அத்தியாயம் 1

68.44k படித்தவர்கள்
26 கருத்துகள்

நாலு நாட்களாய்ப் பெய்த அடைமழையில் மரம் செடி கொடிகளெல்லாம் குளித்து, குளம் குட்டைகளெல்லாம் நிரம்பி பூமியே வெடவெடத்துக் கொண்டிருந்தது.

தவளைகளின் கோஷம் அடங்கி, கீழ்வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒளி

ஜாலங்களைப் பார்த்தபடி மூர்த்தி ஆற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.

வேதக்களை சொட்டும் முகம், தெய்விகம் கலந்த தேஜஸ்! பிரம்மச்சரியத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பால சந்நியாசி போல் அமைதியாக, அடக்கமாக, வாய் கமகம் முணுமுணுக்க, நடந்து கொண்டிருந்தான்.

அருகில், ஒரு குட்டையைப் பார்த்தபோது பழைய ஞாபகம் வர, அப்பாவின் குரல் அசரீரிபோல் ஒலித்து மெய்சிலிர்த்தான்.

மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது.

அப்பா பரசு தீட்சிதர் பேசுகிறார் :

"மூர்த்தி! எனக்கு வயசாச்சுடா! உன் அம்மா போய் வருஷாப்திகமும் முடிந்து ஒரு வாரம் ஓடிப் போச்சு. இனி நீயும் நானும் இந்த கிராமத்திலே உட்கார்ந்துண்டு என்ன செய்யப் போறோம்? கிராமவாசம் சரி; சகவாசம் சரியில்லையே! நாளை காலை புறப்படுவோம். சனி உஷஸ்! நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்க வேணாம். உன்னைக் கொண்டு போய் சங்கர கனபாடிகளின் பாடசாலையில் சேர்த்து விடுகிறேன். நீ அவரிடம் வேதம் ஓதி வேத வித்தாய்ப் பிரகாசிக்க வேண்டும் என்பது உன் அம்மாவின் ஆசை. அவள் போன பிறகு எனக்கு வாழ்க்கையே சூன்யமாப் போச்சு. உன்னை சங்கர கனபாடிகளிடம் ஒப்படைத்துவிட்டு நான் எங்காவது வடக்கே போய் கங்கைக்கரையில் தங்கி விடுகிறேன், என் அந்திம காலத்துக்கு ஏற்ற இடம் அதுதான்."

ஒரு நீர்த்தேக்கத்தின் அருகே அவர்கள் வந்தபோது பொழுது விடிந்து விட்டதால் இருவரும் அங்கேயே ஸ்நானத்தை முடித்துக் கொண்டார்கள். தீட்சிதர் கையோடு கட்டிக்கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

அதை அவன் சாப்பிட்டு முடித்ததும் "இதைப் பார்த்தாயா மூர்த்தி! இது உன் அம்மா கழுத்திலிருந்த சங்கிலி, மூணு பவுன், இதை உன் கழுத்திலே போட்டுக் கொள். அவள் ஆசீர்வாதம் உன்னை எப்போதும் தழுவிக் கொண்டிருக்கும்.

பிராம்மண குலத்தில் பிறந்த நீ என்றைக்குமே ஆசார சீலனாக இரு.

பிராம்மணீயத்திலிருந்து ஒரு போதும் வழுவி விடாதே! சங்கர கனபாடிகளை நீ ஆசானாக அடைவதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் இரண்டு யாகங்கள் செய்தவர். என் பால்ய சிநேகிதர். தக்க பருவத்தில், உனக்கேற்ற பெண்ணை அவரே தேடி உன் திருமணத்தை முடித்து வைப்பார். உனக்கு இனி மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்.

மூன்று வருடங்களுக்கு முன் அப்பா சொன்ன அந்த வார்த்தைகளில் தோய்ந்திருந்த பாசமும் பரிவும் இப்போது நினைவுக்கு வர மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான். அந்தத் தயிர் சாதமும் ஊறுகாயும் இப்போது நெஞ்சில் ருசித்தது.

பிடரியைத் தடவி அங்கே உறுத்திய தங்கச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தபோது அம்மாவின் நினைவு தோன்ற பனிக்கும் கண்களில் அந்தச் சங்கிலியை ஒற்றிக் கொண்டான்.


ஆற்றங்கரைப் படித்துறையில் அமர்ந்து சற்று நேரம் புரண்டோடும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நீந்திக் குளிக்கவேண்டும்போல் ஆசை தோன்றியது.

‘இத்தனை காலம் கிராமத்திலேயே வாழ்ந்திருந்தும் நீச்சல் தெரிந்துகொள்ளாமல் போனேனே!’ என்று வருத்தப்பட்டான்.

அதே படித்துறையில் கீழே கொஞ்சம் தள்ளி, அரை நிர்வாண கோலத்தில் யாரோ ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மேலாடை கரையிலிருந்த ஒரு புதர்மீது உலர்ந்து கொண்டிருந்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"பொழுதுகூடச் சரியாக விடியாத இந்த நேரத்தில் தனிமையில் இங்கே வந்து குளிக்கும் இந்தப் பெண் யார்?" அந்த இளமையும், இயற்கையான வசீகரமும், உடல் வனப்பும் மூர்த்தியை மயக்கத்தில் ஆழ்த்தின.

"மோகினிப் பிசாசு என்று சொல்வார்களே, அதுவாக இருக்குமோ பிசாசுகள் குளிப்பதுண்டா?"

"சூரிய பகவானே! துஷ்டதேவதைகளிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்ற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே எழுந்து நின்றான்.

அச்சமயம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் மணி ஓசை கேட்கவே, அர்ச்சகர் வந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். சீக்கிரமே குளித்து, விநாயகரை வலம் வந்து, அர்ச்சகருக்கு புஷ்பங்கள் பறித்துக் கொடுத்துவிட்டு, பாடசாலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

“இன்னைக்கு துவாதசி. கனபாடிகள் எனக்காகக் காத்திருப்பார்.”

இத்தனை நேரம் ஸ்நானத்தை முடித்துவிட்டு பொன் வேய்ந்த ருத்ராட்ச மாலையும், கட்டுக்கட்டாய் விபூதியும், பீதாம்பரமும் அணிந்து சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். அடிநாபியிலிருந்து எழும் கம்பீரமான சங்கீதக் குரலில் அவர் மந்திரங்களை உச்சரித்து அர்ச்சனை செய்யும்போது பாடசாலை முழுதுமே தெய்வீகக் களை வீசும்.

நான் போய் அவருடைய பூஜைக்கு ஒத்தாசையாப் பணிவிடைகள் செய்யணும். இந்தக் கோயில் நந்தவனத்திலிருந்து மலர்களும், காசித் தும்பையும், வில்வமும் எடுத்துண்டு போகணும். நந்தனம் அரைச்சுத் தரணும். தூபதீப ஆராதனைக்கு வேண்டிய அத்தனையும் எடுத்து வைக்கணும். நொண்டி கிட்டா தீபாவளிக்கு ஊருக்குப் போனவன் இன்னும் திரும்பவில்லை. அவன் இருந்தா பாதி வேலைகளை அவனே கவனிச்சுக்குவான்.

துவாதசி ஆனதால் பாகீரதி இதற்குள் ஸ்நானத்தை முடித்து, கூந்தலை ஈரத் துணியோடு சேர்த்துச் சுருட்டி முடித்துக் கொண்டு சமைக்கத் தொடங்கியிருப்பாள். சமையலாகி பாடசாலைப் பிள்ளைகள் பந்தி முடிய எப்படியும் உச்சிப் பொழுதாகிவிடும். அவளுக்கு உதவியாக உக்கிராணத்தில் காய் நறுக்கித் தரணும். தண்ணீர் சேந்தி வைக்கணும். தோட்டத்துலேருந்து வாழை இலை வெட்டி வந்து ஏடு சீவி வைக்கணும். இத்தனையும் நான்தான் செய்தாகணும்.

‘பாவம், பாகீரதி - கனபாடிகளின் மகளாய்ப் பிறந்து வாழ்க்கையில் என்ன சுகத்தைக் கண்டாள்? சின்ன வயசிலேயே தாலி கட்டிக் கொண்டவள், அந்த மாங்கல்யத்தையும் தாலி கட்டிய பத்து நாளைக்குள்ளாகவே இழந்துவிட்டாள். அப்புறம் ஒரு வருஷத்துக்குள் அவள் அம்மாவும்-மாடு முட்டின தோஷம்-போய் விட்டாள். பாடசாலைப் பிள்ளைகளுக்குச் சமைத்துப் போடும் பொறுப்பு அம்மாவுக்குப் பிறகு இப்போது இவள் தலையில்தான்!

கனபாடிகளோ அளவுக்கு மீறிய ஆசாரம். பிராமணப் பிள்ளைகள் யார் வந்தாலும் பாடசாலையில் சேர்த்துக்கொண்டு வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கார். அவாளுக்கெல்லாம் வடித்துக் கொட்டத்தான் பாகீரதி பிறந்தாளா? அது அவ தலைவிதியா?’

*

"நாராயணா, நாராயணா!" என்று இரண்டு முறை உச்சரித்து, இன்னொருபடி கீழே இறங்கி, இடது கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடும் வெள்ளத்தில் தன் உடல் முழுமையும் அமிழ்த்தியபோது வெள்ளத்தின் அசுர வேகம் மூர்த்தியைத் தன்பால் இழுத்துக்கொண்டது. மூச்சுத் திணறித் திக்குமுக்காடி ‘ஐயோ’ என்று அலறினான். இன்னொரு முழுக்கு, அந்த வேகத்தில் தலைதூக்க முயன்று, முடியாமற் போய் ஒரு வாய் தண்ணீரும் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் -சட்டென்று இரண்டு கைகள்,-அவன் குடுமியைப் பிடித்துத் தூக்கி இழுத்துக் கரை சேர்த்தன. வளைக்கரங்கள் ! அவன் ஒன்றும் புரியாமல் மலர மலர விழித்தான். சற்றுமுன் பார்த்த அந்த அரை நிர்வாணப் பெண்தான்! அவள் அவசரமாக அவன் கைகளைப் பிடித்து இழுத்து மல்லாக்கப் படுக்க வைத்து வயிற்றின்மீது தன் காலால் ஒரு மிதிமிதித்தாள். வயிற்றுக்குள் போன தண்ணீர் அவன் வாய் வழியாகப் பீச்சி அடித்தது. அப்புறம்தான் மூர்த்திக்கு மூச்சு சீராக வரத் தொடங்கியது.

மூர்த்தி அவளை நன்றியோடு பார்த்துக்கொண்டே " நீ யார்?" என்று கேட்டான்.

”கழைக் கூத்தாடி மகள். பூர்விகம் மகாராஷ்டிரம்."

"நன்னாத் தமிழ் பேசறயே!"

"இரண்டு தலைமுறையாகத் தமிழ் நாட்டிலேதான் இருக்கேன்”.

”ஊர் ஊராய்ப் போய் தெருவில் டமாரம் தட்டி வித்தை செய்து கம்பிமேல் நடந்து, கஜகர்ணம் போட்டு-வயித்துப் பிழைப்பு."

"இப்ப எந்த ஊர்ல.?"

"இதே ஊர்லதான். தேரடித்தெரு சரபோஜி சத்திரத்து வாசல்ல…"

"சரபோஜி சத்திரமா! அந்தத் தெருவில்தானே எங்க வேத பாடசாலையும்

இருக்கு. எனக்குத் தெரியாமப் போச்சே தினமும் வித்தை செய்வீங்களா?"

"ஆமாம்."

அவளையே ஆச்சரியத்தோடு வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

வடித்தெடுத்த சிலையாய், அழகு பிம்பமாய், ஜல தேவதையாய்க் காட்சி அளித்த அந்தப் பெண்ணுக்குத் தன்னுடைய அரை நிர்வாண நிலை அப்போதுதான் நினைவுக்கு வர, கூச்சத்துடன் தன் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உலர்த்தியிருந்த ஆடையை நோக்கி விரைந்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

மூர்த்தி எழுந்து நின்று அவளை நன்றியோடு பார்த்தான். "உன்னை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். பேர் என்ன சொன்னே?”

"மஞ்சு."

" நாளைக்கும் இங்க வருவியா?"

"மாட்டேன்" என்பதுபோல் தலையாட்டினாள்.

"இன்னைக்கு மட்டும் எதுக்கு வந்தே??

"இன்னைக்கு மூணு நாள் தீட்டு. குளிச்சட்டுப் போகலாம்னு வந்தேன்."

தீட்டு என்றால் அவனுக்குத் தெரியும். பாகீரதி மாதத்துக்கொரு முறை கொல்லைப்புறத்தில் போய் மாட்டுக்கொட்டிலில் உட்கார்ந்துகொண்டு "மூர்த்தி எனக்கு லீவுடா, இந்த மூணு நாளும் நீதான் சமையல் வேலையைக் கவனிச்சுக்கணும்" என்பாளே, அந்தத் தீட்டுதானே!

"அதான் பொழுது விடியறதுக்குள்ளயே இங்கே வந்துட்டியா?"

அவள் நாணத்தோடு குனிந்தாள்.

"என்னுடைய நல்ல காலம். இப்ப நீ இங்கே வந்தாய். இல்லைன்னா என்னை வெள்ளம் கொண்டு போயிருக்கும். மத்தியானம் பாடசாலைப் பக்கம் வா. பாயசத்தோடு உனக்குச் சாப்பாடு போடச் சொல்கிறேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமை, அம்பாளுக்கு பாயசம் நைவேத்தியம் பண்ற வழக்கம்!"

"வேணாம். உழைக்காமல் சாப்பிடறது எங்க வழக்கமில்லை." •

"நீ என்னைக் காப்பாத்தினயே அதுக்கு நன்றிக் கடனாத் தான்."

"ஒரு உயிரைக் காப்பாத்தறது கடமை இல்லையா?"

"அப்படின்னா உன்னை மறுபடியும் பார்க்கவே முடியாதா? ”

" நாளைக்கு பஜார்ல அப்பாவும் நானும் வித்தை செய்வோம். அங்கே வந்தா என்னையும் பார்க்கலாம்; வித்தையும் பார்க்கலாம்! அப்பாவுக்கு வயசாயிட்டுது. நான் போய்த்தான் மூட்டி பொங்கிப் போடணும். வரட்டுமா?" புறப்பட்டு விட்டாள்.

மூர்த்தி பாடசாலைக்குத் திரும்பிப் போய் மீண்டும் குளித்தான்.

"என்ன, மூர்த்தி, ஏன் மறுபடியும் குளிக்கிறே?" என்று கேட்டாள் பாகீரதி, அவளுக்கு ஏதோ பொருத்தமில்லாமல் பதில் கூறிவிட்டு வேட்டி உலர்த்த தோட்டப் பக்கம் போனான். மனசே சரியில்லை அவனுக்கு. "அந்தப் பெண் எந்தக் குலமோ? என்ன ஜாதியோ? என்னைத் தொட்டுத் தூக்கிக் கரையில் சேர்த்தாள். தீட்டு குளித்தவள். நான் பிராமணன். ஆபத்துக்கு தோஷமில்லை என்று சொல்வார்கள்" என்று தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு விபூதியைக் குழைத்து மார்பிலும் கழுத்திலும் பூசிக்கொண்டான். அப்போது தன்னுடைய கழுத்து வெறிச்சிட்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டான்.

"ஐயோ, என் கழுத்திலிருந்த சங்கிலி எங்கே?"