அத்தியாயம் 1

14.68k படித்தவர்கள்
0 கருத்துகள்

சென்னைப் பெருநகரின் இதயப்பகுதி; அதற்குப் பைபாஸ் சர்ஜரி செய்தது போன்ற கட்டிடத் தொகுதிகள். அத்தனையும் வானம் அளப்பவை. இதில் முக்கோணமாய் முகம் காட்டும் மூன்று திரையரங்குகள். இந்தக் கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் விரிந்து பரந்த ஆள் நடமாட்டம் இல்லாத வளாகம். பென்ஸ், டாடா சுமோ, மாருதி, சான்ரோ, இண்டிகா போன்ற பல்வேறு கார்கள், கிழித்த கோடுகளை மீறி நின்றன. இவற்றின் அருகே பல்வேறு வண்ணத்திலான இரண்டு சக்கர வாகனங்கள்; ஒரு ஓரத்தில் சைக்கிள்கள்.

இந்த வளாகத்தின் உள்முனையில் பத்து படிக்கட்டுக்கள். கீழே இறங்கிப் போனால் 'அண்டர் கிரவுண்டான' அடிவாரத் தளம். பளபளப்பான கடப்பா மேனித் தரை நடந்தால் காலுக்கு ஒரு சுகம்; உள்ளே வருகிறவர்களை வரவேற்பதற்காக, ஒரு காதில் மட்டும் கடுக்கன் போட்ட விரிந்த சடை இளைஞர்கள் இரண்டு பேர், கோட்டும் சூட்டுமாய் நின்றார்கள் 'ஹலோ' என்பதற்கு பதிலாக ஒவ்வொருவரிடமும் “ஹாய் கேய்” என்றார்கள்.

அடிவாரத் தளத்தில் வடக்கு முனையில் அலங்கரித்த மேடை மிருதங்க, வீணை, வயலின், கடம் முதலிய வித்தகர்கள் தத்தம் கருவிகளோடு அவற்றை செல்லத் தட்டாய் தட்டியபடியே இருந்தார்கள். இவர்கள் மத்தியில், ஒரு இளம் பாடகன். மேடையின் மேட்டுப் பகுதியில், காகிதப் பூக்களால் தோரணமாய் சுருள் சுருளாய் கட்டப்பட்டிருந்தன பின் தளத்தில் தில்லை நடராஜருக்குப் பதிலாக, அர்த்த நாரீஸ்வார் சிலை அதன் ஒரு கண்ணில் நளினப் பார்வை. இன்னொன்றில் சுடலைத் தீப்பொறி. ஒ றை மார்பகம் ; இடுப்பில் ஒரு பக்கத்தை காணவில்லை. கால்கள் ஒன்றில் லாவகம். இன்னொன்றில் ஆடு தளத்தை அழுந்தப்பிடித்த - நாட்டிய பாணியில் சொல்லப்போனால் “தரைத்தட்டு”க் கோலம்.

நடுநிசி வந்துவிட்டது.

திடீரென்று மிருதங்கத்தின் அலாரிப்பும், அந்த அர்த்த நாரீஸ்வரர் சிலைமீது பூக்களும் ஒரே சமயத்தில் உராய்ந்தன. பக்கவாட்டில், நீளவாகு தேக்குப் பலகையில் விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், ஓட்கா, பிளடி மேரி போன்ற குடி வகையறாக்கள். இடது பக்கத்து நீளவாக்குப் பலகையில் பிஷ் பிங்கர், பிங்கர் சிப்ஸ், மட்டன், சிக்கன் வறுவல்கள், முந்திரிக்கொட்டை, வேர்க்கடலை, நனைந்த பருப்பு, நனையாத பருப்பு, உருளை வடிவமான வெங்காயம், அதேமாதிரியான வெள்ளரிக்காய், பிரியாணி, சப்பாத்தி, சமாச்சாரங்கள். இவை அத்தனையையும் ஓரங்கட்டிப் பார்த்தபடியே நின்றவர்கள், இரண்டு வரிசையாகப் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரப் போனார்கள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அதுவரை, மனித குரோசோம்களில் நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள் இருப்பதை கண்டு பிடித்த லண்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அலசிக் கொண்டிருந்தவர்கள் - வீட்டில் வெள்ளைக் கோட்டை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருந்த இவர்கள், முன் வரிசையில் இடது பக்கம் நட்புக்கு ஏற்ற வகையிலும், மேடைப் பார்வைக்கு ஏற்ற வகையிலும் உட்கார்ந்தார்கள். தர்மபுரியில், மூன்று மாணவிகளை, உயிரோடு கொளுத்திய கொடுமையை அரசியல் சாசனத்தின் வழியாகவும், இ.பி.கோ. மூலமும், அலசிக் கொண்டிருந்தவர்கள், வலது பக்கம் உட்கார்ந்தார்கள். இவர்களும் கருப்பு அங்கிகளை கார்களுக்குள் போட்டுவிட்டு வந்தவர்கள். பொறியாளர்களிடம், தான் வரைந்த கட்டிடப் பிளானை தலைகளாகப் பிடித்த கார்ப்பரேஷன் கிளார்க்கிடம் அதைச் சுட்டிக் காட்டினால் உடனே அவர் தவறுக்கு வருந்தாமல் எனக்குத் தெரியும்' என்று திமிராக பதிலளித்ததை விளக்கிக் கொண்டிருந்த சீனியர் பொறியாளரை விட்டுவிட்டு, ஜுனியர் பொறியாளர்கள் இருக்கைகளில் ஓடிப்போய் உட்கார்ந்தார்கள் சாதிச் சண்டைகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருத வேண்டும் என்று வாதாடி போராடிக் கொண்டிருந்த ஐ ஏ எஸ், ஐ.பி.எஸ். காரர்களும், சமூகப் பிரச்சினையாக கருத வேண்டும் என்று பதிலளித்த அரசியல் வாதிகளும் அவசர அவசரமாய் ஓடி உட்கார்ந்தார்கள் இவர்கள் அல்லாது கம்பெனி நிர்வாகிகள், மாணவர்கள், டாக்சி டிரைவர்கள், என். ஜி ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனர்கள், லுங்கிக்காரர்கள் உள்ளிட்ட கலப்புக் கூட்டமாக, அந்த இருக்கைகள் மாறின. ஆனாலும், மருந்துக்குக்கூட ஒரு பெண் இல்லை.

திடீரென்று. அந்தத் தளத்தின் மேடை, வெள்ளை வாழைத் தண்டு விளக்குகளும், வண்ண பல்புகளும் அணைய அணைய, செஞ்சிவப்பு விளக்குகளால் பிரகாசித்தது. மிருதங்கம் மட்டும் பெரிதாய் ஒலிக்க, இதர இசைக்காரர்கள் தத்தம் கருவிகளுக்கு சுதி சேர்த்தார்கள். எங்கிருந்தோ ஒரு பின்னணிக் குரல்.

“ஹாய்! கேய்.. பாய்ஸ்... வணக்கம். இப்போது நமது சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரிய இடத்துப் பிள்ளையும், நடன சிகாமணியுமான மோகனனின் பரத நாட்டியமும், கதக் நாட்டியமும் நடைபெறும்.”

மோகனன் என்ற பெயர் வந்தபோது நமது தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் வி.ஐ.பி. பேர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பார்களே, அப்படிப் பட்ட அழுத்தம் அந்த பெயருக்கு கிடைத்தது. நிகழ்ச்சி அறிவிப்பு முடிந்ததும், மேடை விளக்குகள் திடீரென்று அணைந்தன. அந்த இருள் மயத்தில் மெல்லிய இசைகூட பேயோசையானது. இரண்டு நிமிடங்களில் அதே மேடை விளக்குகள் மீண்டும் ஜொலித்தன.

மேடையின் மையப் பகுதியில், மோகனன் நடனக் கச்சிதமாய் காணப்பட்டான். செம்பச்சை வேட்டி இறுகக் கட்டப்பட்டிருந்தது. இடுப்பிற்கு மேல் இடது பக்கம் மட்டும் ஒரு தாவணி போன்ற துணி தோளைத் தொட்டு, முதுகை வருடிக் கொடுத்தது. ஒருகால், லேசாய் தூக்கியும், இன்னொரு கால், நளின வளைவோடும் நின்றன. காதுகள் ஒன்றில் வளையம். இன்னொன்றில் கடுக்கன். முகத்தில் ஒரு பகுதி சிவப்பு. மறுபகுதி கரும்பச்சை கீழ் உதட்டில் மட்டும் லிப்டிக்ஸ். பரதநாட்டிய இலக்கணப்படி, அவன் இரண்டு தோள்களும் ஒரே நேர்கோடாய் இணைந்தன. கழுத்து அதன் முடிச்சானது. இடுப்பின் நடுப்பகுதி ஒரு முக்கோண வடிவமாகவும், இடுப்புக்கு கீழே இருந்து பாதம் வரை இன்னொரு முக்கோண வடிவமாகவும் தோன்றின. அவன் கைகளை நீட்டி வளைத்து, அவற்றில் ஒவ்வொன்றும் முட்டிகளில் முட்டியபோது அவையும் இரண்டு முக்கோணங்களாகின.

மோகனன், ஒரு காலை மேலே தூக்கி, பிறகு பக்கவாட்டிற்கு கொண்டு வந்தான் கால்களை சலங்கை சத்தத்துடன் முன்னால் வந்து தரைத்தட்டு செய்தான். பின்னர், குதிகாலில் நின்று அப்படியே திரும்பி அர்த்த நாரீஸ்வரரை வணங்கி அதே காலோடு குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து “சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.

பல்லவி
“ஆணும் ஆணும் உறவு கொண்டால் - நீங்கள்
அலட்டிக்க என்னய்யா இருக்குது?
ஓரின உறவு, எங்களின் உரிமை - இந்த
உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!
அனுபல்லவி
என்னய்யா நியாயம்?
இதுதான் அநியாயம்!

பலத்த கைத்தட்டலுக்கு இடையே இப்படி பாட்டு ஒலித்த போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, 'அபங்கம்” செய்தான். முக்கோணமாய் உடலாட்டி “திரிபங்கம்” போட்டான். பின்னர் அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்ந்து அவற்றில் இரு கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான். அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக் கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன் போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி - விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான். மோகனன் அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன் மேல் கவிழ்ந்து படுத்தான். அய்யோ அய்யோ” என்று சிறிது நேரம் கீழே கிடந்தவன் அலறினான். பிறகு ஆகா ஆகா” என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக் கொண்டான். உடனே பேரவையில் இருந்து “ஒன்ஸ்மோர்” என்று பல “மோர்கள்” ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும் மோகனனின் தனித்துவ நாட்டியம்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் “வர்ணம்” என்ற நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப பாடுவதுபோல் வாயசைத்தான்.

ஓரினச் சேர்க்கை ஒருத்தரின் உரிமை
ஈரினச் சேர்க்கையால் என்னத்தை கண்டீர்? - மனித
உயிரினம் பெருகினால் உயிருக்கே ஆபத்து - எங்கள்
ஓரினச் சேர்க்கைதான் உடனடி மருந்து.

மக்கள் பெருகினால் வெள்ளம், எரிமலை,
பூகம்பம், புயல், போரென்று வருமாம்.
மாபெரும் நிபுணன் மால்தஸின் கூற்று.
ஓரினச் சேர்க்கையே இந்தக் கூற்றுக்கு கூற்று.

கருப்பை இல்லாத சேர்க்கை
உருவம் பிறக்காத சேவை....
இருப்பினும் எங்களை வெறுக்கிறீர்
என்னய்யா நியாயம்? இது அநியாயம்...

மோகனன், பாடலுக்கு ஏற்ப அபிநய ஆட்டம் ஆடிவிட்டு, கால்களை லேசாய் ஆட்டி ஆட்டி பலமாய் நின்றான். அப்போது ஒரு பின்னணிக் குரல்.

- தொடரும்