அத்தியாயம் 1

5.24k படித்தவர்கள்
2 கருத்துகள்

ஊருக்குள் ஒரு புரட்சி
1

அடியில் துடித்துக் கொண்டிருக்கும் பல்லி, பாச்சான்களை, அடிவயிற்றுக்குக் கீழே மறைத்துக் கொண்டு, அசையாமல் கிடக்கும் மலைப் பாம்பு போல, நேற்றுவரைக் காட்சியளித்த சட்டாம்பட்டி, அன்று மட்டும், மொட்டைப் பனைபோல் முடியுதிர்ந்த தலையை 'விக்காலும்', முதுமைச் சுருக்கங்களைப் பவுடர் வகையறாக்களாலும், சாகச லீலைத் தடயங்களை, ஆடை ஆபரணங்களாலும், மறைத்துக் கொள்ளும் வயதான 'இளம் பெண்ணைப் போல' விழாக் கோலத்தில் மின்னியது.


அங்கே கோயிலுக்கருகே போடப்பட்டிருந்த மேடைக்கு சற்றுத் தொலைவில் இரண்டு கம்பங்களில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில், 'விவசாயி... விவசாயி' என்று அந்தக் கிராமத்தைக் கூப்பிடுவது போலவும், அந்தக் கிராமமே குரலிடுவது போலவும் பாட்டு ஒலித்தது.


அங்கே 'சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்ட விழா' நடக்கப் போவதே, கிராமத்தின் இந்த 'மேக்கப்பிற்குக்' காரணம்.


அனைவரும் அமைச்சரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்கள். அமைச்சர்களிடமிருந்து கறவை மாடுகள், விவசாயக் கருவிகள், நெற்குதிர்கள் போன்றவற்றை வாங்கிக் கொள்வதற்காக, சில சிறு விவசாயிகள் விழா மேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த பெஞ்சில் முண்டாசுத் தலைகளாக 'ஜோடித்து' வைக்கப்பட்டிருந்தார்கள். 'லயன்ஸ் கிளப்' கொடுக்கும் இலவச ஆடைகளை வாங்கிக் கொள்வதற்காக பத்துப் பதினைந்து அரிஜனப் பையன்கள், அந்தப் பெஞ்சிற்கு முன்னால் உட்கார, அந்தப் பிள்ளைகளைப் பெற்றவர்கள், சற்று தொலைதூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.


இந்த அரிஜனங்கள் ஒதுங்கியிருந்த இடத்துக்கு அருகேயே, உள்ளூர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக, அரசாங்கத்தின் உதவியோடும், பாங்குகளின் கடனோடும் அரியானாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் ஜெர்ஸி இனப் பசுமாடுகள், கன்றுகளுடன் கட்டப்பட்டிருந்தன.


அவற்றிற்கு அருகே, சில இளைஞர்கள் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஓராண்டுக்கு முன்பு, அங்கே துவக்கப்பட்ட கிராம இளைஞர் நற்பணிமன்றத்தின் நிர்வாகிகள் அவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரி இளைஞர்கள். ஒரே ஒருவன் மட்டும் எட்டாவது வகுப்பு வரை இவர்களோடு படித்து, எல்லா பாடங்களிலும் 'பஸ்டில்' வந்து பணத்தில் 'லாஸ்டாக' வந்ததால், மேற்கொண்டு படிக்க முடியாமல் போன ஆண்டியப்பன்.


அவன் படிக்காதவன் என்பதை, அந்தக் கூட்டத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அவ்வளவு கட்டுமஸ்தான உடல். கபடமில்லாத கண்கள். எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவற்றைத் தனக்குள்ளேயே ஆராய்ச்சி செய்து கொள்ளும் தனித் தோரணை. இளைஞர் மன்ற நிர்வாகத்தின் தலைவனும் பட்டதாரியும், பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்தின் எதிரியுமான ஒரு பண்ணையாரின் மகன் குமார். இன்னொரு பண்ணையாரின் மகனும், மன்றத்தின் பொதுச் செயலாளருமான, மாணிக்கம் பி.ஏ., பி.டி. விழாவில் பேசப் போகிற மன்றத் தலைவன் குமாருக்கு, உபதேசம் செய்து கொண்டிருந்தான்.


"இந்தா பாருடா... இளைஞர்கள் சார்பில், உன்னைப் பேசவிடாவிட்டால் கறுப்புக் கொடி பிடிக்கப் போறதாய் வாதாடி, உன் பேரை போஸ்டர்ல போட முடியாவிட்டாலும் நிகழ்ச்சி நிரலுல போட வச்சுட்டோம். ஊர்ல நடக்கிற அட்டூழியங்களை, அமைச்சர் முன்னாலே அம்பலப்படுத்த வேண்டியது உன்னோட பொறுப்பு."


"போஸ்டர்ல பேரு போடாதபோது எப்படிப் பேசலாமுன்னு யோசிக்கேன்."


"எவண்டா இவன்? போஸ்டர்ல 'மற்றும் பலர்'னு ஒரு வாசகம் இருக்கது எதுக்காக? உனக்காகத்தான்... இப்போ அது பிரச்சினை இல்ல. நம் ஊர்ல நடக்குற அக்கிரமத்த நீ பிச்சிப் பிச்சி வைக்கணும். பின்னிப் பின்னி எடுத்துடணும். அரசாங்கம் சிறு விவசாயிகளுக்கு நாலுல ஒரு பங்கு உதவித் தொகையும், மிகச் சிறு விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு உதவித் தொகையும் கொடுத்து, கறவை மாடுகள், தழைமிதிக் கருவிகள் முதலிய முக்கியமானதை, பாங்க் கடன்கள் மூலம் வாங்கிக் கொடுக்கிற திட்டந்தான் சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம். ஆனால் நடந்தது என்ன?"

"பண்ணையார்கள், இவங்க பேர்ல மாடுகளை வாங்கி தாங்களே வச்சிக்கிடுறாங்க. பினாமி நிலங்களை வச்சிருக்கிற இவங்க, வேலைக்காரர்களையும் பினாமி விவசாயிகளாக்கி, அவங்க பேர்லயும் வாங்கிக்கிறாங்க. அப்புறம் கூட்டுறவு சங்கத்துல, குறிப்பிட்ட ஒரு பங்காளிக் கூட்டந்தான் சேர்ந்திருக்கே தவிர, மற்றவங்கள சேர்க்கல. சேர்க்கவும் முடியல. கூட்டுறவுத் தலைவர் 'கமிஷன்' வாங்குறார். கர்ணம் புறம்போக்கு நிலத்தை மடக்கிப் போட்டிருக்கார். இங்க இருக்கிற இந்தத் தனியார் பள்ளிக்கூடத்துக்கு, பிள்ளைகளுக்காகப் பால் பவுடர், டின் டின்னா வருது. இது பிள்ளிங்களுக்கே தெரியாது. பால் டின்னைக் கொண்டு மானேஜர் மகளும், மருமகளும், கிணற்றுக்குத் தண்ணி எடுக்க வரும்போதுதான், இந்த சமாச்சாரமே வெளில தெரியுது. அதோட, இந்த மானேஜர் பால் பவுடர் விற்கிறதோட, வாத்தியாருங்க சம்பளத்துலயும் 'கிம்பளம்' எடுத்துக்கிட்டு, பொம்புள பொறுக்கியா அலையுறான். இவன் மச்சான் போஸ்ட்டு மாஸ்டர். வேண்டாதவங்களுக்கு வருகிற லட்டர கிழிச்சிப் போட்டுடுறான். எனக்கு வந்த இன்டர்வியூ கார்டை, அவன் தராததை, நீ சுட்டிக்காட்டி 'நம் கிராமத்திலேயே அறிவாளியும் ஆற்றல்மிக்கவனுமான மாணிக்கம் பி.ஏ., பி.டி.க்கே, இந்த கதியென்றால், யாருக்கு வராது'ன்னு சொல்லு. புரியுதா... அப்புறம் மாதர் சங்கத்துக்குக் கொடுத்த தையல் மிஷின்கள் பஞ்சாயத்துத் தலைவர் வீட்லயும், முன்சீப் வீட்லயும் கிடக்குது. ஒரு மிஷின், தலைவரோட மகளுக்கு, சீதனமாப் போயிட்டுதாம். புரியுதா...?"


இப்போது, மன்றத்தின் துணைத் தலைவரும் என்ஜினீயரிங் படிப்பில் டிப்ளமா படித்தவனுமான கோபால் தன் பங்குக்குப் பேசினான்:


"அப்புறம்... பஞ்சாயத்துத் தலைவர், 'செக்' போட்டு யூனியனில் பணம் வாங்குறார். ரோட்ல மண்ண அள்ளிப் போட்டுட்டு, பாலங் கட்டுனதா ரிக்கார்ட் பண்ணுதார். நீ எதைச் சொல்ல மறந்தாலும், ஒண்ணே ஒண்ணை மட்டும் சொல்ல மறந்துடாத... அதாவது, சர்க்காருடைய சலுகைகளை, அயோக்கியங்கதான் பயன்படுத்திக்கிறாங்க. சேர வேண்டியவங்களுக்குச் சேரல... சேரவே இல்லை. இதை நீ சொல்லாம விட்டால், நான் ஒன்னை உதைக்காமல் விடமாட்டேன்!"


அந்தச் சமயத்தில் அங்கே வந்தார் மாசானம். காண்டிராக்ட் எடுத்து புதுப் பணக்காரராய் ஆனவர். பழைய பணக்காரர்கள், தன்னை புது மனிதனாக அங்கீகரிக்காமல், பழைய கருவாட்டு வியாபாரியாகவே தன்னை இன்னும் நினைப்பது கண்டு, எரிச்சல் கொண்டவர். காண்டிராக்ட் வித்தையைக் காட்டிப் பேசினார்:


"நீங்க சும்மா இருங்கப்பா... நம்ம குமார் வெளுத்து வாங்கப் போறான். இன்னையோட இந்த ஊரப் பிடிச்ச சனி விலகப் போவுது. குமார்... பாயிண்ட் பாயிண்டாய் எழுதி வச்சுக்க, எங்க கல்லப் போடணும், எங்க மண்ணப் போடணும், யார் தலையில எதப் போடணுமுன்னு நல்லா குறிச்சு வச்சுக்க!"


கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் எப்போதாவது ஆறுதல் பரிசு பெறும் குமார், அவர்களைப் பார்த்து, "நான் பேசினதுக்கு அப்புறம் பஞ்சாயத்துத் தலைவர் தூக்குப் போட்டுச் சாகணும்! மாதர் சங்கத் தலைவி, வீட்டுக்கு வெளிலேயே வரமாட்டாள் - வேணுமுன்னாப் பாருங்க" என்றான்.


அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ, விழா மேடையில், விவசாயக் கருவிகளையும், தையல் மிஷின்களையும், கிராமநல ஊழியர்களின் உதவியோடு, ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், அவர்களையே பார்த்தார். "மாசானம் அடே கருவாட்டு யாபாரி! ஒன்னோட வேலையா! நீ தூண்டி விடுறியா! பார்க்கலாமாடா... பாத்துப்புடலாம்" என்றாலும், தலைவருக்கு உள்ளூர நடுக்கந்தான்.


இவர் மட்டும், அந்த இளைஞர் கூட்டத்தைப் பார்க்கவில்லை. மாதர் சங்கத் தலைவி சரோஜாவின் மகள் மல்லிகா, அங்கே நின்ற மாணிக்கம் பி.ஏ., பி.டி.யையே பார்த்துக் கொண்டே நின்றாள். சீ என் ஏக்கம் இவருக்கு ஏன் புரிய மாட்டக்கு. அந்தத் தடிப்பயல்களும் அவரை விடமாட்டக்காங்க. எப்படிக் கையை ஆட்டி ஆட்டிப் பேசுறார்! என்கிட்ட இப்படிப் பேசினால் என்னவாம்...

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


மல்லிகா மட்டுமா பார்த்தாள்? இல்லை - விவசாயக் கூலிப் பெண்ணான தங்கம்மா, தன் 'அய்யா கூடப் பிறந்த அத்தை மகனான ஆண்டியப்பனை' அப்படியே பார்த்தாள். 'ஒரு தடவையாவது என்னைப் பார்க்குறாரா... பவுசு... பசுமாட்டை, மந்திரி கையால வாங்கப் போற பவுரு... வரட்டும். அய்யாவைப் பாக்குறச் சாக்குல, என்னப் பாக்க வராமலா போவாரு. அப்போ நானும் பார்க்காமலும் பேசாமலும் இருக்கேன்...'


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, 'டூட்டியில்' இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பனும், பஞ்சாயத்துத் தலைவரையே பார்த்தார். இந்தத் தலைவர் ஸ்டேஷனுக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்த அப்பாவி ஏழைபாளைகளை விடச் சொல்லும்போது, இவரும் 'பிழைச்சிப் போவட்டுமே. ஏழை ஜனங்கள்' என்று நினைத்து விட்டிருக்கிறார்.


ஆனால் இப்படி உதவியதே தப்பாப் போயிற்று. ஒரு தடவை, ஒன்றும் அறியாத ஒரு ஏழையை, குடித்ததாய் வழக்குப் போடும்படி சொன்னபோது, அவரை 'கெட் அவுட்' என்று சொல்லிவிட்டார். பஞ்சாயத்து பரமசிவமோ ஒன்ன மாத்தாட்டால், என் பேரு மாறிப் போயிடும்' என்று சவாலிட்டார். உடனே இதை சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சொன்னால், அவரோ, 'எந்த இந்திரன் பதவிக்கு வந்தாலும், இந்த ஏரியாவுக்கு இந்திரன் இந்தப் பரமசிவம். பார்த்து நடந்துக்கையா' என்று சொல்லிவிட்டார். தங்கப்பன், இப்போது நிஜமாகவே பயந்துவிட்டார். அமைச்சரிடம் சொல்லி, ஆசாமி, தண்ணி இல்லாத காட்டுக்கு' மாற்றிடுவானோ? - எதுக்கும் ஒரு சல்யூட் அடிக்கலாம்.


இந்த அமர்க்களம் பத்தாது என்பது போல், சேரியில் இருந்து சின்னான், தலைவிரி கோலமாக ஓடி வந்தான். பட்டதாரி வாலிபன். 'டவுனில்' சர்க்கார் உத்தியோகம். இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளைத் தாண்டிக் கொண்டே, விழா மேடைக்கருகே வந்து, அங்கே உட்கார்ந்திருந்த ஹரிஜன சிறுவர், சிறுமிகளைக் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, 'வாங்கல, நமக்குத் துணிமணிகள் கொடுக்கிறவங்க, சேரில வந்து கொடுக்கட்டும்' என்று சொல்லி அவர்களை விரட்டிப் பிடித்து இழுத்துக் கொண்டே போனான்.


சின்னான், சேரிப்பயல்களோடும் சிறுமிகளோடும், 'அடுத்த மாசச் சம்பளத்துல ஒங்களுக்கு டவுசராம், பாவாடையாம்' என்று தாஜா செய்து கொண்டே, இளைஞர் மன்ற நிர்வாகிகளைக் கடந்தபோது, சின்னானின் கல்லூரித் தோழன் மாணிக்கம், மல்லிகாவை 'இம்ப்ரஸ்' செய்ய நினைத்தவன் போல், "என்ன சின்னான் ஊர்ப் பிரச்சினைகளை தீர்க்கிறதில், எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டிய நீயே இப்படிப் பண்ணலாமா?" என்றான்.


சின்னான் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு வார்த்தைகளை ஏற்றி இறக்கிப் பேசினான்.


"அன்னக்கிளி சினிமாவுல ஒரு காட்சி இப்போ ஞாபகம் வருது. கல்யாணமான காதலனும், அன்னக்கிளியும், மனம் உருகப் பேசிக்கிட்டு இருக்காங்க... இரண்டு பேரும் அழுகிறாங்க. ரசிகர்களும் அழுகிறாங்க. அதே சமயம் அன்னக்கிளி போட்ட நெருப்புல மீனுங்க துள்ளி விழுந்து சாகுது. துடியாய் துடிக்குது. இதை யாருமே பார்க்கல. பார்க்க விரும்பல. இது மாதிரிதான் உங்க பிரச்சினை அன்னக்கிளி பிரச்சினை."


"ஆனால் சேரி ஜனங்களோட பிரச்சினை, அந்த நெருப்புல துள்ளி விழுந்து துடிக்கிற மீன்களை மாதுரியான பிரச்சினை!"


மாணிக்கம் இடைமறித்தான்.


"நீ எங்கள தப்பா நினைக்கிற சின்னான். ஒன்னை நாங்க எப்போதாவது ஹரிஜனாய் நினைச்சுப் பழகுறோமா? ஒன் வீட்ல கூட ஒரு தடவை - காபி சாப்பிட்டிருக்கேன்" என்றான்.


சின்னான், தன் தோளில் கிடந்த மாணிக்கத்தின் கையை, கீழே எடுத்துப் போட்டுக் கொண்டே, "ஹரிஜனாய் இருந்தாலும், அப்படி நினைத்துப் பழகக்கூடாதுன்னு படித்தவர்களுக்கு ஒரு எண்ணம் வருது பாருங்க... அதுதான், பழைய காலத்து ஆட்கள் எங்கள ஜாதிப் பேரச் சொல்லி கூப்புடுறதை விட மோசமான சங்கதி. நாம சமத்துவமாய் பழகுறோம் என்கிறதுல பெருமை தேடுற அகம்பாவ உணர்வின் பூர்த்தி. என் வீட்ல காபி சாப்பிட்டதே ஒரு நியூஸா இருக்குது பாருங்க. என்னைப் பார்த்ததும் ஹரிஜன் என்கிற ஒரு எண்ணம் வருது பாருங்க. இந்த இரண்டும் இருக்குற வரைக்கும், நீங்களும் உருப்படப் போறதில்ல. நாங்களும் உருப்படப் போறதில்லை. சரி. நான் வாரேன்."


சின்னான் போய்விட்டான். எல்லோரும் வெளிப்படையாக, அவன் ஜாதியைப் பேசி, திட்டிக்கொண்டிருந்த போது, ஆண்டியப்பன் மட்டும், சின்னான் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். எட்டாவது வகுப்பு படிப்பது வரைக்கும், தன்னோடு உடலுரச உட்கார்ந்து, காதுரசப் பேசி, கையுரச நடந்த இந்த சின்னான், இப்போது தன்னைப் பார்த்து, இருக்கியா செத்தியா என்று கூடக் கேட்காமல் போறதற்காக, மனத்திற்குள் மருகினான்.


'இப்படியே விட்டால் தப்பு' என்று எண்ணி, அங்கே பஞ்சாயத்து பரமசிவம் வந்து, "ஏண்டா குமார்... நீ செய்யுறது நியாயமாடா... இந்தக் கிழவனே எல்லாத்தையும் கவனிச்சிக்கிடட்டுமுன்னு இங்க நின்னா எப்டிடா... வாடா. ஏல ஆண்டி, ஒனக்கும் தனியா வெத்தல பாக்கு வச்சி அழைக்கணுமாக்கும்... போய் பெஞ்சில உட்காருல. மந்திரி தார மாட்ட வாங்குல" என்றார்.


குமாரும், ஆண்டியப்பனும், பஞ்சாயத்துத் தலைவருடன் மேடையை நோக்கிப் போனார்கள். தலைவர் வந்தபோது, 'கழட்டிக்' கொண்ட புதுப் பணக்கார மாசானம் அப்போது காது கேட்கும் தூரத்திற்கு தன்னை கடத்திக் கொண்டவர், இப்போது மீண்டும் அங்கே வந்து இளைஞர்களின் காதுகளுக்குள் கிசுகிசுத்தார்.


"இந்தப் பரமசிவம், பண்ணுத பாத்தியளா... மனுஷன் குமார எப்படி குளிப்பாட்டுதான் பாத்தியளா... இவன் நனைஞ்சுட மாட்டானே?"


இதற்குள், அமளிகளும் கிசுகிசுப் பேச்சுகளும் அடங்கின. வாணவேடிக்கைகள் வெடித்தன. மேளங்கள் முழங்கின. அமைச்சர் வந்து மேடையில் அமர்ந்தார். குமார், அவர் பக்கத்தில் உட்கார்ந்தான். கல்லூரிக் காலத்தில் அறிமுகமான அந்த அமைச்சரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இதுவரை, அவன் இருப்பதையே ஒரு பொருட்டாகக் கருதாத மாவட்ட அதிகாரிகள் இப்போது குமாரை 'சீரியஸாக' எடுத்துக் கொண்டார்கள்.


'நீராருங் கடலுடுத்த' பாட்டை, ஒருத்தி கட்டை குரலில் பாடினாள். அதே பாட்டை, அந்தப் பள்ளியின் சங்கீத ஆசிரியை மங்களத்தைப் பாடச் சொல்லியிருந்தால், மங்களகரமாகப் பாடி இருப்பாள். அந்த ஏழை ஆசிரியைக்குப் பதிலாக, மாதர் சங்கத் தலைவியின் சித்தி மகள் பாடினாள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூட இன்புளுயன்ஸ் இல்லாத 'இன்புளுயன்ஸா' நோய்க்காரி மங்களம், பாட்டைக் கேட்டும் பாடியவளைப் பார்த்தும் கொஞ்சம் சங்கடப்பட்டாள்.


பாட்டு முடிந்ததும், பஞ்சாயத்துத் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் உட்பட அத்தனை பேரையும் பதவிக்கும், தகுதிக்கும் ஏற்றபடி அறிமுகப்படுத்திவிட்டு, இறுதியில் குமாரைப் பற்றிப் பேசும்போது "இந்த குமார், இந்த ஊரின் தவக்குமார்! வேலைக்குப் போகாமல், சேவைக்காக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். இவன் இல்லையானால், ஊர் ஊராக இருக்காது. வருகிற பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில், நான் நிற்கப் போவதில்லை. இவனைத்தான் நிறுத்தப் போகிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். உடனே மக்கள் கைதட்டினார்களோ, என்னவோ, மாவட்ட அதிகாரிகள் கைதட்டினார்கள். சிறிது யோசித்துவிட்டு, அமைச்சரும் கைதட்டினார். அவர், பஞ்சாயத்து பரமசிவம் தேர்தலில் நிற்க மாட்டார் என்பதற்காகவே கைதட்டினார் என்று கூட்டத்தில் ஒரு சாரார் பேசிக் கொண்டார்கள்.


குமார் பேச எழுந்தான்.


இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், காதுகளை கூர்மையாக்கி, கைகளைத் தட்டுவதற்குத் தயாராகக் காத்து இருந்தார்கள். மாசானமும், தன் நீண்ட நாள் கனவு நனவாவதைக் காண, அவரைத் தங்களின் கோஷ்டியில் சேர்க்க விரும்பாத உள்ளூர் பிரமுகர்களின் ஊழல்கள் அம்பலமாவதைக் கேட்பதைவிட, அவர்களின் முகங்கள் போகிற போக்கைப் பார்ப்பதில் அதிக அக்கறை செலுத்தினார்.

பிச்சி உதறப்போறான்! டேய், பரமசிவம்... மூணு முளக் கயிற்றை எடுத்துக்கடா!


குமார் மைக் அருகே வந்தான். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, கால்மணி நேரத்தை காலாவதியாக்கிவிட்டு, 'பொருளுக்கு' வந்தவன், அமைச்சரைப் பார்த்தான். அதிகாரிகளைப் பார்த்தான். பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தான். அத்தனையும் அன்பு முகங்கள். அவன் தேர்தலில் நிற்கவேண்டும் என்று தட்டிய கரங்கள். அவன், நன்றி இல்லாமல் பேசலாமா... கூடாது. இளைஞர் மன்ற நிர்வாகிகள் என்ன சொல்வார்கள். கிடக்கிறான்கள். சான்ஸ் கிடைத்தால், இந்தப் பயலுவளும் இப்படித்தான் பேசுவாங்க.


"அருமை அண்ணன் பரமசிவம் அவர்களின் (பரமசிவம், அவனுக்கு மாமா முறை. மேடை நாகரிகத்தைக் கருதி, அப்படிப் பேசினான்.) சேவை, இந்த கிராமத்திற்குத் தேவை. அவர்தான் பஞ்சாயத்துத் தலைவராக வர வேண்டும். (உடனே பரமசிவம் மட்டும் கைதட்டிவிட்டு, மற்றவர்கள் தட்டாமல் போனதால், சங்கடப்பட்டு நெளிந்தார்.) எனினும், அவர், யூனியன் தலைவருக்கு நிற்கும் தகுதியை எட்டியவர். அவர், அப்படி நின்றால், நான் இப்படி நிற்கத் தயார். எங்கள் கிராமத்தில் பிரச்சினைகள் சில உள்ளன. சிலவே. பிரச்சினைகள் இல்லாத ஊரேது? அவை இருந்தன - இருக்கின்றன - இருக்கும். எனினும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஆசியோடும், அருமை அண்ணன் பரமசிவத்தின் - சேவைக்காய் பிறந்த இந்தப் பரமசிவத்தின் ஒப்பில்லாத தலைமையின் கீழ், நேர்மையின் நெடிதுயர்ந்த உருவமாம் எங்கள் கர்ணத்தின் ஓய்வில்லா உழைப்போடும், மாதர்குல மாணிக்கமாம் மகளிர் மன்றத் தலைவி சரோஜா அம்மையாரின் தாய்மையான பேரன்புடனும், பிரச்சினைகள் தீர்க்கப்படும். இந்த நல்லோர்க்கு, எல்லா வகையிலான ஒத்துழைப்பும் நல்கப்படும் என்பதை, இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவன் என்ற முறையில் தெரியப்படுத்திக் கொள்கிறேன்."


நற்பணி மன்றத்தின் மிச்சமீதி நிர்வாகிகள் வாயடைத்துப் போனார்கள். கைகள் இழுத்துக் கொண்டன. நெஞ்சங்கள் கொதித்துக் கொண்டன. மன்றத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்கிறான். மன்றம் ஒப்பன் வீட்டுச் சொத்தால?... பஞ்சாயத்துத் தலைவரப் போய் பாராட்டுற? அவரு கால வேணுமின்னாலும் கழுவிக் குடி. மன்றத்த எதுக்குல இழுத்த? நீ, அவரு மகள பார்த்த பார்வையிலயே சந்தேகப்பட்டோம்! அப்படியும் உன்னைப் பேசச் சொன்ன எங்க வாயில மைக் கம்பிய வச்சே இடிக்கணும். துரோகிப் பய! வாவா... ஒன் கையக் கால ஒடிக்காட்டால் பாரு!


விழா முடிந்தது. அமைச்சர் 'ஏழை பாளைகளுக்கு' விவசாயக் கருவிகளைக் கொடுத்தார். கறவை மாடுகளைக் கொடுத்தார். ஹரிஜனங்களாக ஜோடிக்கப்பட்ட ஜாதிப் பையன்களுக்கு இலவச ஆடைகளையும் கொடுத்தார். அவர், பாவம் நம்பித்தான் கொடுத்தார்.


கூட்டம் கலைவதற்கு முன்பே, இளைஞர் மன்றத்தின் தலைவரில்லாத நிர்வாகிகள், ஊர்ப்பாலம் அருகே போனார்கள். அந்த வழியில் வரப்போகும் குமார் பயலை, உதை உதையென்று உதைத்து, ஒரு பல்லையாவது உடைக்க வேண்டும்!


கலைந்த கூட்டத்தில், இரண்டு பெண்களுக்கிடையே, தலைமுடி பிடிக்கிற அளவுக்குச் சண்டை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


மாணிக்கம் பி.ஏ., பி.டி., மீது மையல் கொண்டிருந்த, மகளிர் மன்றத் தலைவியின் மகள் மல்லிகா, அவனிடம், அன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த போது, ஆண்டியப்பன், அவனைத் தனியாகக் கூட்டிக் கொண்டு போய் அவனுக்கு இணையாகப் பேசியதில் அவளுக்கு ஆத்திரம். இன்னொரு பெண்ணிடம் வாயை விற்றுவிட்டாள்.


"இந்த ஆண்டிய பாருங்க, இவனும் இவன் வேட்டியும் சட்டயும்... படிச்சவங்களோட நின்னால் படிச்சவன் ஆயிட முடியுமா? பழகுறதுலயும் ஒரு தரம் வேண்டாம். இந்த லட்சணத்துல மாட்டை வேற கையில் பிடிச்சிக்கிட்டு இருக்காரு துரை - நாளைக்கு இதை எங்க மாமா வீட்ல கட்டப் போறது தெரியாமல். ஆமா சங்கரி, நம்ம ஆண்டி பி.ஏ. படிச்சிருக்காரா? எம்.ஏ. படிச்சிருக்காரா? உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆயிடுமா? சீச்சீ!"


பின்னால் வந்து கொண்டிருந்த, ஆண்டியப்பனின் தாய் மாமா மகள், மல்லிகாவின் முன்னால் வந்து நின்று கர்ஜித்தாள்:


"ஆமாடி! எங்க அத்த மகன் குருவிதாண்டி. உங்கள மாதுரி கோழிக்குஞ்சைப் பிடிக்கிற பருந்துல்லடி. அவரு வேட்டி கட்டுனால் என்ன, கட்டாம நின்னா என்னடி ஒனக்கு. அதனால என்னடி நஷ்டம்?"


இதுவரைக்கும் தன்னை 'அம்மா' என்று அழைக்கும் இந்த தங்கம்மா, தனக்கு 'அடி' கொடுத்ததில், நிஜமாக அடிபட்டவள் போல முதலில் அதிர்ந்து போன மல்லிகா, ஊரின் நாட்டாண்மைக்காரரின் மகளான அந்த பி.யூ.ஸிக்காரி, தன் பெண்மையை, ஆண்மையாக மாற்றியது போலப் பேசினாள்.

"யாரடி, டீ போட்டுப் பேசுற! எச்சிக்கல நாயே! ஒப்பன் எங்க மாமா வீட்டுல நாயி மாதுரி வேலை பார்க்கார். நீ வயலுல கூலிக்கு களை பிடுங்கப் போற வேலைக்கார நாயாடி, பேசுற... நான் அவனப் பேசுனால் ஒனக்கு என்னடி? மாணிக்கம் மச்சான்கிட்ட நிற்க, அவனுக்கு என்ன தகுதிடி இருக்கு?"


"முதல்ல ஒன் மாணிக்கத்துக்கு தகுதியிருக்கான்னு பாருடி! அவரு ஒத்த கைக்கு, நீ கண்ணடிக்கிறவன் பெறுவானாடி! எங்க அத்த மகன் எப்படி இருந்தால் ஒனக்கென்னடி? உன்னையாடி கட்டிக்கப் போறாரு... நீ கூப்புட்டாலும் அவரு வரமாட்டாருடி..."


இயல்பிலேயே, பெருமைக்காரியான மல்லிகாவால் தாள முடியவில்லை. தங்கம்மாவுக்கு இணையாகவும் பேச முடியவில்லை. ஆகையால், ஆளுதவியைத் தேடினாள்.


"ஏ பெரியய்யா, இங்க வாங்க. சீக்கிரமா வாங்க. இந்தக் கூலிக்கார நாயி என்ன பேச்சுப் பேசுறான்னு பாரும்!"


தங்கம்மா, சிலிர்த்தாள்.


"நாங்க கூலிக்கார நாயி மட்டுமில்லடி... ஒன்னமாதுரி அகங்காரப் பன்னிகள வேட்டையாடப் போற நாயிங்கடி. என் அத்த மகனுக்கா மாட்டை வச்சுக்கத் தகுதியில்லன்னு சொல்லுத. ஒன் பரமசிவம் மாமாகிட்ட அவரு மாட்ட கொடுத்துட்டா, நான் இந்த ஊர்ல இருக்கலடி. ஒங்க ஜம்பம் இனுமே சாயாதடி! எங்கள மனுஷங்களா நினைக்காத ஒங்கள, நாங்க மனுஷங்களா நினைக்கப் போறதில்லை!"


தங்கம்மா, வேகமாகப் போனாள். ஆவேசந் தணியாத கண்ணகி போலப் போனாள். வழியில், அந்த ஜெர்ஸி இனப் பசுமாட்டோடு, ஆண்டியப்பன் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும், அவளுக்கு ஆவேசம், அழுகையாகியது. ஏங்கி, ஏங்கி அழுதாள். அப்போதும், அவளை ஆறுதலாக அணைக்கப்போன ஆண்டியப்பனை முறைத்துக் கொண்டே சிறிது விலகி நின்றாள். பிறகு, நடந்த சண்டையை விளக்கினாள். ஆண்டி ஆறுதல் சொன்னான்:


"பேசினால் பேசிட்டுப் போறாள் - அவல் எப்போதுமே திமிர்பிடிச்சி பேசுறவதான்!"


"மாட்டை மட்டும் நீரு கொடுத்துடப்படாது."


"நீ சொல்றதுக்கு முன்னே தீர்மானம் ஆன விவகாரம். ஏழைகள் பேர்ல மாட்டை வாங்கிட்டு, எடுத்துக்கது என்ன நியாயம்? உன்னை விட்டாலும் விடுவனே தவிர மாட்ட விடமாட்டேன்!"


"பேச்ச பாரு..."


"அட சும்மா விளையாட்டுக்குச் சொன்னா இப்படியா? சரி. வேகமா நட. இந்த மாட்டக் கட்டிட்டு இந்தக் குமார் பயல ஒரு பிடி பிடிக்கணும். எத்துவாளிப் பய!"


ஆண்டியப்பன், மாட்டைப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடந்தபோது, தங்கம்மா, மாட்டை அவன் விடவில்லையானால் ஏற்படப் போகும் விளைவுகளை நினைத்து ஓரளவு கலங்கியபடி, நடந்தாள்.


-----------