என்று தீர்மானித்து, “அதோ பாருங்க பாய், காதரு இன்னிக்கு தொழுகைக்கு வாரது ஆச்சரியமாயிருக்கு, என்ன விசேஷம்? அப்படியே வந்தாலும் ஒரு மட்டு மரியாதை வேண்டாம். தலையில் ஒரு குல்லா வேண்டாம். அதோ பாருங்க... அந்த முத்துக்குமாருப் பய கண்ணு எந்தப் பக்கமா போகுது பாருங்க. நானும் பாக்கேன். தினமும் அந்தப் பய அதே இடத்துல வந்து காக்கா கண்ணா பாக்கான். இதுக்கு இந்த காதர் பாட்சா உடந்தை. நீங்க ஏதாவது செய்யணும்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

திவான் முகமது, அந்த ஆண் ஜோடியையும், அதற்கு எதிர்பக்கம் கோஷா போடாமலே தலையைக் காட்டிய ஆயிஷாவையும் நோட்டமிட்டார். உடம்பு இயல்பாக எரிந்தாலும், அந்த ஹாஜி அஜீஸுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்பது மாதிரியான ஒரு திருப்தி. அதே சமயத்தில், நிலைமையை, பார்வையைத் தாண்டிப் பழகும் கட்டத்திற்கு விட்டுவிடக்கூடாது என்ற ஒரு பொறுப்புணர்ச்சி. அவர்களைப் பார்க்கப் பார்க்கத் தான் ஒரு ஜமாத் தலைவர் என்கின்ற எண்ணமும் கூடவே வந்தது. ராமலிங்கத்தைப் பார்த்துப் பட்டும் படாமலும் பேசினார்.

“எல்லாம் எங்க காதர் பாட்சாவால... அவனுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஏதாவது தட்டிக் கேட்கலாமுன்னா எதிர்த்துப் பேசுவான். நீயாவது முத்துக்குமாருட்ட கொஞ்சம் சொல்லேன்.”

“நான் சொல்லாம இருப்பேனா பாய்? அவன் அப்பன் துரைசாமிகிட்ட சொல்லி கையக் கால கட்டி போடும்படியா சொல்றேன். அப்புறம் காக்கா...”

திவான் உஷாரானார். பாய் பாய் என்று சொல்லும் இந்த ராமலிங்கம் ‘அண்ணாச்சி’ என்ற அர்த்தத்தில் காக்கா என்ற வார்த்தையை போட்டுவிட்டார் என்றால், ஏதோ ஒரு சமாச்சாரத்திற்கு அவர் காக்கா பிடிப்பதாகத்தான் இருக்கும். அவரை ‘சொல்லு’ என்பது மாதிரி திவான் பார்த்தபோது, ராமலிங்கம் தலையைச் சொறிந்தபடி பேசினார்.

“கட்டுப்படியாகல காக்கா... என்ன மட்டும் நீங்க விட்டால், இது வரைக்கும் செலவழிச்ச மூணு லட்ச ரூபாயும் தொலையட்டும்னு ஓடிப்போய்டுவேன். நல்ல காரியமாச்சேன்னு மசூதியோட முதல் மாடியைக் கட்டுறதுக்கு சம்மதிச்சேன். ஆனாலும் இரும்புக்கும், சிமிண்டுக்கும், அதோ கூலி அதிகமா கேட்கிறாங்களே அந்தக் குடிகாரப் பயலுக, அவங்களுக்குத் தெரியுதா என்ன? ஏதோ என்னை, கையக் கடிக்காமலேயாவது நீங்க பாத்துக்கணும்.”

திவான் முகமது, ஆசாமி எவ்வளவு செலவழித்திருப்பார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அந்த மொக்கை மாடியை கண்களால் ஒரு குத்துமதிப்பீடு செய்வது போல் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய்கூட செலவழித்திருக்க மாட்டான். அவன் சொல்றதுல மூன்றில் இரண்டு பொய். காண்ட்ராக்டர் மீண்டும் புலம்பினார்.

“உங்களையும் கவனிச்சுக்கிறேன் காக்கா. நான் என்னமோ உங்களைக் கவனிக்க மாட்டேன் என்கிற மாதிரி பார்க்கிறீங்களே. போங்க காக்கா.”

திவான் முகமது, இப்போது ராமலிங்கத்தை காக்கா மாதிரியே சாய்த்துப் பார்த்தார். இவன் தம்பியாகப் பிறக்கவில்லையென்றாலும், தம்பி மாதிரிதான். ஆனாலும், பங்காளி என்று வரும்போது அண்ணன், எப்படி தம்பியைப் பார்ப்பானோ அப்படியே ராமலிங்கத்தைப் பார்த்தபடி பட்டும்படாமலும் பதிலளித்தார்.

“ஆகட்டும், பார்க்கலாம்.”

“அப்பாடா, இப்போதாவது என் வயித்தில் பாலை ஊத்தினீங்க பாய்.”

திவான் லேசாக முகஞ்சுளித்தார். காரியம் ஆவதற்காக காக்கா (அண்ணன்) என்கிற வார்த்தையைப் பயன்படுத்திய இந்த காண்ட்ராக்டர், அது முடிந்துவிடும் என்று தெரிந்த உடனேயே ‘பாய்’ என்று பேச்சை மாற்றியது அவருக்குச் சிறிது, நெஞ்சைத் தட்டத்தான் செய்தது. ஆனாலும் அவர் கவனிப்பதாகச் சொன்னதால், காக்கா பாயானது பெரிதாகத் தெரியவில்லை. நாளைக்கே, தன்னை அவர் கவனிக்கணும், பைசல் செய்துக்கலாம். 

திவான், காண்ட்ராக்டர் காதைக் கடித்தார். “இதுவரைக்கும் செலவழிச்சதை நாளை பைசல் செய்துக்கலாம் வீட்டுக்கு வா... செக்கு தாறேன்...” இந்தச் சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், எந்த விகிதாச்சாரத்தில் கவனிக்க வேண்டும் என்பதைப் பேசுவதற்காகவோ என்னவோ வேப்பமரத்திற்குப் பின்னால் ஒதுங்கினார்கள். அப்போது நான்கைந்து பேர் மசூதிப் பக்கம் வருவதைப் பார்த்து விட்டு திவான் முகமது அந்த மசூதி வாயிலுக்குக் கம்பீரமாக நடந்து வந்தார். ராமலிங்கம் பின்னால் நொண்டியடித்து நடந்தார். அங்கே வந்த நான்கைந்து பேரும் திவானைப் பார்த்தபடி நின்றார்கள். 

திவானோ, அந்த ஐவரில் அமீரை மட்டுமே நோட்டமிட்டார். ‘ஐம்பது வயதுக்குப் பிறகும் தாடி வைக்காத இவனெல்லாம் எவன்? தலையில் ஒரு தொப்பிகூட வைக்காமல் கைக்குட்டையைக் கட்டியிருக்கான். உடம்பு மட்டும் தடியங்காய் மாதிரி வச்சிருக்கான். இவனெல்லாம் ஒரு முஸ்லீமாம்.’

என்றாலும், ராமலிங்கம், திவானைப் போல் அமீரைப் பார்க்கவில்லை. அவரையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர் போல் அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திவானிடம் தான் பொதுச் சமாச்சாரங்களைத்தான் பேசியதாக ஓர் அனுமானத்தை ஏற்படுத்தும்படிப் பேசினார்.

“என்ன பாய் சொன்னீங்க? தொழுகையை மேல் மாடிக்குக் கொண்டு போறீங்களா. கீழ்த் தளத்து எல்லைச் சுவரை இடிச்சுட்டு ஷட்டர் போடணுமா?”

திவானும் புரிந்து கொண்டு அதற்கேற்பப் பேசினார்.

“உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது ராமு. ஷட்டருதான் போடணும்.”

இப்போது அமீர் குறுக்கிட்டார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஷட்டர் வேண்டாம், மூச்சு முட்டும். ஒத்தை செங்கலுல சுவர் எழுப்பிடலாம்.”

“அப்ப மட்டும் மூச்சு முட்டாதா?”

“சொல்றத முழுசா கேளுங்க ராமலிங்கம். மேல் கூரை ‘பீமுக்கும்’ சுவருக்கும் இரண்டடி இடைவெளி விட்டுட்டா எப்படி மூச்சு முட்டும்?”

திவான் முகமது அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவர், திடீர்த் தாக்குதல் போல் பேசினார்.

“இடைவெளி விடுறது இஸ்லாமுக்கு விரோதம்.”

“எப்படி விரோதம்? நம் பெண்டு பிள்ளைகள இங்கே கீழ்த்தளத்துக்கு வரவழைச்சு, மேல் தளத்துல அப்பப்ப நடக்குற உபதேசத்தை கேட்க வைக்கணும்னு ஜமாத்து முடிவு செய்துட்டு. அதனால்தான் மாடியே கட்டறோம். இங்கேயும் அவங்கள ஜெயிலுல வைக்கறது மாதிரி ஷட்டர் போடணும்னு சொல்றீங்களே.”

“என்ன பேச்சு பேசற அமீர்? பிறத்தியான் பார்க்கலாமா?”

“பிறத்தியார நாம பாக்கலையா? பிறத்தியான் நடக்கும் போதும் பாக்கான். பஸ்ஸுல போகும்போதும் பக்கத்துல இடிச்சுக்கிட்டு நிக்கறது மாதிரி நிக்கான். இங்கேயும் பார்க்கிறவன் பார்க்கத்தான் செய்வான். அப்படியே பார்த்தாலும் அவன் மோசமா பார்க்கான்னு ஏன் நினைக்கணும். வீட்டுலயும் தெருவிலயும்தான் துணியால கோஷான்னா, மசூதியிலயும் இரும்பு கோஷாவா?”

திவான், பதிலுக்கு ஏதோ திருப்பிக் கொடுக்கப்போனார். அதற்குள் காதர் பாட்சா, முத்துக்குமாரை விட்டுவிட்டு, அந்தப் பக்கமாக ஓடிவந்தான். முத்துக்குமாரோ அவனை அங்கே நிறுத்தி வைக்காமல், ஆயிஷாவை கண்ணடிக்க முடியாது என்று நினைத்தானோ, இல்லை பேச்சு சுவாராசியத்திற்காக அழைத்தானோ, தெரியவில்லை - அவனை ஓடிவந்து இழுத்தான். 

இதற்குள் அமீர், காதர்பாட்சாவைப் பார்த்து கையாட்டினார். அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருப்பதைப் புரிந்து கொண்ட காதரும் முத்துக்குமாரைச் செல்லமாக ஒரு தள்ளு தள்ளிவிட்டு அமீர் பக்கமாக ஓடி வந்து நின்று திவானைப் பார்த்துவிட்டு, அமீரைப் பார்த்து கண்ணடித்தான். இதைப் பார்த்துவிட்ட திவான் முகமது ஆத்திரம் தாங்காமல் முகத்தைப் புற்று போலாக்கி நாக்கை நாகப்பாம்பாய் வெளியே நீட்டியபடி, குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். 

ராமலிங்கத்தைத் திட்டி அந்தத் திட்டை அவர்களுக்கு மறைமுகமாக கொடுக்கப் போனார். இதற்குள் பாங்குச் சத்தம் ஒலித்தது. ‘அல்லாஹி... அக்பர்... அல்லாஹி... அக்பர்’ என்று அனைவருக்கும் பரிச்சயப்பட்ட வார்த்தைகளோடு, இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமே புரிந்த இன்னும் சில அரேபிய வார்த்தைகள். உடனே தெருப் பக்கமாக மெத்தனமாய் நடந்து கொண்டிருந்தவர்கள்கூட இப்போது மசூதியை நோக்கி வேகவேகமாய் வந்து கொண்டிருந்தார்கள்.

- தொடரும்