அத்தியாயம் 1

26.7k படித்தவர்கள்
14 கருத்துகள்

அணுவுக்கு அனுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது வேளை நள்ளிரவு நாளும் அமாவாசை

ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் ஒண்டிக் கொள்வோம் என்னும் ஒரே அவாவினால் இடம் தேடிக் கொண்டு காற்றில் மிதந்து செல்கையில், எந்தக் கோவிலிலிருந்து தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தேவி புறப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தின் அருகில், ஒரு மரத்தின் பின்னிருந்து முக்கல்களும், அடக்க முயலும் கூச்சல்களும் வெளிப்படுவதைக் கேட்டாள். குளப்படிக்கட்டில் ஒர் ஆண்பிள்ளை குந்தியவண்ணம் இரு கைவிரல் நகங்களையும் கடித்துக் கொண்டு பரபரப்போடு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தான்,

ஒர் இளம் பெண் மரத்தடியில் மல்லாந்து படுத்தவண்ணம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு துடித்தாள்.

ஜன்மம் எடுக்க வேண்டுமெனவே பரமாணுவாய் வந்திருக்கும் தேவியானவள், உடனே அவ்விளந்தாயின் உள்மூச்சு வழியே அவளுள்ளே புகுந்து, கருப்பையில் பிரவேசித்தாள். ஆனால், ஏற்கெனவே அவள் வகுத்திருந்த விதிப்படி அவ்விடத்தில் ஒரு பிண்டம், வெளிப்படும் முயற்சியில் புரண்டு கொண்டிருந்தது.

அதனுடன் தேவி பேசலுற்றாள்:

"ஏ ஜீவனே, நீ இவ்விடத்தை விட்டுவிடு. நான் இந்தக் காயத்தில் உதிக்கப் போகிறேன்."
"தேவி, சத்திய ஸ்வரூபியாகிய உனக்குக் கேவலம் இந்த ஜன்மத்தில் இப்பொழுது ஆசை பிறப்பானேன்? இதன் உபாதைகளைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படித் தவிக்கிறோம்?"

"குழந்தாய், நான் குழந்தையாயிருக்க விரும்புகிறேன். அன்னையாய் இருந்து, என் குடும்பமாகிற இவ்வுலகங்களைப் பராமரித்துப் பராமரித்து நான் கிழவியாகிவிட்டேன். எனக்கு வயதில்லையாயினும், குழந்தையாக வேண்டும் என்னும் இச்சை ஏற்பட்டுவிட்டது-"

"தேவி, இப்பொழுது நீ நினைத்திருப்பது அவதாரமா?"

"இல்லை; பிறப்பு. நான் முன்னெடுத்த ஜன்மங்கள், பிறர் தவத்தைத் திருப்திப்படுத்துவதற்கும், துஷ்டர்களைச் சம்ஹரிப்பதற்கும் ஆகும். ஆனால் இப்போதோ, இது என் சுய இச்சை. அப்பொழுதெல்லாம், நான் குழந்தையுருவாக நெருப்பிலோ, பூவிலோ, சங்கிலோ உலகத்தில் இறங்கினேன். இப்போதோ, பாங்காக ஒர் உடலிலிருந்தே புறப்பட விரும்பினேன்."

"தேவி, உன் விளையாட்டை நாங்கள் அறியோம். ஆனால், ஜன்மமெடுக்கும் இந்த விளையாட்டில் நீ ஏமாந்து போவாய். உன்னைத்தான் நாங்கள் நம்பியிருக்கிறோம். நீயும் எங்களுள் மூழ்கி, உன்னையும் இழந்துவிட்டால், பிறகு நாங்கள் செய்வது தான் என்ன?"

"இதையேதான் என் கணவரும், என் இச்சையை அவரிடம் நான் வெளியிட்டபோது சொன்னார்: ஜன்மாவில் முன்பைவிடக் குழப்பங்களும் சந்தேகங்களும் அதிகரித்து விட்டன. புத்தி அதிகமாய் வளர்ந்து, அசல் சத்தியத்துக்குப் போட்டியாக மாயா சத்தியத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு, அதைப் பின்பற்றி, உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகளைவிட, நிருபணைக்கு முக்கியம் அதிகமாய்விட்டது. பிறப்புக்கும் இறப்புக்கும் கொஞ்சமாவது ஒய்வுகொடுக்கவேதான் பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் அசத்தியத்திற்காகவே ஜீவன்கள் ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும் வேகம், பிரளயத்தின் அவசியத்தையே குறைத்துக்கொண்டிருக்கிறது." -

"நான் கேட்டேன். ‘சத்தியத்துக்கு இறப்பு ஏது, பிறப்பு ஏது?’ - -

"அவர் சொன்னார்: ‘வாஸ்தவந்தான். ஆனால் அதற்கு வளர்ப்பு மாத்திரம் உண்டே சத்தியம் வளர்ந்தால்தானே பயன் படும்? உன்னை ஜன்மங்கள் இதுவரை பாதிக்காமல் இருப்பதும், நீ வளர்ப்பு அன்னையாக இருப்பதும், உன் குழந்தைகள் வளர்ப்புக் குழந்தைகளாக இருப்பதும், நீ நித்திய கன்னியாக இருப்பதும் எதனுடைய அர்த்தம் என நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீயும் உன் குழந்தைகளும் வளர்ப்பதோ, அல்லது வளர்க்க முயல்வதோ என்ன? சத்தியம். ஆகையால், நீ ஜன்மத்தில் படும் சபலமே அசத்தியத்தின் சாயைதான்--‘ என்றார்.

"அப்படியும் நான் கிளம்பிவிட்டேன். ஆகையால், என் குழந்தாய், நான் குழந்தையாவதற்கு எனக்கு இடம் விடு. பார், மாடிமேல் உலக்கை இடிப்பதுபோல், என் குழந்தை பிரசவ வேதனையில் இடும் கத்தல் கேட்கிறது! அளவுக்கு மீறி அவளைத் தன்புறுததுவது தகாது.

"தேவி, ஜன்மத்தில் அகப்பட்டவன், பொறியுள் அகப்பட்டுக்கொண்ட எலி!"

"குழந்தை, அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் எலியாய்ப் பொறியுள் புகுந்தாலும், நான் எப்பொழுது நினைத்தேனோ அப்பொழுது வெளிப்படப் பொறிக் கதவு எனக்கு எப்போதும் திறந்திருக்கும்."

"தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு, கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூடப் பயப்படுகிறது."

"சத்தியம் எப்போதும் ஜெயிக்கும். ஆகையால் எனக்கு விரைவில் இடம் விடு; தவிர, உனக்கு இப்பொழுது விடுதலை அளிக்கிறேனே. அதனால் உனக்கு சந்தோஷம் இல்லையா?"
"ஆனால் இந்த ஜன்மத்தின்மூலம் எனக்கும் விதித்திருக்கும் வினை தீர்ந்தாக வேண்டுமே!"

"அதைத்தான் உனக்கு பதிலாக நான் அநுபவிக்கப் போகிறேனே! எந்தப் பரமானுவின் வழி நான் இந்தக் காயத்தினுள் வந்தேனோ, அதன் உருவில் நீ இத்தாயின் வெளி மூச்சில் வெளிப்படுவாயாக!-- ஆசீர்வாதம்."

"தேவி, நான் மகா பாக்கியசாலி! எல்லோருக்கும் பிறப்பு இறப்பு இரண்டையும் அநுபவித்த பிறகுதான் முக்தி என்றால், எனக்குப் பிறப்பின் முன்னரே விடுதலை கிட்டிவிட்டது! நான் செலவு பெற்றுக்கொள்கிறேன்!"

அந்தப் பரமானு வெளிப்படுகையில் அவள் வீரிட்டாள்.

"என்ன? என்ன?"- குளத்தண்டை காத்திருக்கும் ஆண்பிள்ளை, அலறிக்கொண்டே மரத்தண்டை ஒடி வந்தான்.

கொஞ்ச நாழிகை பேச்சு மூச்சில்லை. பிறகு திடீரென்று ஜலத்தில் கல்லை விட்டெறிந்தாற் போல், நள்ளிரவை ஒரு புதுக்குரல் கிழித்தது.

அவனுக்கு உடல் புல்லரித்தது. "நான் வரட்டுமா?"

"இல்லை; இல்லை-- சரி, இப்போது வா!"

அவன் இன்னமும் சற்று அருகில் வந்தான்; ஆனால் இருளில் ஒன்றும் தெரியவில்லை.

"என்னா பிறந்திச்சு?

இருளில் அவள் குழந்தையைத் தடவிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்: "பொம்புள்ளையாட்டம் இருக்குது."

"அட கடவுளே!"

பராசக்தி சிரித்தாள். ஆனால் மறுகணம் அவளுக்கு மூச்சுத் திணறியது. அவள் முகத்தின் மேல் ஒர் அழுக்குத் துணி விழுந்தது. குரல்வளையை இரு கட்டைவிரல்கள் அழுத்தின. மூச்சு பயங்கரமாய்த் திணறியது. அந்த எமப்பிடியினின்று வீணே விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

"என்னம்மே கொழந்தே-அடிப்பாவி! என்னா பண்றே? "என்னெ சும்மா விடுன்னா!"

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"அடி கொலைகாரி!"

"விடுன்னா விடு-"

குழந்தையை அவன் பிடுங்கிக் கொண்டான். "ராச்சஸி! உனக்குப்போய் மகமாயி கொளந்தையெக் குடுத்தாளே!"

"அவளா குடுத்தா! நீ குடுத்தே!"

"இருந்தா என்ன? பாருடி இந்தப் பாவத்தை என் மாரிலே பாலைத் தேடுது:"

"சரிதான். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால், இந்தா சாமி குடுத்துது கொஞ்சுன்னு குடுக்கச் சொல்றியா?"

"கொடும்பாவி, அதனாலே கொலை பண்ணனுமா?"

"சரி, என்னா பண்ணப் போறே?"

"ஓடிப் போயிடுவோம்."

"அதுவும் உன்னை நம்பித்தானே!"

"சரி, வேண்டாம். இந்தக் குளத்தங்கரையிலேயே விட்டுட்டுப் போயிடுவம். தானா உருண்டு தண்ணியிலே விழுந்தாலும் விழுந்துட்டுப் போவுது. பண்ணின பாவம் பத்தாதுன்னா நம்ம கையினாலே சாகவனும்? இந்த ஒரு தடவை கூட எடுத்துவிட மாட்டியா?"

"நீ புண்ணியம் தேடற அழகை நீதான் மெச்சிக்கணும்-"

"அடிப்பாவி! ஆடு மாடுங்ககூட உன்னைவிட ஒசத்திடீ!"

"அது சரி. நான் மனுச ஜன்மந்தானே? இந்த வெட்டிப் பேச்செல்லாம் பேசி நேரத்தை ஓட்டாதே. விட்டுட்டு வரதுன்னா வா. நான் கண்ணாலேகூடப் பாக்கமாட்டேன். பாத்தாக்கூட ஒட்டிக்கும்-"

"நீ இப்படிப்பட்டவன்னு எனக்கு அப்பொ தெரியாதுடீ. தெரிஞ்சா சாகுவாசங்கூட வெச்சுக்கமாட்டேன். உனக்கு எப்பவும் உன்னைப் பத்தின நெனப்புத்தானே?"

குரல்கள் எட்ட எட்டப் போய்த் துரத்தில் அமுங்கிப் போயின.

குழந்தை தன்மேல் போட்டிருந்த கந்தலை, முஷ்டித்த கைகளாலும் கால்களாலும் உதைத்துக்கொண்டு அழுதது. உடலின் பசியும் குளிரும் புரியவில்லையாயினும், பொறுக்க முடியவில்லை.

அத்துடன் இந்தத் தனிமை-- இதுவரை அவளுக்குப் பழக்கப்பட்டது. அரூபமாய், எவற்றிலும் நிறைந்த உள்ளத்தின் ஒப்பற்ற ஒரு தன்மையின் தனிமை. ஆனால் இதுவோ, ஒர் உருவுள் கட்டுப்பட்டுவிட்டதால் அதற்கே தனியாயுள்ள தன் தனிமை.

கோபுர ஸ்தூபியின் பின்னிருந்து வெள்ளி, தேவியை அஞ்சலி செய்துகொண்டே கிளம்பியது. காளியாய்க் கத்திக் கத்தி, குழந்தைக்குத் தொண்டை கம்மிவிட்டது. புறப்பட்டுக் கொண்டிருக்கும் சூரியனுடைய கிரணங்களில் கோபுரத்தின் பித்தளை ஸ்தூபி பொன்னாய் மின்னியது.

அப்போது வயதான ஒரு பிராமணர், குளிப்பதற்காகப் படிக்கட்டுகளில் வெகு ஜாக்கிரதையாய் இறங்கினார். ‘வீல் வீல்’ என்று இருமுறை அலறி, குழந்தை அவர் கவனத்தை இழுத்தது.

"ஐயோ பாவமே! யார் இப்படிப் பண்ணினது?

குழந்தையை அவர் வாரி எடுத்துக்கொண்டார். அதன் தாய் ஒருவேளை குளத்தில் மிதக்கிறாளா அல்லது வேறு எங்கேனும் போயிருக்கிறாளா என்று சுற்றுமுற்றும் தேடிப் பார்த்துவிட்டு, வேறு வழி இல்லாமல் வந்த காரியத்தையும் மறந்துவிட்டு, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார்.

அவர் சம்சாரம் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண் டிருந்தாள். கோலத்தில் குனிந்த தலை நிமிர்ந்தபோது, அவள் முகம் அழகாக இருப்பதை ஐயர் கைக்குழவி கண்டது. வாலிபந் தான். ஐயர் கை மூட்டையைக் கண்டதும், அவள் புருவங்கள் அருவருப்பில் நெரிந்தன.

"இப்போ என்ன இது?"

"அடியே, இன்றைக்கு என் மனம் ஏதோ மாதிரி குதிக்கிறதடி உள்ளே வா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா நமக்கு ஒரு குழந்தை கிடைத்திருக்கிறது. நான் உன்னிடம் அப்பொழுதே சொன்னேனே, மூன்று நாட்களாய் ஒரே கனவைக் கண்டுகொண்டிருக்கிறேன் என்று. வா, வா." தொண்டை கம்மிவிட்டது.

அவர் கண்களில் ஜலம் தாரையாய்ப் பெருகி நின்றது. பூஜைக்கூடத்தின் நடுவில் செதுக்கிய தாமரைப்பூக் கோலத்தில் குழந்தையை வளர்த்திவிட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் படங்களுக்குக் கைகூப்பி நின்றார். அவர் தேகம் நடுங்கிற்று.

அவர் மனைவி சாவகாசமாய்ப் பின்னால் வந்தாள். ஐயரின் பரவசம் அவளுக்குப் புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. கோலக் குழாயை ஜன்னலில் லொட்டென்று வைத்துவிட்டு, இடுப்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு காத்துக்கொண்டு நின்றாள்.

"என் கனவைச் சொன்னேனோ?"

"எந்தக் கனா? நீங்கள் சொல்ல ஆரம்பித்தால் காதவழி போகுமே, உங்கள் கனா!"

"மூன்று இரவுகளாய் ஒரே கனவைக் கண்டுகொண்டிருக்கிறேன்-- எங்கிருந்தோ ஒரு குழந்தை என் பின்னால் வந்து, மேல் துணியைப் பிடித்து இழுத்து, அதன் கழுத்து நோக என்னை நிமிர்ந்து பார்த்து, ‘தாத்தா, உங்காத்துலே எனக்கு இடம் கொடேன்!’ என்று கேட்கிறது. நாலு ஐந்து வயசுக்கு மேல் இராது. அரையில் மாந்தளிர்ப் பட்டுப்பாவாடை மேலே சொக்காய் கிடையாது திறந்த மார்பில், கழுத்தில் காரடையா நோன்புச் சரடு மாதிரி ஒரு மாங்கல்யக் கயிறு. அவ்வளவுதான்.

"அது கேலியாக் கேட்டதோ, வேணுமென்றுதான் கேட்டதோ, தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம், என் எலும்பு ஒவ்வொன்றும் தனித்தனியாய் உருகிற்றுடி! நானே கரைந்து போய்விடுவேன் போலிருந்தது. என் கனவிற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு ஸ்நானம் பண்ணப்போன இடத்திலே, இது அநாதையா--"

"சரிதான்! ‘தாத்தா’ன்னு முறை வெச்சு உங்க கனாக் குழந்தை கூப்பிட்டத்துக்கோசரம் எனக்கு ஒரு பேத்தியைக் குளத்திலேருந்து பொறுக்கிப் பாத்து எடுத்துண்டு வந்தேளாக்கும்! எந்த வில்லிச்சி பெத்துப் போட்டுட்டுப் போனாளோ-- போலீஸுலே-"

குழந்தை கத்த ஆரம்பித்துவிட்டது.

"ஐயோ, பசிடீ-- அதன் பசியழுகையைப் பார்க்கையில், அந்த அம்மாளின் முகம் உள் போராட்டத்தில் முறுகிச் சவுங்கியது. அவளையும் மீறிக் கைகள் குழந்தையை வாங்கிக் கொண்டன. அன்னையின் வாயும் கைகளும் பாலிடத்தை ஆத்திரத்துடன் தேடித் தவித்தன. அந்த அவஸ்தையைக் கண்டு ஐயர் தலை குனிந்தது.

"நைவேத்தியப் பாலைப் புகட்டு; வேறே வாங்கி வருகிறேன்--" கீழ்நோக்கிய அவர் வார்த்தைகள் பூமியில் தெறித்து எழும்பின.

அம்மாள் ஆத்திரத்துடன் கீழே உட்கார்ந்து, குழந்தையை மடியில் படக்கென்று கிடத்திக் கொண்டாள். வார்த்தைகள் வாயினின்று வெடித்து உதிர்ந்தன.

"இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ? மூணுபேரை ஏற்கெனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள்; இன்னொருத்தி ஸ்நானம் பண்ணப்போன இடத்துலே குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழா மடத்துச் செவ்வாய்கிட்டெ அப்பவாவது உங்களுக்குப் பயங் கண்டிருக் கணும். இல்லை. மூணாவது பண்ணிண்டேள்; மூணும் பெத்தேள் தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளையுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு, இன்னமும் பாவமூட்டை யைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்."

ஐயர் புழுவாய்த் துடித்தார். "என் பாவந்தான்; ஆனால், என் எண்ணம்--"

அவள் சீறினாள். அவளுக்கு ஆவேசம் வந்துவிட்டது. "உங்கள் எண்ணத்தைப்பத்தி என்னிடம் பேசாதேயுங்கள். குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது நாலாந்தரம் பண்ணிக்கணும்னு தோணித்தே, அதுதான் உங்கள் எண்ணம். ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு. என் வீட்டுலே சோத்துக்குக்கூட நாதியில்லே; அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட்டோமுங்கற எண்ணந்தானே?”

"இந்தக் குடும்பம் விளங்க ஒரு குழந்தை--"

அம்மாள் ‘கடகட’வெனச் சிரித்தாள். "குழந்தையைக் கண்டுட்டேளா? கனாவிலேயும், குளத்தங்கரையிலும் தவிர!"

பதிலையும் தனக்குள்ளே அடக்கி அக்கேள்வி, பழுக்க நெருப்பில் காய்ச்சிய பிறகு, அடிவயிற்றுச் சதையில் மாட்டிக் குடலைக் கிழிக்கும் கொக்கி மாதிரி இருந்தது. நிறைந்த ஆச்சரியத்தில் கத்தி அழக்கூட மறந்துவிட்டாள் குழந்தை!

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

திடீரென்று அங்கே தேங்கிய சப்த ஒய்ச்சலைக் கண்டதும் அம்மாளுக்கே பயமாய்விட்டது. அவசர அவசரமாய்ப் பாலைக் கொஞ்சங் கொஞ்சமாய் ஊட்டுகையில் குழந்தையின் கடைவாயில் பால் வழிந்தது.

திடீரெனக் குழந்தையின் முகத்தின்மேல் இரண்டு நெருப்புத் துளிகள் விழுந்தன. அம்மாளின் கண்ணிர் கனலாய்க் கொதித்தது. அதன் வெம்மை அம்பாளின் உள் இறங்குகையில், ‘இவள் ஆத்திரப்படுவது வெறும் கோபத்தினால், அல்ல; வெதும்பிப் போன தன் வாழ்க்கையின் வேதனை தாங்காமல் துடிக்கிறாள்’ என்று அவள் உள்ளத்துக்குச் சொல்வது போல் இருந்தது.

குழந்தைக்குப் பசி தீர்ந்துவிட்டது. அம்மாளின் தாலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். அம்மாவுள் கல்லாய் உறைந்து போயிருந்த ஏதேதோ, இப்பொழுது நெய்ப் பாறை உடைவதுபோல் கிளர்ந்து உருகும் இன்பம் பயங்கரமாக இருந்தது. குழந்தையை இறுக அனைத்துக்கொண்டு தன் கணவரிடம் சென்றாள்.

"பார்த்தேளா குழந்தையை, எவ்வளவு கனம்! என்ன பண்றேள், பஞ்சாங்கத்தைப் புரட்டிண்டு?”

"நேற்று என்ன நக்ஷத்திரம், பார்க்கிறேன். ஜாதகம் கணிக்கலாமா என்று--"

"சரியாய்ப் போச்சு! இது என்னிக்குப் பிறந்தது, எந்த வேளை, என்ன ஜாதின்னு கண்டோம்? இதைப்பத்தி நமக்கென்ன தெரியும்?"

ஐயர் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் மனைவியின் உள்வாக்கு அவளையும் அறியாமல், ஆதிபரையின் நிர்க்குண நிராமயத் தன்மையை வெளியிட்டது. வந்த குழந்தையை அங்கீகரிப்பதைத் தவிர அதன் ஆதியைச் சோதிக்க முயல்வதில் என்ன பலன்?

"சரி, இவளுக்கு என்ன பேரை வைப்போம்?"

அம்மாள் கொஞ்சலாய், "பிடாரி மாதிரி கத்தறது. ‘பிடாரி’ன்னு வையுங்களேன். நான் ஊர்ப் பிடாரி; இவள் ஒண்ட வந்த பிடாரி!"

ஐயர், பிள்ளையார் சுழியிட்டு "ஜனனி ஜன்ம செளக்கியானாம் என ஆரம்பித்துவிட்டிருந்த கைக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் முகம் சட்டென மலர்ந்தது.

குழந்தையைப் பார்த்து மெதுவாய்க் கூப்பிட்டார்:

"ஜனனி, ஜனனீ."

* * *
"பாருங்கோ- பாருங்கோன்னா! கொழந்தை விளக்கைப் பாக்கறா!"

பிறந்தபின் சக்தி முதல் முதலாய் இப்போதுதான் ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை விளக்குச் சுடரில் பார்க்கிறாள். தானும் அதுவாய் இதுவரை இழைந்திருந்துவிட்டு இப்பொழுது அதனின்று வெளிப்பட்ட தனிப் பொறியாய், அதனின்று விலகி, அதையே தனியாயும் பார்க்கையில், அதன் தன்மை ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. ஆனால் அவள் இப்பொழுது பொறியாயினும், அவன் தூணாய்த்தான் விளக்குச் சுடரில் நிற்கிறான்.

"ஜனனீ"

"இதைப் பாக்கமாட்டேங்கறேளே! குழந்தை சிரிக்கிறா!" அம்மாள் தன் ஆனந்தத்தில் குழந்தை மாதிரி கைகொட்டிச் சிரிக்கிறாள்.

"ஜனனீ! விளையாட்டு போதுமா? திரும்பி வருகிறாயா?"

`"இன்னும் ஆரம்பிக்கக்கூட இல்லையே, அதற்குள்ளாகவா?"

"ஜனனி, இந்த விளையாட்டு போகப் போகப் புரியாது!"
"புரிந்துகொள்ள வேண்டுமென்றுதானே வந்திருக்கிறேன்?" -

"சரி, உன் இஷ்டம்! ஆனால் ஆரம்பிக்கை யிலேயே உன் விளையாட்டு உன் இஷ்டம் போல் ஆரம்பித்ததோ?"

"ஏன்?"

"நீ தாய்ப்பாலுக்கு ஆசைப்பட்டாய். கிடைத்ததோ? உன் உயிருக்கே உலை வந்தது. நீ தப்பியது யார் புண்ணியமோ எப்படியும் உன் சக்தியினால் அல்ல!"

"என்னைப் பார்; கண்ணாட்டி பாருடி! விளக்கையே பார்த்துண்டிருக்கையே-- ஜனனி பார்க்கிறாள்.

"ஜனனீ!, ஜனனீ! விளையாட்டில் இன்னமும் சிக்கிக்கொள்கிறாய். அந்தப் பார்வையை அவளிடம் ஏன் காட்டினாய்? பார்க்கச் சொன்னால் நேர்ப் பார்வையில்லாது கடைக்கண் நோக்கு ஏன்?--"

அம்மாளுக்கு திடீரென வயிற்றைக் குமட்டியது. "குடுகுடு"வென்று முற்றத்திற்கு ஓடினாள். தொண்டையைத் திரும்பத் திரும்ப மறுக்கிற்று. வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஐயர் அறையிலிருந்து வெளி வந்தார்.

"என்ன உடம்பு?"

அம்மாளின் சிவப்பு முகத்தில் ரத்தம் குழம்பியது. கண்களில் ஜலம் ததும்பியது. வாந்தி எடுத்த பிரயாசையா, அல்லது வெட்கமா? அம்மாள் பேசவில்லை. குனிந்து கொண்டு நின்றாள்.

"ஓ!"- ஐயரின் விழிகள் அகல விரிந்தன. அவள் மெளனத்தின் அர்த்தம் பிரம்மாண்டமான அலையாய் அவர் மேல் மோதியது. உடலில் ஒரு சிறு பயங்கூடக் கண்டது. படங்களை அஞ்சலி செய்துகொண்டு அப்படியே நின்றார்.

"ஈசுவரி! எல்லாம் உன் கிருபா கடாக்ஷம்!"

விளக்கில் சுடர் மறுபடி பொறிவிட்டது.

"சரி, சரி; உன் கைவரிசையைக் காட்டுகிறாயாக்கும்! செய், செய்."

சுடர் மங்கியது. குழந்தை, முகம் விசித்துக் கைகால்களை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.