அத்தியாயம் 1

12.81k படித்தவர்கள்
16 கருத்துகள்

1. உத்தராயணம்

ஜந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கூந்தல் கொடுப்பனை இருக்காது.

நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி, இறுகப் பிணைத்து எழுப்பிய கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது. ஸ்தூபிபோல் உச்சியில் ஒரு குமிழ் வேறே; சீப்பைத் தப்பிவிட்ட பிடரிச் சுருள்கள் நினைவில் குறுகுறுக்கின்றன.

பிறப்போடு வந்துவிட்டாற்போல் உடலோடு ஒட்டி வெள்ளை ரோஜா நிறத்தில் கடல் நுரையில் நெய்தாய ஆடையினூடே மார்க்கச்சு விண்ணென்று தெறித்துத் தெரிகின்றது. ரவிக்கை பூணாது, திரண்ட பனித்தோள் குமிழ்கள், கழுத்தின் விலாசம், யார் இவள் முகம் பார்க்கு முன்-?

“வயதானவர் மொட்டை மாடியில் படுக்கக்கூடாதுன்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. கேக்கமாட்டேன்கறேள் அப்பா-!”

தோளைக் குலுக்கும் கையைத் தூக்கக்கலக்கத்தில் திமிரப் பார்க்கிறேன். தூக்கம் கலையவில்லை, கனவு கலைந்துவிட்டது.

“எழுந்திருங்கோ அப்பான்னா!”

முடியை அள்ளிச் செருகிக்கொண்டு சாந்தா முகத்தில்தான் இன்று முதல் முழி. வெட்டுக்கிளிபோல் லேசாக ஆகாயத்தைப் பார்த்து அஞ்சலி செய்யும் நாசி நுனியில், குந்துமணி, மண்ணைப் பிசைந்தவன் கிள்ளியெறிந்துவிட்டதால் மூக்கு சற்று மொண்ணை. முகத்தில் வெண்ணெய் பளபளக்கிறது. அவளும் பாவம் மாற்றி மாற்றி சந்தனத்தை அரைத்துப் போடுகிறாள். மனமில்லாமல் மஞ்சளைப் பூசிக்கொள்கிறாள். விக்கோ-டர்மரிக் கிளியர்ஸில் அப்பப்போ வர்த்தக ஒலிபரப்பில் என்னென்ன விளம்பரம் கேட்கிறாளோ அத்தனையும் வாங்கியாகிறது. இன்று அமுங்கினாற்போல் இருந்தது. நாளை காலை எழுந்து கண்ணாடியில் பார்த்தால் கிளைத்திருக்கிறது; உடனே உற்சாகம், அடுத்து உடனே அயர்வு. கொஞ்ச நாட்களாய் அவள் காலம் இப்படித்தான் தள்ளுகிறது: ஆயினும் பரந்த முகத்தில் பேரழகு ஒன்று உண்டு.

விடிவேளையின் அயர்த்தலில் கண்டது தோற்றம்!

இதன் தெளிந்த நிழல்தானோ?

கையை ஆட்டிவிட்டு சாந்தா இறங்கிப் போயாச்சு.

கீழ்வானத்தில் பெரிய யாகம் நடந்துகொண்டிருக்கிறது. மேகப் பாறைகள் நெகிழ்ந்து உடைந்து கரைந்து ஆஹுதியில் கவிழ்கின்றன. தழல் ஆட்டம், வான் பூரா பரவுகிறது. சூடு உரைக்கவே நானும் எழுந்து இறங்குகிறேன்.

ஏணியிலிருந்து கால் தரையில் இறங்கினதுமே ‘சுருக்’ பல்லுக்கிடையில் தோன்றிய சாபத்தைக் கடித்து விழுங்குகிறேன். சேகரின் உபயம். பொழுது போகவில்லை. சொல்லச் சொல்ல வேளையோடும். வேளையில்லாமலும் முள்வேலிக்கு முடி வெட்டி (அவன் முடி சொல்லச் சொல்லத் தோளில் புரள்கிறது) மீசை ஒதுக்கி, வெட்டி வீழ்த்திய முள்ளை வெந்நீரடுப்புக்காக, ஏணியடியில் சுவரோரம் சேர்த்து வைத்திருக்கிறான். வெய்யிலில் காய்வதற்காகத் தட்டிக் கொட்டிப் பரப்பி வைத்திருக்கிறான். வெந்நீரடுப்புக்கும் அதை எரிக்கப்போவதில்லை. எனக்குத் தெரியும். முள்ளை கையில் குத்திக்கொள்ளாமல் எரிக்க, தனிப் பொறுமை, சிரத்தை, Knack வேண்டும்.

கிணற்றடியில் வாழை இலைகள் காற்றில் நர்த்தனமாடி வரவேற்கின்றன. சத்தியமா (விட்டேன்) அவை என்னை அடையாளம் கண்டுகொண்டுதான் அப்படிச் செய்கின்றன, மாலையில் ஒன்றிரண்டு வாளிகள் நான் இழுத்துக் கொட்டுவதைக்கொண்டு. இலை ஒவ்வொன்றும் ஆள் படுக்கலாம். அல்ல பாவாடை கட்டிக்கலாம். என்ன ஜாதியோ தெரியவில்லை. தாருக்கு இன்னும் எத்தனை நாள் போகணுமோ?

எங்களை இலையைத் தொடக்கூடாதுன்னு பழியா நிக்கறேள். மத்யானம் பாருங்கோ பாளம் பாளமாக் காத்து கிழிச்சுடறதே, என்ன சொல்றேள்?

காற்றுக்கு அலங்கோலமாக அதற்கு இஷ்டம். அதற்காக உன் கத்திக்கிரையாகக் காத்திருக்குமா?

- நான் சொல்லவில்லை, வாய் திறந்து சொல்லிவிட்டால் பந்து என் மேலேயே திரும்பி வந்து மோதும்.

“பிராம்மணனுக்கு வயசுக்கேத்த பேச்சா இருக்கா பாரு!”

கண்ட கனவுக்கேற்ற வயது கடந்து எத்தனையோ வயதாகிவிட்டபோதிலும் வயதுக்கேற்ற கனவு என்று காண வருமோ?

நடுப்பிள்ளையும் அடுத்தவனும் பல் தேய்த்துக்கொண்டிருக்கிறான்கள்.

“இந்த வீட்டில் ஒரு பேஸ்டா, மண்ணா, ஒண்ணு உண்டா? எப்பவும் மாசக் கடைசிதானா?”

“ஏன், மண் இருக்கே!”

இவனுக்கு அவன், அவனுக்கு இவன், சமயத்துக்கேற்ப ஒருவனுக்கு ஒருவன் உடுக்கடி; இவர்கள் பாஷையில் Boss.’

Tommy, வாலையாட்டி காலை வந்தனம் தெரிவித்துக்கொள்கிறது. எங்கிருந்தோ, என்றோ வந்தது. எங்கோ போகிறது வருகிறது. திடீரென்று நினைத்துக்கொண்டு கனகாரியமாக ஓடுகிறது. எங்கு போனாலும், வந்தாலும் இரவு இங்குதான். எல்லாம் பகல் பத்து மணிக்கும், இரவு பத்து மணிவாக்கிலும், கிணற்றடியில் வைக்கும் ஒரு கவளம் சோறு பண்ணும் வேலை. “தொதோ” கூடக் கொட்ட வேண்டாம். எங்கிருந்தாலும் பறந்தோடி வந்துவிடுகிறது. சொறி பிடிக்கறது, சொறி உதிர்கிறது. ஆனால் கண்களில் மட்டும் உள்ளொளியின் அழகு மங்கவில்லை. வாலையாட்டிக்கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, `நான் இருக்கிறேன் உனக்கேன் கவலை?’ என்று கண்கள் பேசுகின்றன.

“சனியனே எட்டிப்போ… காலைச் சுத்திண்டு!”

உதையை வாங்கிக்கொண்டு, குரைக்கக்கூட இல்லை. தென்னை மரத்தடியில், தான் ஏற்கெனவே பறித்து வைத்திருக்கும் பள்ளத்துக்குப் போய்ப் படுத்துக்கொள்கிறது.

“டேய், ரொம்ப பொறுமையா இருக்குடா!”

“Yes, Yes. முன்ஜன்மத்தில் ஸ்வாமிஜியா இருந்திருக்குமோடா?”

இதெல்லாம் நாயைக் குறிப்பிடுவன அல்ல. என் காது கேட்க என்னைக் கேலி பண்ணுகிறார்களாம். தனிப்பட்ட முறையில் அப்பாவை அல்ல. தலைமுறைத் தலைமுறையின் பழிப்பு. எங்களை அவர்கள் பங்கப்படுத்துகிறார்கள்.

நடுப்பிள்ளை என்னைக் கேட்கிறான்: ‘என்ன அப்பா, வாரம் ஒருநாள் மெளன விரதம் என்று வாயை அடைச்சுட்டு, கண்ணால் பேசிக்கொண்டிருக்கிறாய். பேசுகிறாயா, சுட்டெரிக்கிறாய். ஒரு கதவை மூடிவிட்டு இன்னொரு கதவைத் திறந்துவிடுகிறாய். அவ்வளவுதானே! இப்படி கண்ணால் கரிப்பதற்குப் பதிலாக வாயைத் திறந்து எங்களைத் திட்டிவிடலாம். ஆமாம், நாங்கள் கொம்மாளம்தான் அடிப்போம். ரேடியோ சிலோன்தான் கேட்போம். முழு வால்யூமில்தான் முடுக்கிவிடுவோம். சினிமாப் பேச்சுதான் பேசுவோம். நீ பொறுத்துண்டுதானிருக்கணும். இல்லாட்டி இதென்ன மெளனம்? உனக்கு ‘ததரினன்னா’ன்னா எங்களுக்கு லலலலா.’ நாங்கள் நீயா? வேலையும் கிடைக்க மாட்டேன்கிறது. எங்களுக்குப் பொழுதுபோக்குக்கு என்னதான் வழி? வீட்டுக்கு வீடு போய்ப் பாருங்கள். சத்தம் உங்களுக்கு B.P. எங்கள் பீதிக்கு. அதுதான் மறதி, வழித்துணை. கடன் வாங்கியோ, திருடியோ கலகலப்பாய் இன்னிக்கு இன்றையோடு போச்சா? நாளையை நாங்கள் எங்கே கண்டோம்? உங்களுக்கு நாளை இருந்தது.

நான் பதில் பேசவில்லை. பேசுவதில்லை, பேச்சு நியாயம் எப்பவோ தாண்டியாச்சு.

கண்ணன் அந்த நாளிலேயே செல்லம், கொடுத்த சலுகைகளுடன் தானாக எடுத்துக்கொண்ட உரிமைகளும் இப்போ சேர்ந்துவிட்டன. அவன் தம்பி மெளனமாய் எனக்கு விழும் சாட்டையடியைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான் Boss இன் Hatchet Man

நான் இன்னும் வெறுக்கவில்லை. ஆனால் இவர்கள் உலகத்தை வெறுத்தாச்சு.

நட்ட பயிர் அம்புகளாய்க் காய்க்கிறது. சரப்படுக்கையில் படுத்து, உன் உத்தராயணத்துக்குக் காத்திரு.

“கிருஷ்ணா… அது எங்கே கிருஷ்ணா?’’ என்று கத்துகிறது? அருவருப்பான, அபஸ்வர அழுகையின் தேம்பல் போன்ற ஒரு சத்தம். ஆனால், அதைக் கேட்டதும் ஹரிணி பாதி பேசும் படத்தை, மார்பில் கவிழ்த்துக்கொண்டு படுத்தவண்ணமே கன்னத்தில் போட்டுக்கொள்கிறாள். உண்மையிலேயே பக்தி சுபாவம் உள்ளவள்தான். அதுவும் இதுபோன்று நோகாமல் புண்ணியம் சம்பாதிப்பதில் பலே கெட்டிக்காரி.

காலைக்கும் மதியத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்!

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இங்கேயே தெளித்தாற்போல் எட்ட எட்டத்தான் வீடுகள். மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு வீடு கட்ட இன்னும் வசதி கிட்டவில்லை. உச்சிவெய்யிலில் பூமி பாளம் பாளமாக வெடித்திருக்கிறது. தூரதூரக் கட்டடங்கள் கானலில் நடுங்குகின்றன. இதுவரை இரண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக்கொண்டாச்சு. காய்ஞ்சாச்சு, ஆனால் உடல் வாணலியாய்ப் பொரிகிறது. இனிமேல் ஈரம் பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசுதான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?

அந்தந்த நாளுக்கு அதன் போக்கை நடாத்த தேவதை உண்டோ? உண்டெனில், அவள்தான் இன்று காலை எனக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டனளோ?

சூரியனிடமிருந்து லகானை வாங்கிக்கொண்டா? பிடுங்கிக்கொண்டா? ரதத்தை அவள்தான் நடத்துகிறாளோ? இவன் பொக்கை வாயை இளித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருப்பான். ஒருவேளை, இந்த வேளைக்கு டியூட்டி மாறி, தேவதையே வேறோ? நமக்குத்தான் காலடியில் இடறும் கூழாங் கல்லெல்லாம் சாமியாச்சே! அதனால்தான் வெய்யில் இப்படிக் காய்கிறதோ? இல்லை. நான் தப்பாய் நினைக்கிறேன். காயத்தானே வெய்யிலே.

வாழையடியில் ஒரே அமளி. எட்டிப் பார்க்கிறேன்.

இரு கழுத்துகளும் ஒரு கழுத்தாய்ப் பின்னிக்கொண்டு ஈருடல் இரு தலையில் ஒரு புதுப்பட்சியை உருவாக்கிக் கொண்டு இரு வான்கோழிகள் சண்டையில் உருள்கின்றன. கழுத்துகளை லேசில் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. போலும்! அந்த உருவிலேயே புரண்டு புரண்டு முள்வேலியில் ஒரு சந்தின் வழி வெளியேறி, ``அப்பாடா! எப்படியோ ஒன்றினின்று ஒன்று விடுபட்டு உருவம் பிளந்து, தொப்பைப் பாட்டிகள்போல் லொங்கு லொங்கென்று ஓடுகின்றன.

பின்னால் ஒரு குடிசையில் ஒரு ஸாஹிபா வளர்க்கிறாள். ஆனால் அவற்றிற்கு வேட்டைக்காடு இங்கேதான். மல்லிச்செடியை மிதித்துகொண்டு, கொத்தமல்லி விதையைக் கொத்திக்கொண்டு, கறிவேப்பிலைக் கன்றை வேரோடு சாய்த்து – ஹரிணி வாய்விட்டு அழுதேவிட்டாள் – கண்ட சேற்றை மிதித்துக்கொண்டு ஏமாந்தால் சமையலறை வரை நீளும் கால்கள்.

Tommy, தென்னங்கன்றடியில் அதுவே பறித்துக்கொண்ட குழியில் படுத்திருக்கிறது. வெய்யில் தாங்காது வயிறு, கொல்லன் துருத்திபோல் குபுக் குபுக். என்றைக்கு ஒருநாள் மண்டை கலங்கி வெடுக்கென்று பிடுங்கப்போகிறதோ? இப்போது அதற்கு கோழிகளைத் துரத்தக்கூடத் தெம்பு இல்லை. எனக்குத் தெரிந்தவரை இது குரைக்கிற நாயுமல்ல, கடிக்கிற நாயுமல்ல. நாய்களில் ஊமை உண்டோ? அப்போ இதன் பிறவிப் பயன்தான் என்ன? ஒரு காரியமுமில்லாமல் கனகாரியமாக குடுகுடுவென்று ஓடுவதும்… ஓடுவதும்… ஓடுவதும்… அவ்வளவுதானா?

அலமாரியிலிருந்து கைக்குத் தட்டுப்பட்ட புத்தகத்தை இழுத்துப் புரட்டுகிறேன் மத்வாசாரியரின் `சங்கர திக் விஜயம்.’ வயதுக்கேற்ற புத்தகம்தான். ஆனால் இந்த வேளைக்கு மண்டையில் ஏறுமா? ஏதாவது ஜேம்ஸ் பாண்ட் வரும் என நினைத்தது போக தோல்வி காணாத பாண்ட். அடி, வெட்டு, குத்து, சூடு, 007 சட்ட பயமில்லாமல் யாரை வேணுமானாலும் கொல்லலாம், சூப்பர்மேன் பாண்ட்.

மண்டை இடிக்கிறது. பெருமாள் எப்பவோ வந்து தயாராக வைத்திருந்த ஏனத்தில் பாலை ஊற்றிவிட்டுப் போய்விட்டான். ஹரிணி தயவு பண்ணணும். ஆனால் அவள் அயர்ந்து தூங்குகிறாள்!

பிற்பகல் வாடைக்காற்று கிளம்பிவிட்டது. வாசலுக்கு வெளியே புல் தரையில் சாய்வு நாற்காலியைக் கொணர்ந்து போட்டுக்கொள்கிறேன். வானத்துக்கு வெய்யிலுக்கும் காற்றின் மத்யஸ்தம் நடந்துகொண்டிருக்கிறது. வெறிச்சிட்டுக் கிடந்த வான வீதியில் போக்குவரத்து தொடங்கிவிட்டது. மேகங்களின் பவனி. பட்சி ஜாலங்களின் விதவிதமான வரிசைக்கட்டுக்கள், ஆட்டத்தில் கையிலிருந்து துள்ளிக் கம்பளத்தில் விழும் சீட்டில் காண்பதுபோல் பட்சிக்கூட்டங்கள் மேகத்தின் பின்னணியில் விதவிதமான பொட்டுகள் வைக்கின்றன. மேற்கு, மணக்கோலம் பூணுகிறது. பெண்ணுக்கு எந்தப் புடவையும் பிடிக்கவில்லை. அவிழ்த்துப் போட்ட புடவைகள், விதவிதமாய் போர் போராய்க் குவிகின்றன. ஜரிகைகள், கலர்கள், மோஸ்தர்கள் மிளிர்கின்றன.

வானத்தின் கவானில் லேசாய் ஒரு தேமல் படர்ந்திருக்கிறது.

கிணற்றடியிலிருந்து, வாய் குழறியபடி எங்கேயோ சுட்டிக்காட்டிக்கொண்டு ஹரிணி ஓடி வருகிறாள். பதறிப்போய்ப் பார்க்கிறேன். தோய்க்கிற கல்லின் கீழ் விட்டிருக்கும் சந்தில் பாம்பு சட்டை.

ஹரிணி குதிக்கிறாள், துள்ளுகிறாள், துடிக்கிறாள், முற்றுப்புள்ளி இல்லாமல் கத்துகிறாள். “அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுட்டு, ஒருநாளைப் பார்த்தாப்போல் நான் வயற்றில் நெருப்பைக் கட்டிண்டு… ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ. எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடிவெச்சுடுங்கோ”- மூச்சு விடாமல் வார்த்தைகளின் கோவைகூட சரியாகப் புரியாமல் இன்னும் ஏதேதோ குளறுபடி.

“ஆமாம் அதென்ன மயிலாப்பூர் கணக்கு? மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழநி, சாலிகிராமம், நாங்கநல்லூர், வேளச்சேரி-பேர்களுக்கா குறைச்சல்? இடம்தான் ஊசி முனைக்குக்கூட வழியில்லை.

“நான்தான் லப லபன்னு அடிச்சுக்கிறேன். ஆனால் அழுத்தமா உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு பதில்தானே! மெளனம் ஸர்வார்த்த ஸாதகம்-”

தைரியத்துக்கு அவள் முதுகில் ஒரு ஷொட்டு கொடுக்கிறேன். அவளுக்கு முகக்கடுப்பு இதற்குமேல் சாத்தியமா? என் கையை உதறுகிறாள்.

“காடு வாவா என்கிறது. என்ன வேண்டிக் கிடக்கு?” ஹரிணிக்கு என்றைக்குமே ஒரு வழிப்பாதைதான். வீட்டுக்கு வந்த புதிதில், அந்த முகக்கடுப்பே அவளுக்கு ஒரு களை கொடுத்தது. அவள் வீட்டில் ஆறு அண்ணன் தம்பிகளுக்கிடையில் அவள் ஒரே பெண். உடன்பிறந்தான்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தச் செல்லம் அவளுக்கு இன்னமும் செல்கிறது. அந்தக் கோபத்தின் அழகே என் நெஞ்சை எத்தனை முறை அள்ளியிருக்கிறது! ஆனால் இப்பவோ-

தோளை வியர்த்தத்தில் தூக்குவதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. வெய்யிலடித்தால், மழை பெய்தால். பாம்பு சட்டையுரித்தால், அசல் வீட்டுக்கோழி இங்கு மேய்ந்தால், Tommy-க்கு என்றேனும் பைத்தியம் பிடித்தால் சைக்கிளைப் போட்டுக்கொண்டு கறிவேப்பிலைக் கொத்துக்கு காய்கறிக் கடைக்குப் போனால் அங்கு கடைக்காரன் கை விரித்தால், வழியில் சைக்கிள் பஞ்சரானால், வேலைக்காரி ஒரு வேளைக்கு வராவிட்டால், சினிமாவுக்குக் கிளம்பிப் போய்ச் சேருவதற்கு முன் படம் ஆரம்பித்துவிட்டால், தையல் மெஷின் ரிப்பேர் ஆனால், திடீரென்று மின்சாரம் தோற்றுவிட்டால், எல்லாமே என் குற்றம்தான். `அத்வானம் பிடித்த’ - பல்லவிக்கு ஈதெல்லாம், இன்னும் சொல்ல விட்டுப்போனதெல்லாமே சரணங்கள்தாம்.

“மொட்டை மாடியில் காத்து வாங்கலாம்னா படி கிடையாது. என்ன வீடு கட்டி வாழறோமோ?”

மாடிப்படி கட்டுவதற்குள், பணம் போண்டி. அப்படியும் விடவில்லை. ஏணி வைத்து ஏறுகிறோம்.

“பிராமணன் bar விளையாடுற வயசைப் பார்!” ஹரிணிக்கு ஏணியில் ஏற முடியாத எரிச்சல். என்றுமே அவளுக்கு எல்லாரைக்காட்டிலும் உசிர் வெல்லம். உடம்பு வேறே தடித்துவிட்டது.

ஆனால், அவள் பயங்களை மறுப்பதற்கில்லை. இங்கு இயற்கை, தன் ஆட்சியை பட்டண வாசத்தின் தடங்கலின்றிச் செலுத்துகிறது. வீட்டைச் சுற்றி முள்வேலி. பூமியில் வளைகள். எதிலிருந்து எது வேண்டுமானாலும் இருக்கலாம். என்னைக் கேட்டால்? பூமியென்றிருந்தால், வளைகள், குழிகள், வெடிப்புகள், ஏன் இங்கிருந்து மயிலாப்பூரில் அப்பர்சாமி கோவில் தெரு. பழைய நெ.20, அடுக்குள் தொட்டி முற்றத்தில் ஜலதாரை வரை சுரங்கமே ஓட வழியுண்டு. நான் என்ன செய்ய?

பாட்டி. ஆசையாகப் பேரக் குழந்தைகளுக்கு, வடாம், வற்றல் வறுத்து பொட்டலம் கட்டி அங்கு போட்டால், அந்தப் பக்கம் மேடாயிருந்தால், அந்த மேடு ஒரே சீராய் இந்தப் பக்கம் தாழ இறங்கினால் - எந்த மூஞ்சூரைக் கேட்பேன்? உஷ், வேண்டாம். தாமாஷுக்கு அங்கும் லாயக்கில்லை. இங்கும் லாயக்கில்லை! சிரிக்கத் தெரிந்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?

சென்ற மூன்று வருடங்களாக சென்னைக்கும் லண்டன் வெதர் வந்துவிட்டது. ‘திடீர்’ கோபம் திடீர் அழுகை, திடீர் மூக்கைச் சிந்திப் போடு, உடனே சிரி எல்லாம் நம் மாதிரிதான்.

நெற்றி கொப்புளிக்கிறது. இந்தத் திடீர் மூட்டம் எப்படி வந்தது? புழுக்கம் எனக்கு மூச்சுத் திணருகிறது. காற்றின் ஓட்டத்தை ஆகாய போலீஸ்காரன் ‘ஹோல் ஆன்’ பண்ணிவிட்டு என்ன கேஸ் எழுதுகிறான்?

தரையிலிருந்த குப்பை எல்லாம் வாரி, முகத்தில் தூவிக்கொண்டு ஒரு பெருமூச்சுக் கிளம்பி, சுழல் காற்றாக மாறுகிறது. ரஸகுண்டுபோல் நீர் கோர்த்துக்கொண்ட மேகங்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துச் சீர்குலைகின்றன. ஒன்றிரண்டு பாஷ்பங்கள்கூட மேலே உதிர்கின்றன. வானம் ஒரேயடியாய் இருள்கின்றது. இதோ ஆகாச கங்கை அவிழப்போகிறாள். ஈஸிச்சேரை மடக்கிடவேண்டியதுதானா?

இல்லை. ஆர்ப்பாட்டத்துடன் சரி. எண்ணெய் கடைச் செட்டியார் சத்தம் போடாத சிரிப்பில் முகம், தோள், தொந்தியெல்லாம் பிசைந்த மாவாய் குலுங்குவதுபோல், தனக்கே உரிய ரகசியச் சிரிப்பில் மூட்டம் கலைந்துவிட்டது. வானத்தில் இங்குமங்குமாய்ப் பிசுபிசு பஞ்சு மிட்டாய்ப் படர்ச்சிகள். புலு புலு ரோஜா மொக்குகள். கசங்கிய மாலியங்கள் சிதறிக் கிடக்கின்றன. இருளை இதமாய், நல்ல வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட்டு மலர்ந்த மினுமுனு வெளிச்சம், இடத்துக்கே தண்ணொளியை வர்ணமாய்த் தீட்டுகிறது. ஏதோ ஒரு apstract ஓவியம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

பகல் கனிந்து பழம்போல் நழுவி இருளின் திறந்த வாய்க்குள் விழப்போகும் ஒரு தினுசான அச்சம் தரும் இசைக் கேடான முகூர்த்தம். கயிறுமேல், கழைக்கூத்தாடியின் கர்ணத் தருணம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சமயங்கள் ஒருங்குகின்றன. சாமக்ரியைகள் சேர்கின்றன. காத்திருந்த ஓரையும் வருகின்றது, நேர்கிறது, கடக்கிறது, கழிகிறது. இருளும் ஒளியும் கலந்த வேளை. ஆனால், இதோ இரவு தோன்றிவிட்டேன் எனும் அந்தக் கலவை நேர்ந்த அந்த அசல் சமயம், அந்த ரஸவாதம்; நம் இத்தனை காவலையும் நழுவிவிடும் ஜாலம் என்ன?

ஆனால், இதெல்லாம் என்ன அசட்டு யோசனை? யாருக்கு என்ன பயன் எனச் செவிட்டில் அறைந்து விளக்குவதுபோல் புறப்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.

கண்ணன் Bond box உடன் நிற்கிறான். எப்போ கையில் பெட்டியைத் தூக்கிவிட்டானோ இரவு வீடு திரும்பப்போவதில்லை என்று அர்த்தம். பாட்டி வீடோ, மாம்பலத்தில். ரவியோ-மூன்றாம் காட்சி பார்த்துவிட்டு மிச்சம் போதுக்குத் தலைக்கு அணை பெட்டியை வைத்துக்கொண்டு ப்ளாட்பாரத்தில் தூங்கினால்-எனக்கென்ன? அவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தங்களுடைய சந்தோஷம் தங்களுக்குச் செலுத்திக்கொள்ளும் முதல் கடமை, மிச்சமெல்லாம் துச்சம் என பாவிக்கும் அவர்கள் தத்துவத்தில் `எங்கே போகிறாய்? எப்போ வருவாய்?’ எனும் கேள்வியே அவர்களுடைய அல்வாத் துண்டில் அவர்களுக்கு மயிர் சிக்கினாற்போல் எனக்கும் வயிற்றைக் குமட்டுகிறது.

கண்ணன் என் எதிரே நின்றுகொண்டிருக்கையிலேயே, சேகர் அவனைத் தாண்டி அவசரமாகப் போகிறான். Boss அவனுக்கும் சேர்த்துச் சொல்லிவிட்டதாக அவனுடைய அர்த்தம். ஆகையால் அவன் தனியாகச் செலவு பெற்றுக்கொள்ளத் தேவையில்லை.

இப்போ எனக்கு நினைவு வருகிறது. எல்லாம் ஏற்கெனவே நினைப்பிலிருப்பவைதான். படங்கள் திடுக்கென்று எகிறுகின்றன.

இப்போதான் மூன்று வருடங்களுக்கு முன் என் தாய் காலமானாள்.

நான் வழக்கமாய் வீடு திரும்பும் வேளைக்கு சற்று நேரம் தப்பி வந்தாலும் வாசற்படியில் வந்து உட்கார்ந்துவிடுவாள்.

“என்னம்மா இங்கே உட்கார்ந்திருக்கே?”

“ஒன்றுமில்லே. உள்ளே ஒரே புழுக்கமாயிருந்தது. ஏதோ காத்து சில்லுனு வரதேன்னு…”

நானும் பக்கத்தில் அமர்கிறேன். பாஷையே பரிபாஷை. உண்மைக் காரணம் எங்களுக்குத் தெரியும். ஆனால் வெளிப்படுத்திக்கொள்ள மாட்டோம். உள்ளேயிருந்து குரல்கள் வேணுமென்றே எங்களுக்குக் கேட்கும்படி கிசுகிசுக்கின்றன.

“அம்மாவும் பிள்ளையும் பேசிக்கறா பார்த்தையா?”

நாங்கள் எங்கே பேசிக்கிறோம்? எங்களைப் பிணைக்கும் மெளனச் சரடே எங்கள் பேச்சென்றால், நாங்கள் நிறையப் பேசுகிறோம்.

‘அம்மாவும் பிள்ளையும்’ என்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருள்படுத்துவது வேறு, பல்லைக் கடித்துக்கொண்டு ‘கிழங்கள்! அசடுகள்!’

அட இங்கே இன்னொரு செட் கிளம்புகிறதே!

சாந்தா, தோள்பட்டையில் மேலாக்கு மடிகளைச் சீண்டியவண்ணம், “அப்பா, கட்டை தொட்டி நாடார் டி.வி. செட் புதுசா வாங்கியிருக்கார். எங்களை வரச்சொன்னார். போயிட்டு வர்றோம்.”

என் புருவங்கள் என்னையுமறியாமல் கேள்வியில் உயர்திருக்க வேண்டும். ஏனெனில், காட்சி முடிந்து திரும்ப பத்து, பத்தரை ஆகிவிடுமே! தனி வழி, பெண்டுகள், இரவு வேளை…

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” வெடுக்கென்கிறாள். இத்தனைக்கும் நான் வாய் திறக்கவில்லை. ஆனால் சாந்தா இந்த வருடம் 10+1. ஏற்கெனவே நிறைய மார்க்கு வாங்குவாள். ஆகையால் நான் வாய் திறக்குமளவுக்கு அவள் மக்கு இல்லை. என் வாயை அடைக்கவும் அவளுக்குத் தெரியும். பக்கபலம் வேறு இருக்கிறதே!

“முன் நிலாத்தான். நியூஸ் வரைக்கும் இருக்கமாட்டோம். மெயின் முடிஞ்சவுடனே திரும்பிடறோம். அப்பா, நீங்கள் டி.வி. வாங்கியிருந்தால், பிறத்தியார் வீட்டில் எங்களுக்கென்ன வேலை?”

ஹரிணி, கொண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே “மோருஞ்சாதம் கரைச்சு, பழையது மூலையில் வெச்சிருக்கேன். வீடு ஜாக்கிரதை!”

இப்போ வீட்டில் நான் மட்டும்தான். அரணை ஒன்று என் காலில் உராய்ந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறது. ஒன்று திடீரெனப் புலனாகிறது. மனிதனைத் தவிர மற்றெந்தப் பிராணியும் எப்பவும் ஏதோ ஒரு ஜோலியில் ஈடுபட்டுத்தானிருக்கிறது. பொழுது போகவில்லையே எனும் நிலை அதற்கில்லை, காலப்ராமாணத்தில் மிகச்சிறிய அளவைக்கூட அதன் முழுமைக்கு வாழ்வதனால், அதற்குப் பொழுது போதவில்லை. மனிதன்தான், மோவாயைக் கைக்கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு, காலை கால் மேல் மடித்துப் போட்டுக்கொண்டு அல்லது ஒடுக்கிக்கொண்டு Rodin அப்படியே ஒரு சிலை வடித்து, அதையே காயமான நியாயமாகச் சாதித்துக்கொண்டு…

நான் இப்போது உணர்வது என் தனிமையையா… வெறுமையையா!

வானத்துத் தேமல் நிலவாகப் பூத்துவிட்டது. ஆனால் என் கண்ணில் சதையால், பார்வையின் சிதையில், எட்டாய் விண்டு தெரிகிறது. பூசணி பத்தைகள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

முள்வேலியில் காட்டாமணிச் செடி, இடையிடையே பூவரசு, நுணா, ஒதிகை மரங்கள் நெருக்கமாக இலை பின்னிக்கொண்டு, நான் ஒரு குஞ்சுபோல், ராக்ஷஸக் கூட்டில் காத்திருக்கிறேன். எதற்கு?

கொஞ்சநேரம் மொட்டைமாடியில் காற்று வாங்கலாமா!

என் கனத்தடியில் ஏணி படிக்கும்படி முனகுகிறது.

மாடியில் உடம்பை நீட்டுகிறேன். ஆ! இஸ் திஸ் பியூட்டிஃபுல்!

தோள்மேல் சுதந்திரமாய்ப் போட்ட கைபோல், தண்டவாளம் எட்ட தொடுவானை அணைத்து ஓடுகிறது.

திடீரென வானத்தில் பூக்கள் மண்டிக் கிடக்கின்றன. மொட்டுக்கள், மலர்கள், பிய்ந்த இதழ்கள், மூச்சுவிடும் விண்மீன்கள், சின்னதும் பெரிதுமாய்ச் சீனாக்கற்கண்டு கட்டிகள் வைரச்சிதறல்கள், உறைந்துபோன கண்ணீர்த் துளிகள் - இதய உதிரிகள் இவற்றிலிருந்து இழுத்த ஜிகினாச்சரடுகளில் ஏதேதோ நினைவுகள். தோற்றங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கோவிலில் விதவிதமான காய்கறிகளைக் கட்டித் தொங்கவிட்டு ஓர் உற்சவமாமே! அதுமாதிரி-

- என் பையல் பருவத்தில், நான் வளர்த்த ஒரு குச்சு நாயின் சடைமறைத்த முகம்;

- இளம் வயதில் மரித்த என் தம்பி;

- ரீதிகெளளையின் ஒரு சொகுஸு வளைவு;

- ஹரிணி கொடியாயிருந்த நாளில் அவள் கூந்தலிலிருந்து பிய்த்தெறிந்த தாழம்பூ மடல்;

- இரவு வேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் நுறைத் துளிகள். பொரியும் முத்துக் கொதிகள்;

- டெலிபோன் மணியோசை;

- தச்சன் இழைப்புளியிலிருந்து கூடம்பூரா சிதறும் மரச் சுருள்கள்;

- குப்பையில் மாணிக்கக் கற்கள்;

- கண்ணீரும் கம்பலையுமாக அம்மாவின் முகம்; (ஏன்?)

- கன்னியாகுமரியின் மூக்குத்தி -

இன்னும் ஏதேதோ சொல்லுக்குள் அடங்கினவை, அடங்காதவை. திடீரென இதுவரை எப்படியும் தோன்றாத எண்ணம் ஒன்று அதன் பெருமிதத்தில் நானே உடல் விம்முவதாகத் தோன்றுகிறது. இந்த மொட்டைமாடியின் அடைப்பில் அடங்கிய வானவரைக்குள் அடங்கிய இத்தனை சொத்துக்களும் என்னுடையதுதானே?

சரி, என்ன செய்யப்போகிறாய்! அத்தனை நட்சத்திரங்களையும் வாரிக் கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பீச்சில் சுண்டல் விற்கப்போகிறாயா? அல்லது நட்சத்திரப் பூக்கள் தொடுக்கப்போகிறாயா?

இந்த எண்ணத்தின் மிதப்பே அரை மயக்கம். கால் தூக்கம். கால் நினைவில் எல்லாம் ஒன்று குழம்பி விழித்துக்கொண்டிருந்தேனா! மயங்கிக்கிடந்தேனோ! தூங்கியே போய்விட்டேனோ? - திடீரென Brindavan Express-ன் அறை கூவலில்தான் நினைவின் இயக்கம், தடுத்த நீர்வீழ்ச்சிபோல் தடதடவென என்மேல் இறங்கிற்று.

புகைப்போக்கியின் வழி சமையலறையில் ஏதோ பண்டம் உருளும் சப்தம்.

ஒரு மஞ்சள் பூனையின் நடமாட்டம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

ஏணிப்படியில் கால் வைத்ததும்-

ஏணிதான் தரையில் சரியாகப் பதிந்தில்லையோ, 

ஏற்கெனவே நைந்து, கட்டு முறிந்ததோ, 

இசைக்கேடாய், தூக்கக் கலக்கத்தில் நான்தான் ஒரு பக்கமாய்ச் சாய்ந்துவிட்டேனோ?-

ஏணி நிலை பிசகி, ஏணியோடு, சேகர் வெட்டிச் சுவரோரமாய்ப் பரப்பி வைத்திருக்கும் முள் படுக்கையில் சுமார் இருபது அடி உயரத்திலிருந்து-

முட்கள் வாழைப்பழத்தில் குத்துவதுபோல் முதுகில், பின் மண்டையில், சப்பையில் நுழைகையில் என்னையறியாமல் வீறலில் வாய் திறந்தது. ஆனால் சத்தம் வரவில்லை. ஒருக்களிக்க முயன்றேன். முடியவில்லை. இடதுபக்கம் மறுத்துவிட்டது. Oh my God! வாய் பொத்திய நிசப்தம். பயத்தில் இலைகூட அசையவில்லை. எனக்கு நேர்ந்துவிட்டது? No, No, No.

பல்லி வாயில் தும்பிபோல், வார்த்தைகள், அலறல்கள் தொண்டைக்குள் இறக்கையடித்துக்கொண்டன.

இனி என்ன?

சாந்தியும் ஹரிணியும் வரும்வரை இங்கேதானா?

வந்தாலும் அவர்கள் என்னை அவர்களிடையே தூக்கிக்கொண்டு போய் உள்ளே சேர்க்க முடியுமா?

முடியாவிட்டால், இரவு பூரா இங்கேயே இப்படித்தானா?

Tommy எங்கிருந்தோ ஓடிவந்து என் முகத்தை ஓரிரு தடவை முகர்ந்து பார்த்து பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை -

இதுவேதான் உன் உத்தராயணமா?

தூரத்தில் சிரிப்பு கேட்கிறது.

(தொடரும்...)