அத்தியாயம் 1

48.46k படித்தவர்கள்
62 கருத்துகள்

யோனி மிகவும் சிறியது. எட்டு வயதுச் சிறுமிக்கு எத்தனை பெரிதாக இருந்துவிடும்? ஆனால், எட்டு வயதுச் சிறுமியின் யோனி போலக் கைபடாததாக இல்லை, கிழிந்து சிதைந்திருந்தது. அந்தப் பொறுக்கிக் கும்பல் ஏழெட்டு பேரும் மாறி மாறி அவள் யோனியோடு வன்புணர்வு செய்ததில், கூழாகி ரத்தம் வழிந்து கண்கொண்டு பார்க்க முடியாததாக இருந்தது.

எட்டு வயது சின்ன உடம்பை மேஜை மீது தூக்கி வைத்தபோதுகூட இயல்பாகத்தான் இருந்தார் மாயாண்டி. கவுனைக் கழற்றுவதற்குத் தேவையில்லாத மாதிரி நிர்வாணமாகவே கிடந்தாள் அந்தச் சிறுமி. அந்தத் தட்டையான மார்புப் பகுதியும் ரத்தம் கன்றிப்போயிருந்தது. இன்னமும் முளைக்காத மார்பைக் கடித்து துவம்சம் செய்திருந்தார்கள். மூர்க்கன்களின் கையில் அந்தச் சின்ன உடம்பு என்ன பாடுபட்டிருக்கும்?

தலையோடு காலாகக் கண்களை ஓட்டியபோதுதான் வெலவெலத்துப் போனார். இத்தனை வருட அனுபவத்தில் அவர் பார்க்காத சடலம் இல்லை. ஆனால், இதுமாதிரி கை கால் முறிக்கப்பட்டு, யோனி சிதைக்கப்பட்டு, எட்டு வயது மார்பு கடிக்கப்பட்டு, மிருகத்தனமாக வன்புணர்வு செய்யப்பட்ட சடலத்தைப் பார்ப்பது இதுதான் முதல்முறை.

பிணவறைக் கிடங்குக்கு வெளியே உறவினர்கள், ஊர்மக்கள் கூட்டம் முண்டியடித்தது. கூடவே பத்திரிகைகாரர்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், போலீஸ்காரர்கள் என்று ரணகளமாகியிருந்தது மருத்துவமனை.

“இவனுங்க அலப்பறைக்கு ஒண்ணும் கொறச்சலு இல்ல. டிவி, யூடியூப் சேனல்னு வந்துருவானுங்க. நாங்க இங்க கஷ்டப்படறத ஒருத்தனும் பேசாதீங்க. ரேப் கேஸ், பொம்பளை விஷயம்னா ஓடிவந்துருங்க.”

பழனி கோபத்தில் வார்த்தைகளை அனுப்பினான்.

“டிவி நியூஸ் பார்த்துட்டுத்தான் நான் ஓடிவந்தேன். போஸ்ட் மார்டத்துக்கு அவசரப்படுத்துவாங்க. நீ ஒருத்தனா கஷ்டப்படக்கூடாதுன்னு வந்துட்டேன் பழனி.”

வீட்டிலிருந்து போட்டுவந்த சட்டையைக் கழற்றி, அறையிலிருந்த அலமாரிக்குள் வைத்தார் மாயாண்டி. பிணம் அறுக்கும்போது போடும் சட்டையை மாட்டிக்கொண்டார்.

“வீக்லி ஆஃப்தானே தலைவா?”

“அதைப் பார்த்தா முடியுமா பழனி? போலீஸ் கேஸு... வெரசா முடிக்கணும்.”

பழனியின் செல்போனில் அதகளமாகப் பாட்டு பொறி பறந்தது…

நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா 
தர்பாரு உன்னோட கேங்கு
நான்தாண்டா லீடு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு

பணியாளர்கள் அறைக்குப் பக்கத்திலிருந்த குழாயடியில் குளித்துவிட்டு வந்தான் பழனி. வீட்டு சட்டை பேண்ட் போட்டுத் தலைவாரியபடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

“பாடி காலைலயே வந்துருச்சு தலைவா. ஆர்டிஓ வரல. இதோ அதோன்னு வெயிட் பண்ணேன். டூட்டி டைம் ஓவர். நானு கெளம்பறேன். நல்லவேளை இந்த கேஸு எனக்கு வரல. ஆர்டிஓ ரிப்போர்ட்டு, டீன் ரிப்போர்ட்டு, போலீஸு ரிப்போர்ட்டுன்னு தாலி அறுத்துடுவாங்க. பி.எம் முடிச்சு ரிப்போர்ட் முடிச்சு, டாக்டர் கையெழுத்து போட்டு முடிக்கறதுக்குள்ளே தாவு தீர்ந்துடும். நான் தப்பிச்சேன், நீதான் மாட்டிக்கிட்ட தலைவா. நான் கௌம்பறேன்.”

சாப்பாட்டுப் பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினான் பழனி. தலையோடு காலாக வாசனை திரவியம் அடித்துக்கொண்டான்.”வாத்தி கமிங்… வாத்தி கமிங்...” கையைச் சொடக்கு போட்டு பாடினான்.

“கொஞ்சம் இருப்பா... கூடமாட ஒத்தாசையா இருக்காம கௌம்பினா எப்படி? சீனியருக்கு இதைக்கூடப் பண்ணமாட்டியா?”

எதையுமே பொருட்படுத்தவில்லை பழனி. தலைமுடியைச் சிலுப்பிச் சிலுப்பிச் சீவிக் கலைத்துவிட்டுக்கொண்டான்.

“கவர்மெண்ட் வேலைல மாங்கு மாங்குன்னு உழைச்சாலும் கிரீடம் சூட்ட மாட்டாங்க. டூட்டி நேரம் முடிஞ்சுதா கௌம்பினோமா… குடும்பத்தோட இருந்தோமான்னு இருக்கணும். உங்களை மாதிரி மார்ச்சுவரிலேயே குடியிருக்க முடியாது தலைவா. மச்சினன் ரிசப்ஷன் அடுத்த வாரம். பர்ச்சேஸ் போகணும். வீட்டுல சொல்லி அனுப்பினா, நேரத்துல வந்துசேருன்னு. எந்த விஷேசத்துக்கும் போகமுடியறதில்லே. உறவு ஜனத்தைப் பார்க்க முடியறதில்லே. பர்ச்சேஸுக்கும் போகலேன்னா வீட்ல மருவாதியே இல்லாமப் போயிடும் தலைவா.”

“எத்தனை பி.எம் இன்னிக்கு?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“சின்னப் பொண்ணு மட்டும்தான். ஒத்தாசைக்கு ரவுசு இருக்கான். கூடமாட சங்கரம்மாவும் இருக்கு.” - சட்டென்று கிளம்பினான் பழனி.

நீளமான வராந்தா, எமர்ஜென்ஸி வார்டு எல்லாம் தாண்டி பிணக்கூறு அறைக்கு வந்தார் மாயாண்டி. சீனியர் அவர். தொழிற்சங்கத் தலைவர். ஆனாலும் டூட்டி செய்தாக வேண்டுமே… இந்த வயதிலும் காலம் நேரம், விடுப்பு நாள் என்று கணக்குப் பார்க்காமல் பணியைச் செய்யக்கூடியவர்.

பழனி, தூய்மைப் பணியாளர்களில் ஜூனியர். கழிவறை சுத்தம் செய்தல், ஜெனரல் வார்டில் வாந்தி, மலம், மூத்திரம் கழுவுதல், சாக்கடை அள்ளுதல், ஆதரவற்ற சடலங்களை அப்புறப்படுத்துவது, மார்ச்சுவரியில் கூடமாட உதவுவது, சடலம் அறுக்கும்போது கூட இருப்பது, அறுக்கப்பட்ட சடலத்தை ஒன்றாக்கி முறிந்த எலும்புகளை நேராக்கித் தருவது… பிணவறைக் கிடங்கில் உதவியாளர். 

இங்கே சில மாசம் டூட்டி. அப்புறம், மனசு பேதலித்து விடக்கூடாது என்பதற்காக, ஜெனரல் வார்டில் ஆறு மாதம் என்று மாற்றி மாற்றிப் பணி. ஒரேயடியாகப் பிணவறைக் கிடங்கில் பிணம் அறுத்துக்கொண்டே இருந்தால் பைத்தியம் பிடித்துத் துணியைக் கிழித்துக்கொண்டு ஓடவேண்டியிருக்கும்.

இப்படிச் சகல படிநிலையும் கடந்துதான் மாயாண்டி இப்போது மார்ச்சுவரி வேலையில் சீனியராக இருக்கிறார்.

“வேண்டும் வேண்டும்… நீதி வேண்டும்…”
“காவல் துறையே… குற்றவாளியைக் கைது செய்!”
 
கோஷங்கள் கேட்டன. உறவு ஜனங்களின் துக்க ஓலம் கேட்டது. மருத்துவமனை டீன், தொலைக்காட்சி நிருபர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

“இனிமேல்தான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்போறோம். ஆர்டிஓ வந்து சேரவில்லை. ரிப்போர்ட் கையில் கிடைத்ததும் உங்களுக்குத் தகவல் தருகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இறந்த சிறுமியின் பெற்றோர் வலி எங்களுக்குப் புரிகிறது. எங்கள் வேலையைச் செய்துமுடிக்க ஒத்துழைப்பு கொடுங்கள். எல்லோரும் மாஸ்க் போடுங்க… தள்ளித் தள்ளி நில்லுங்கள் ப்ளீஸ்!”

அவர் சொன்னதைக் கேட்டுக் கொதித்தது கூட்டம்.

“எட்டு வயசுப் பொண்ணை ரேப் பண்ணின கும்பலுக்குச் சொல்லுங்க அட்வைஸ். சோஷியல் டிஸ்டன்ஸிங் அவங்க பண்ணியிருந்தா இது நடந்துருக்குமா? கவர்மென்ட் கைக்கூலியாப் பேசாதீங்க டாக்டர்.”

மறுகுரலில் கத்தினார்கள். எல்லாருமே கொரோனா மாஸ்க் மூக்குக்கும் வாய்க்கும் இல்லாமல் தாடைக்குத் தாரை வார்த்திருந்தார்கள். தாடைக்கு ஜட்டி போட்டது மாதிரி இருந்தது.

டீன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிய துறைத் தலைவர், தலைமை மருத்துவரிடம் விரைந்து முடிக்கச் சொல்ல, தலைமை மருத்துவர் டியூட்டி டாக்டரிடம் சொல்ல, இப்படியாக அரசு எந்திரத்தின் பதவி அடுக்குகள் வழியாக உத்தரவுகள் கடைப்பிடிக்கப்பட்டு, மாயாண்டியிடம் டாக்டர் சரஸ்வதி சொன்னார்.

“ஆரம்பிங்க மாயாண்டி. நான் போய் ரெண்டு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிட்டு வந்துடறேன்.”

டாக்டரம்மாவுக்கு நேற்றுதான் வளைகாப்பு முடிந்திருந்தது. முகத்தில் தாய்மையின் பளபளப்பும் விகசிப்பும். இரண்டு கைகளிலும் குலுங்கக் குலுங்கக் கண்ணாடி வளையல்கள். மேடிட்ட வயிறோடு பிணக் கூராய்வு அறைக்குள் வந்து, மாயாண்டியிடம் சொன்னார் மருத்துவர் சரஸ்வதி.

மாயாண்டி சரி என்பதாகத் தலையாட்டிவிட்டு, சுவரோரமாக ஈ மொய்த்துக்கிடந்த சடலத்தைப் பார்த்தார். தலையெங்கும் ரத்தம் ஒழுகியிருந்தது.

ரவுசு, “நகரு நகரு…” என்றபடி உள்ளே வர, சங்கரம்மா புகையிலையைக் கிள்ளி வாயில் அதக்கிக்கொண்டாள்.”வாரவுக… பெரிய கலெக்டரு வர்றாரு, நகரணுமாம்.”

புகையிலை வாசமும் அம்மா மாதிரி பாசமும் சேர்ந்து, அவர்களுக்குள் ஒரு நெகிழ்ச்சி கிண்டல் இழையோடியது.

“ஆமா, நீ பெரிய மினிஸ்டரு…. ஆடி அசைஞ்சு நிதானமா வர்றதைப் பாரு” - சங்கரம்மாவைத் தோளில் இடித்தான்.

“எம் புள்ள வயசு உனக்கு. உன்னைப் பார்க்கறப்பவெல்லாம் அவன் நெனைப்புத்தான் வருது. ஓடிப்போயி பத்து வருஷமாச்சு. எங்க இருக்கானோ தெரியல...” கண்ணீர் கசிந்தது சங்கரம்மாவுக்கு.

“நாளைக்கு எனக்குப் பொறந்த நாளு. பாயசம் வச்சுக் கொண்டு வரணும்” என்ற ரவுசு, பச்சக்கென்று அவளின் கையைப் பிடித்து முத்தமிட்டான்.

மாயாண்டி குனிந்து சிறுமியை தூக்க, தொடை இடுக்கிலிருந்து வழிந்த ரத்தம், தரையில் தோய்ந்திருந்தது.

“இருந்தா பேத்தி வயசு இருக்கும் இதுக்கு. எம்மா சின்னப் புள்ள இது. இப்படிப் பண்ணின பன்னாடைங்க பேதில போவ. ஏன் பேதில போவணும்? காரு, பஸ்ஸு, லாரி அடிச்சு சாவணும்.”

“சுத்தியல் குடு சங்கரம்மா. ரவுசு இங்க வா, கூடமாட நில்லு.”

முன்நெற்றி மண்டையைச் சுத்தியலால் அடித்துத் தட்டினார் மாயாண்டி. ராடு வைத்து அடித்ததில் சட்டென உடைந்தது முன்நெற்றி.

சிறுமியின் சடலம்தானே அது? மல்யுத்த வீரனின் சடலம் இல்லையே, இரும்பு மாதிரி இறுகி இருப்பதற்கு?

சின்ன உடம்பு, இரண்டு தொடைப் பகுதியிலும் இடுப்பு எலும்பு முறிந்திருந்தது. அந்த அளவுக்கு இரண்டு கால்களையும் இழுத்து விரித்து வன்புணர்வு செய்ததில், கால் எலும்புகள் முறிந்து திசைக்கொன்றாகத் திரும்பியிருந்தன. கண்கள் கூரான கம்பியால் சிதைக்கப்பட்டிருந்தன. உடம்பு முழுக்கக் காயங்கள். நகக் கீறல்கள். அத்தனை பேரும் உதடுகளையும் கன்னத்தையும் கடித்துக் குதறியிருந்ததில், உதடுகள் கிழிந்து பெரிதாக வீங்கியிருந்தன.

கழுத்திலிருந்து வயிறு வரை ஒரே நேர்க்கோடாகக் கிழித்துவிட்டார் மாயாண்டி. கால்கள் விரிந்திருக்கக் கிழிந்திருந்த யோனி அவரைப் பதைபதைக்க வைத்தது. கை கால் நடுங்க வைத்தது. கையிலிருந்து சுத்தியலும் ஆக்ஸா பிளேடும் நழுவிக் கீழே விழுந்தன. சட்டென்று கண்ணீர் முட்டியது.

“அடப்பாவிங்களா… நல்லாயிருப்பானுங்களா தேவடியாப் பசங்க. இது கொழந்தை ரவுசு… பச்சப்புள்ள சங்கரம்மா… இன்னும் பால்வாசம்கூடப் போயிருக்காது. இதோட ஓட்டைல என்னத்தடா சொகம் கண்டீங்க? எட்டு வயசுக் குழந்தை எத்தனை வலி அனுபவிச்சிருக்கும்? ஐயோ… ஐயோ…”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

தினம் தினம் சடலங்களைப் பார்க்கும் மாயாண்டிக்கே இந்தச் சடலம் வலி தந்தது.

“என்ன தலைவா, கண்ணால தண்ணி உடறே? சினிமா சென்டிமென்டு சீனு மாதிரி.”

“எட்டு வயசுக் குழந்தை ரவுசு….. எம் பொண்ணு நெனைப்பாயிருச்சு.”

“பொட்டையாப் பொறந்தாலே இப்பிடிச் சீரழிவுதான். இந்த அழகுல ரவுசுக்கு ஆசை பொட்டச்சியா மாறணுமுட்டு. பொட்டச்சியா மாறி லோல்படணுமா ரவுசு? இப்படியே இருந்துரு.”

சங்கரம்மா கையில் கோணி ஊசியில் தடிமனான நூல் கோத்துக்கொண்டே வருத்தப்பட்டாள்.

“சரி தலைவா, சோலிய முடிச்சு பாடிய குடுக்கணும். ஊரு சனம் மொத்தமும் காத்துக் கெடக்கு.” - ரவுசு ஒரு டம்ளரில் தண்ணீர் தந்தான்.

பிணக் கூராய்வு அறையை மொய்த்திருந்த ஈக்களுக்கு மாயாண்டியின் வருத்தம் புரிந்தது. காத்திருந்த மற்ற சடலங்களுக்கும் மாயாண்டியின் வருத்தம் புரிந்தது. அறையில் சூழ்ந்திருந்த குடலைப் புரட்டும் நாற்றத்துக்கும் மாயாண்டியின் வருத்தம் புரிந்தது.

டாக்டர் சரஸ்வதி அறைக்குள் வந்தார். வெள்ளை மேலுடைக்கு மேல் கொரோனா தடுப்பு உடை, மேடிட்ட வயிறு, மெதுவாக நடந்து வந்தார்.

“நீங்க ரூம்ல இருங்க டாக்டரம்மா. பி.எம். முடிச்சுட்டு சொல்றேன்.” பதறினார் மாயாண்டி.

“டாக்டரம்மா, நேத்துதான் வளைகாப்பு முடிஞ்சிருக்கு. இன்னிக்குப் பொணம் அறுக்கறதைப் பார்க்கணுமா?” - சங்கரம்மாவும் பதறினாள்.

“மாயாண்டி, நீங்க PPE போடல. மாஸ்க் போடல. முன் ஜாக்கிரதையா இல்லாம டூட்டி பண்றீங்க. கொரோனா நேரம். ஜாக்கிரதை. ஷூ போடாம செருப்பு வேற போட்டுருக்கீங்க.”

மருத்துவருக்கே உரிய எச்சரிக்கை உணர்வில் சொன்னார் டாக்டர் சரஸ்வதி.

“PPE போட்டா சுளுவாப் பொணம் அறுக்க முடியல டாக்டரம்மா… மாஸ்க் போட்டா வேலை பண்றப்ப மூச்சு முட்டுது. ஷூ போட்டா, சடலத்துப் புழு ஷூக்குள்ளே போயிடுது. எலும்புத் துண்டு ஷூக்குள் விழுந்துடுது. செருப்புதான் வசதி டாக்டரம்மா. நாம பாட்டுக்கு உதறித் தள்ளலாம்.”

கை பாட்டுக்கு வேலை செய்ய, உண்மை நிலவரத்தைச் சொன்னார் மாயாண்டி.

***

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அதைத் தோளில் தூக்கிக்கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில், வேதாளம் கேட்டது.
 
“மன்னா, இரவு பகலாக இவ்வாறு காட்டிலும் மேட்டிலும் நடுநிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. நீ தேடும் பொருள் உனக்குக் கிட்ட என் கேள்விக்குப் பதில் சொல்… வன்புணர்வு செய்யப்படும் பெண்ணுக்குத்தான் அத்தனை அவமானம், உடல்நலிவு, மன உளைச்சல், உயிரிழப்பு என்றிருக்கிறது. வன்புணர்வு செய்யும் ஆணுக்கு போதுமான தண்டனைகள் இன்னும் இல்லை என்பது நிஜம்தானா?" 

“எல்லோரும் அறிந்த அந்த ரகசியத்தை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா? பச்சைக் குழந்தைகூட இதற்குப் பதில் சொல்லுமே” என்றான்.

விக்கிரமாதித்தனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்துசென்று, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

- தொடரும்