அத்தியாயம் 1

11.13k படித்தவர்கள்
5 கருத்துகள்

ம்மன் கோயில் சந்தியாகால மணியோசை கணகணத்து ஓய்ந்தது. மணியோசை கேட்டதும் வடிவேலு முதலியார் சந்நிதானத்துக்குச் சென்று அம்மனைச் சேவித்துவிட்டு, ஓதுவார் மூர்த்தியிடம் விபூதிப் பிரசாதம் பெற்று நெற்றியில் பூசியவாறே வெளியே வந்தார். 

அம்மன் கோயில் மூன்று தெருக்கள் சங்கமமாகும் முச்சந்தியில் இருந்தது. சுற்று வட்டாரத் தெருக்களில் குடியிருக்கும் கைத்தறி நெசவாளர் சமூகத்தின் காவல் தெய்வமாக லோகநாயகி அம்மன் பல தலைமுறைகளாக அங்கு குடிகொண்டு நிலவி நின்றாள். கோயிலுக்கு எதிரே சந்நிதித் தெருவும், பக்கங்களில் கீழமேலத் தெருக்களும் இருந்தன. அம்மன் கோயிலின் முன் மண்டபம் நல்ல விசாலமான கல் கட்டிடம். அந்தக் கட்டிடம் பகல் வேளைகளில் வேலையற்றவர்களும் பிச்சைக்காரர்களும் ஒதுங்கிச் சடைவாறிச் சக நித்திரை செய்வதற்கும், மாலையில் பத்திரிகைகள் படிப்பதற்கும், அந்திசாய்ந்தால் ஊர்வம்பு பேசுவதற்கும், அர்த்தராத்திரியில், ‘ரெங்காட்டம்’ ஆடுவதற்கும் பயன்பட்டு வந்தது. மண்டப முகப்பில் ‘வள்ளுவர் வாசக மன்றம்’ என்று எழுதப்பட்ட, மங்கிப் பொரிந்து மக்கிப்போன போர்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஆகஸ்டு சுதந்திரம் வந்த புதிதில் அந்த வட்டாரத்து மக்களிடையே திடீரென்று ஏற்பட்ட புதிய உற்சாகத்தாலும், பிரஜா உணர்ச்சியாலும் அந்த போர்டு அங்கு இடம்பெற்றுத் தொங்க ஏதுவாயிற்று. ஆனால் இப்போதோ, ஏதோ ஒன்றிரண்டு போஷகர்களின் தயவினாலும், அந்த வட்டாரத்திலுள்ள ஒரு சில அரசியல் கட்சி அனுதாபிகளான இளைஞர்களின் உற்சாகத்தினாலும் அந்தப் போர்டு தன் மரியாதையை ஓரளவு காப்பாற்றி வந்தது. மாலை வேளைகளில் ஓரிரு தினசரிகளும், ஒரு சில வார சஞ்சிகைகளும் அங்கு வாசகர்களின் வரவு நோக்கி வழிமேல் விழி வைத்துக் கர்மயோகம் செய்யும். இட வாடகை என்ற மாதாந்திர பயங்கரம் இல்லாததாலும், இன்னும் நாலுபேர் அங்கு வந்து போய்த் தலைகாட்டிக் கொண்டிருந்ததாலும் வாசகசாலை மாலை நேரங்களில் பொது ஜன உபயோகத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதாவது, ‘அடையா நெடுங்கதவு’மான அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் வெற்றிலை பாக்குப் பல சரக்குக்கடை வைத்திருக்கும் மூப்பனாரின் புண்ணியத்தினால், மாலை ஐந்து மணி சுமாருக்கு அவரது கடைக்குள்ளிருந்து கருப்பட்டிச்சிப்பம் கட்டும் ஓலைப்பாய்கள் இரண்டும் சில பத்திரிகைகளும் மண்டபத்துக்கு இடம் பெயரும். மறுபடியும் இரவு ஏழு மணி சுமாருக்கு, மூப்பனார், கடைசாத்தும் வேளையில் மீண்டும் அவரது கடைக்குள் அடைக்கலம் புகுந்துவிடும். வாசக சாலை என்று ஒன்றிருப்பதால், நாலு பேர் தமது கடைப்பக்கம் வந்து போய்க் கொண்டு இருப்பதற்கும், அதன் காரணமாகச் சில்லறை வியாபாரம் ஆவதற்கும், மாதக் கடைசியில் செல்லாகிப் போன பழைய பத்திரிகைகளைச் சாமான் மடிக்கும் காரியத்துக்காக, சரச விலைக்கு வாங்கிக் கொள்வதற்கும் வசதியும் வாய்ப்பும் இருந்ததே மூப்பனாரின் இந்தச் சேவாபூர்வமான ஒத்துழைப்புக்கு முக்கியக் காரணமாகும். 

வடிவேலு முதலியார் சாதாரணக் கைத்தறி நெசவாளி, மாதா மாதம் ஜவுளிக் கடைக்காரர்களிடம் நூல் வாங்கி, நெய்து கொடுத்தால், நெய்த கூலி வீட்டில் தினம் உலைப்பானை ஏற்றுவதற்குக் கட்டிவரும்.  சுருங்கச் சொன்னால், அவரது வாழ்க்கை பெரு வாழ்வுக்கு ஆசைப்படாத, ஆசைப்பட முடியாத அன்றாடங் காய்ச்சி வாழ்க்கை. வடிவேலு முதலியார் 1936ஆம் வருஷத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியத் துணி ஜவுளிக்கடை மறியல் கேஸில் அகப்பட்டு, ஆறுமாதத் தண்டனைக்கு ஆளானார். அதற்கு முன்பு எந்தவித அரசியல் எண்ணமும் இல்லாது இருந்த அவர், சிறையிலிருந்து வெளிவந்ததும், பேச்சளவில் காங்கிரஸ் பக்தனாக இருந்து வந்தார். எனினும் ஆகஸ்டுச் சுதந்திரம் வந்த பிறகு அவரும் அரசியல் தியாகி என்ற பெயரால், ஐந்து ஏக்கர் நிலத்துக்கு ஒரு மனுப் போட்டு வைத்தார், வடிவேலு முதலியாருக்குக் காங்கிரஸ் கமிட்டியினரிடத்தில் செல்வாக்குக்கோ சிபார்சுக்கோ வழியில்லாது போன காரணத்தாலும், ஆகஸ்டுத் தியாகம் என்ற தனிப் பெருந் தியாகத்தை அவர் செய்யாததாலும் அவருக்கு ஐந்து ஏக்கர் நிலமான்யம் பிஞ்சிலேயே வெம்பி விழுந்த ஆசைக் கனவாகிவிட்டது. அதிலிருந்து அவருக்கு காங்கிரசின் மீதிருந்த பக்தி விஸ்வாசம் பிடிதரம் அற்றுக் கழன்று விழ ஆரம்பித்தது. மேலும் - சுதந்திரம் வந்து விட்டது; சுபிட்சம் மலர்ந்துவிட்டது என்று எண்ணி ஏமாந்த அப்பாவிகளில் அவரும் ஒருவர். எனவே “பாவிப் பயலுஹ! அந்தக் காந்தி மகானையுமில்லா சுட்டுக் கொன்னுட்டான். அவர் இருந்தா இந்த நாடு இப்படிக் குட்டிச் சுவராப் போகுமா?” என்று மட்டும் எப்போதாவது வாய்விட்டுக் கூறித் தமக்குத் தாமே ஆத்ம சாந்தி தேடிக் கொள்வார். எனினும்கூட, காங்கிரஸின் அரசியல் போராட்டக் காலத்தில் அதன் பரம வைரிகளாகவும் ஆகஸ்டு சுதந்திர காலத்தில் அதன் விசுவாசிகளாகவும், மாறியுள்ள - உள்ளூர்ப் பணக்காரர்களைப் பார்க்கும் போதும், அந்தப் பணக்காரர்கள் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னும் கொள்ளை கொள்ளையாகப் பணம் திரட்டியிருப்பதை எண்ணும் போதும் அவருக்குத் தமது அப்பாவித்தனமான காங்கிரஸ் பக்தியைப் பற்றி மன உளைச்சலும் உறுத்தலும் ஏற்படும். தம்மையறியாமலே தாம் காங்கிரஸை வெறுத்து வருவதை அவர் உணரத்தான் செய்தார். 

வடிவேலு முதலியார் தினசரி வாசகசாலைக்கு வந்து விடுவார். அந்தி மயங்கும் நேரத்தில் அந்தப் பக்கமாக வந்தால் அம்மனைத் தரிசிப்பதற்கும், நாலுபேரைச் சந்திப்பதற்கும், தறிக் குழியில் உட்கார்ந்திருந்த ஆசனக் கடுப்புத் தீர்வதற்கும், மூப்பனாரிடம் சில்லறைப் பற்றுவழி செய்வதற்கும் அவருக்கு வாய்ப்பிருந்தது. 

அம்மன் கோயில் நடை விட்டிறங்கிய முதலியார் பட்டறையில் அமர்ந்திருந்த மூப்பனாரைப் பார்த்து, “மூப்பனார்வாள், இன்னிக்குப் பேப்பரே வரலியா? ஒண்ணையும் காணமே” என்று விசாரித்தார். 

“ஆமா. மதியம் வரலே. ஒருவேளை ‘அஞ்சரை வண்டியிலே வரலாம்” என்று நிர்விசாரமாகப் பதில் சொன்னார் மூப்பனார். 

“சரி, வெத்திலை பாக்கு குடுங்க, போட்டுக்கிட்டாவது இருக்கலாம்” என்று கூறிக்கொண்டே, சாத்தி வைத்திருந்த சரப்பலகையொன்றை எடுத்துக் கடைப்படிக்கும், தெருவிலுள்ள குத்துக் கல்லுக்குமாகப் போட்டு அதில் துண்டை மடித்துப் போட்டு உட்கார்ந்தார் முதலியார். 

வெற்றிலையையும் பாக்கையும் எடுத்துக் கொடுத்தார் மூப்பனார். 

“என்ன முதலியார்வாள், பொகையிலை வேண்டாமா?”

“ஒரு காம்பு இருக்கு, அது போதும்” என்று சொல்லிவிட்டு, களிப்பாக்கைக் கடுக் என்று கடித்தார் முதலியார். 

“முதலியார்வாள், மாசமும் புறக்கப்போவுது. உங்க நிலுவையைக் கொஞ்சம் அடைச்சிட்டா நல்லது. என் பாடும் ஓடியடையணும் பாருங்க” என்று தொண்டையைச் செருமிக் கொண்டே கேட்டார் கடைக்காரர். 

“அதுக்கென்ன? நம்ம துட்டு என்ன ஓடியா போவுது? கைலாச முதலியார்வாள் கிட்டே பாக்கி வாங்கணும். வாங்கினதும் உடனே தந்திருதேன். உங்க கஷ்டம் எனக்குத் தெரியாதா? இல்லே, நம்ம கஷ்டம் உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறிக் கொண்டே, பத்திரிகை கொண்டு வரும் பையன் வருகிறானா என்று மேற்கே எட்டிப் பார்த்தார். 

மேற்கே, கையெழுத்து மறையும் மாலை மயக்கம். இருள் இறங்கித் தெரியும் பாபநாச மலையில், அந்தி ஒளி கன்றிக் கட்டிப் போன ரத்தம் மாதிரி, நீலம் பாரித்துக் கறுத்துப் போயிருந்தது. மாலைக்கருக்கலின் பின்னணியில் தூரத்து ரயில்வே லைன் செம்மண் மோட்டின் மீது புல்லுக்கட்டுச் சுமந்து செல்லும் விவசாயப் பெண்களின் எடுப்பான தோற்றம் நிழலாட்டம் போன்ற காட்சிப் பிரமையை உண்டாக்கியது. 

அந்தி மயக்கின் சோபையின் மீது முதலியாரின் கவனம் செல்லவில்லை. பத்திரிகைப் பையன் வருகிறானா என்றுதான் அவர் பார்த்தார். அவன் கண்ணில் தட்டுப்படாததைக் கண்டு சோர்வுற்ற முதலியார் வாயில் கூடி நின்ற தாம்பூல ரசத்தைத் துப்புவதற்காகப் பின்புறம் குனிந்தார். 

“வே, பாத்துத் துப்பும் வே” என்று திடீர்க் குரல் முதலியாரின் தலையை மேல் வாங்கியது. எதிரே சுப்பையா முதலியாரும் வேறு இரு நெசவாளிகளும் வந்து நின்றார்கள். 

வடிவேலு முதலியார், எச்சிலை லாவகமாக எட்டித் துப்பி விட்டு, “வாங்கய்யா, இப்படி உட்காருங்க” என்று நகர்ந்து உட்கார்ந்தவாறே கூறினார். வந்தவர்கள் மூவரும் சரப் பலகை என்ற அந்தச் சங்கப் பலகையில் இடம் பெற்று அமர்ந்தனர். 

“வடிவேலு முதலியார்வாள், நீங்க என்ன நம்ம கைலாச முதலியார்வாளைக் கண்டு, அந்த விசயமாகக் கேட்டியளா?” என்று ஒரு நெசவாளி எதையோ ஞாபகப்படுத்தினார். 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“கூலி விசயம்தானே? அவுஹ ஊட்டுக்குப் போனேன்; அவுஹ ஊருக்கில்லியாம். கடேசிச் சுக்கிரவாரத்துக்காக, திருச்செந்தூர் போயிருக்காகளாம். அவுஹளைப் பத்திக் கவலை இல்லை. கூடக் குறையன்னாலும் மாட்டேன்னு சொல்ல மாட்டாஹ” என்றார் வடிவேலு. 

“என்ன வே மாப்ளேய், உசத்து உசத்துன்னு நம்ம பாட்டுக்குக் கேட்டுக்கிட்டேயிருந்தா, முதலாளிமாருங்கதான் என்ன செய்வாஹ? நூல் விலையோ நாளுக்கு நாள் ஏறிக்கிட்டிருக்கு. நாமும் கொஞ்சம் நிதானமாய் நடந்துக்கிட வேண்டாமா!” என்று குறுக்கிட்டார் சுப்பையா முதலியார். 

“வேய் உமக்கு என்ன, வயத்திலே பசியா, முட்டிலே பசியா?” என்று வெடுக்கென்று கேட்டுவிட்டு, வடிவேலு முதலியார் காரசாரமாகப் பேசத் தொடங்கினார்: “வே, உமக்கு இந்தப் பெரிய - மனுசன் புத்தி போகாது போலிருக்கே! மொதலாளிக்காகத் தாக்குப் பிடிச்சி உமக்கு என்ன லாபம்? நீரும் தொள்ளாளி; நாங்களும் தொள்ளாளி. கூலியை உசத்திக் கேட்க வாயா வலிக்குது? நூல் விலை ஏறிக்கிட்டே போவுதுங்கிறீரே, அரிசி விலை மட்டும் இறங்கிக் கிட்டே போவுதோ? மொதலாளிக்கு. ஏண்டுக்கிட்டுப் பேச வாரீரே, உமக்கென்ன கிடைக்குது? ஏதாச்சும் அஞ்சுபத்துக் கிடைக்குதா? அதையாவது சொல்லும்!”

தொண்டையில் கூடிய, எச்சிலைக் கடுக்கென்று விழுங்கி விட்டு, “அதுக்குச் சொல்லலே, பெரிய முதலாளி கூட அன்னைக்கிச் சொன்னாக வரவர யாபாரமே இல்லியாம். ஏத்துமதியே அத்துப் போச்சாம். இந்தச் சமயத்திலே போயி, கூலி உசத்துறதுன்னா” என்று தமது வாக்கைக் கொண்டு செலுத்த முனைந்தார் சுப்பையா முதலியார். 

“பெரிய முதலாளிக்கு ஏத்தமும் இறக்கமும் வயித்தைப் பிடிக்கிற விவகாரமில்லையே. அவுஹ தடுக்கி விழுந்தா, தாங்குறதுக்கு பங்களா இருக்கு; கார் இருக்கு; லட்ச லட்சமாப் பணம் இருக்கு; வீடுவாசல் சொத்துசுகம் இருக்கு. நமக்கு என்னவே இருக்கு?” என்று கூட வந்த நெசவாளி ஒருவர் கூறினார். 

“அது சரிதான். எல்லாம் கைலாச முதலியார்வாள் வரட்டும்னு இருக்கேன். அவுஹ வந்ததும், மொதலாளிமாரையெல்லாம் ஒண்ணுகூட்டி, ஊர்க்கூட்டம் போட்டு ஒரு வழி செய்ய வேண்டியதுதான்” என்று தம் யோசனையை வெளிப்படுத்தினார் வடிவேலு. 

இந்தச் சமயத்தில் திடீரென்று நாய் குலைக்கும் சத்தமும், சைக்கிள் மணிச்சத்தமும் ஏக காலத்தில் ஒலித்தன. வடிவேலு முதலியார் தலையைத் திருப்பிப் பார்த்தார். எதிரே பத்திரிகைப் பையன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான், அவனுக்குப் பின்னால், நெருங்கவும் பயந்து கொண்டு, பின் வாங்கவும் கூசிக் கொண்டு, ஒரு கறுப்பு நாய் குலைத்துக் கொண்டே ஓடி வந்தது;  சிறிது தூரம் ஓடி வந்துவிட்டு, அது பின்தங்கிவிட்டது. 

வாயில் புகையிலையோடு பொதுமி நின்ற வெற்றிலைக் கூழைப் புளிச்சென்று துப்பிவிட்டு, “அந்த நாயைக் கூடப் பாருங்க. அதுக்குக்கூட, அவர் புத்திதான் இருக்கு” என்று எரிச்சலோடு சொன்னார் வடிவேலு முதலியார். 

“அவரைப்பத்தி நாம் எதுக்கு வாயைக் குடுக்கணும்? வீண் பொல்லாப்புக்கா?” என்று பட்டும் படாமலும் வெட்டிப் பேசினார் சுப்பையா முதலியார். 

“அது யார் நாய்?”என்று தெரியாதது போல் கேட்டார் இன்னொருவர். 

“எல்லாம் மைனர் முதலியார்வாளின் நாய்தான்! அதனால்தான் அதுக்குக்கூடக் கார்வார் ஜாஸ்தியாப் போச்சு!” என்றார் வடிவேலு. 

‘மைனர் முதலியார்’ என்ற அருணாசல முதலியார், சுப்பையா முதலியாருக்குத் தூரத்து உறவு. சுப்பையா முதலியாரின் தந்தை கைத்தறி ஜவுளிக்கடைதான் வைத்திருந்தார். எனினும், சுப்பையா முதலியாருக்கு வயது வருமுன்பே, அந்தக் கடை நொடித்துப் போய்விட்டது. அதன் பின்னர் அவரது தந்தை ‘ஜவுளிக்கடை முதலாளி’ என்ற அந்தஸ்திலிருந்து வழுக்கி விழுந்து, மீண்டும் தமது சமூகத் தொழிலான கைத்தறி நெசவில் அடைக்கலம் புகுந்தார். சுப்பையா முதலியாரும் தற்போது ஒரு நெசவுத் தொழிலாளிதான், என்றாலும், ஜவுளிக்கடை வைத்து நடத்திய பழைய பெருமையுணர்ச்சியும், மைனர் முதலியார் வாள் போன்ற பெரியதனக்காரரின் தூரத்துச் சொந்தக்காரர் என்ற ஒட்டுறவுணர்ச்சியும் அவர் மனத்தை விட்டு அகலவில்லை. எனவே மைனர் முதலியாரைப் பற்றிச் சொன்னதும் அவருக்கு நெஞ்சில் சுருக்கென்றது. 

“என்னவே மாப்பிளே. அவுஹ கோயில் தர்மகர்த்தாவாச்சி. அந்த மரியாதைக்குக்கூட, நீர் மதிப்புக் குடுக்கக் காணமே!” என்று அங்கலாய்த்தார் சுப்பையா முதலியார். 

வடிவேலு முதலியார் விடுவதாக இல்லை. 

“கோயில் தர்மகர்த்தாவா? கோயில் பெருச்சாளின்னு சொல்லும்லே. அவரு நினைச்சா அம்மன் கழுத்திலே கிடக்கிற பொட்டிலே கூடக் கை வைக்கிறவராச்சே? அப்புறம் நம்ம சொத்தைக் கேட்பானேன்” என்றார் வடிவேலு முதலியார். 

“அட சரித்தாம்வே. பேச்சை நிறுத்தும்; பேப்பர் வந்திட்டுது” என்று வெட்டி முறித்துப் பேசிவிட்டு, பத்திரிகைக்காரப் பையனிடம் தினசரிப் பத்திரிகையை எட்டி வாங்கினார் சுப்பையா முதலியார். பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தவாறே, “பார்த்தீரா வே! நாக்பூரிலே ஒருத்திக்குக் குரங்குப் புள்ளே புறந்திருக்காம்!” என்று சுவாரசியத்தோடு சொன்னார்,

“சரிசரி, பேப்பர் படிச்ச லெச்சணம் போதும்; இப்படிக் குடும்” என்று அதிகாரத் தோரணையோடு கூறிக்கொண்டே பத்திரிகையைக் கையில் வாங்கினார் வடிவேலு. 

“பாத்தியளா, இதை. சட்டசபை அங்கத்தினர்மீது லஞ்சம் வாங்கியதாகப் புகாராம். வேலியே பயிரை மேய்ந்தா, விளைச்சல் கண்டு முதல் ஆனாப்பிலேதான்! இந்தக் காங்கிரசுக்கு என்ன கேடுகாலம் வரப்போவுதோ? ஹும்! எல்லாம் அந்தக் காந்தி மகானோடேயே போச்சி!” என்று ஏதோ ஒரு தலைப்பைப் பார்த்து விட்டு அங்கலாய்த்துக் கொண்டார், வடிவேலு. 

“ஆமண்ணாச்சி, அந்த வெள்ளைக்காரன் ராச்சியமே தேவலைன்னு போச்சி. காந்தி பேரைச் சொல்லிக்கிட்டே, நம்மைத் தேரோடும் வீதியிலே திருவோடும் கையுமா விரட்டிடுவாங்க போலிருக்கே!” என்று விசனித்தார் இன்னொருவர்,

“வெள்ளைக்காரன் ராச்சியம் போயிட்டுதா? கல்லுக் குத்தி போல, நம்ம கண்ணெதிரிலேயே அங்கே மலையடியிலே ஹார்வி உக்காந்துக்கிட்டிருக்கான். என்னமோ அண்ணாச்சி, நாம மட்டும் ஏமாறலெ, நம்ம தலைவர்களுங் கூடத்தான் ஏமாந்திட்டாஹ போலிருக்கு!” என்று தமது கருத்தை வெளியிட்டார். இன்னொரு நெசவாளி.

வடிவேலு முதலியார் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், பத்திரிகையில் எதையோ கூர்ந்து கவனித்தவாறே, “தம்பி, நூல் விலைகூட, இன்னம் ஏறும் போலத்தான் இருக்கு” என்றார். 

“அதுதான் நான் அப்பவே சொன்னேனே” என்று குறுக்கிட்டார் சுப்பையா. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“வே! அதுக்காக நாங்க கூலி உசத்திக் கேக்கிறதை ஒண்ணும் நிறுத்தப் போறதில்லை. வயித்துக்குத் தின்னாத் தானே வே, வேலை வெட்டி பார்க்கச் சக்தி உண்டு” என்று உடனே எதிரொலி கிளப்பினார் வடிவேலு. 

பிறகு அவர் சாவதானமாகப் பத்திரிகையைப் பார்த்துவிட்டு, கடைக்கார மூப்பனாரிடம் கொடுத்தார். மூப்பனாரும் வாங்கிய மரியாதைக்காக, நாலு பக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, கல்லாப் பெட்டியின் மீது பத்திரிகையை வைத்தார். இதற்குள் வடிவேலு முதலியாரைப் பார்த்து, “அண்ணாச்சி! அப்படின்னா, நீங்க கைலாச முதலியார்வாள் வந்ததும் ஒரு வார்த்தை கலந்துக்கிட்டு, ஊர்க்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று ஒரு நெசவாளி கேட்டுக்கொண்டார். 

“செய்தாப் போச்சி, அத்தோடே இன்னொரு சங்கதி.”

“அதென்ன அது?”

‘கோயில் தர்மகர்த்தா விஷயம்தான். கோயில் தர்மகர்த்தா பதவியை நாம் ஏதோ மைனர்வாளுக்கே கிரயம் பண்ணிக் குடுத்த மாதிரி, அவாள் நடத்துக்கிடுதாக. அதுக்கும் ஒரு வழி பண்ணியாகணும்” என்றார் வடிவேலு. 

“அப்படின்னா?”

“தர்மகர்த்தாவைப் பத்தித்தான் பேரிலே நாலுபேரு நாலு விதமாகச் சொல்லுதாகளே. வருஷமும் நாலு ஆச்சி. அம்மனுக்கு ஒரு கொடையைக் காணம்; ஊரிலே பலபேர் குடுமி அவர் கைக்குள்ளே இருக்கதாலே, யாரும் அவரைத் தட்டிக் கேக்கவும் காணம்; ஊர்ப்பணத்துக்கும் இன்னிக்கித் தேதிவரையிலே ஒரு கணக்கு, வழக்குக் கிடையாது. அதனாலே, வேறே யாரையாவது...”

வடிவேலு முதலியார் பட்டவர்த்தனமாக விட்டுச் சொல்வதைக் கண்டதும், பக்கத்தில் மைனர் முதலியாருக்கு மிகவும் வேண்டியவரான சுப்பையா முதலியார் இருப்பதைச் சாடை காட்டி, வடிவேலு முதலியாரின் தொடையில் லேசாகக் கிள்ளினார், ஒரு நெசவாளி. வடிவேலு முதலியாரோ அதற்கெல்லாம் மசிபவராயில்லை. 

“எல்லாம் தெரிஞ்சிதான்’வே சொல்லுதேன்” என்று அடித்துப் பேசியவாறே இடத்தைவிட்டு எழுந்திருந்தார் வடிவேலு. பிறகு கடைக்கார மூப்பனாரைப் பார்த்து,

“ரெண்டு சுருட்டு குடுங்க. வாய்க்காங்கரைப் பக்கம் போகணும்” என்றார். 

வாங்கிய சுருட்டில் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, “வாய்க்காங் கரைக்கு யாராவது வர்ரியளா?” என்று கேட்டார். 

சுப்பையா முதலியார் தமக்கு வேறு வேலையிருப்பதாகக் கூறிக் கொண்டு விடைபெற்று, எதிர்த் திசையில் திரும்பினார். சுப்பையா முதலியார் சென்றதும், தொடையைக் கிள்ளிச் சாடை காட்டிய நெசவாளி வாயைத் திறந்தார். 

“என்ன அண்ணாச்சி, பக்கத்திலே நாரதாமுனி சுப்பையா நிக்கயிலேயே நீங்க மைனர்வாளைப் பத்தி விளாசித் தள்ளுதியளே” என்று பாதி அங்கலாய்ப்புடனும் பாதிப்பாராட்டுடனும் கூறினார். 

“வேணுமின்னுதான் தம்பி சொன்னேன். இப்போ அவர் நேரா மைனர் முதலியாரிடம் போய், அத்தனை விசயத்தையும் ஒண்னு விடாமே, இறக்கி வச்சிட்டுத்தானே மறுவேலை பார்ப்பார்! அதுக்குத்தானே சொன்னேன்” என்று பெருமிதத்தோடு சொன்னார் வடிவேலு. 

“நீங்க எதுக்கும் துணிஞ்சவங்கதான், அண்ணாச்சி.”

“துணிஞ்சவனுக்குத்தான் தம்பி, துக்கமில்லை!” என்று அனுபவ வாயிலாகப் பிறந்த நீதிவாக்கியத்தை உதிர்ந்துவிட்டு, வாய்க்காலை நோக்கி நடக்க முனைந்தார் வடிவேலு முதலியார். 

- தொடரும்