அத்தியாயம் 1
01
பதினெட்டாம் நூற்றாண்டு,
“மண் விடுதலை” என்று பிறக்குமோ! என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம்! ஒளிகண்ட தமிழகம் நலிகண்டு நடுங்கி, வலிகண்டு வாடி விக்கலும் வேதனையுமாய் தவித்துக்கொண்டிருந்தது. ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்று நாமணக்க நவிலும் தேன் மணக்கும் தமிழ் மொழியின் பாசுரங்கள் பொய்த்துக் கொண்டிருந்தன. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக் காரர்கள், டச்சுக் காரர்கள் மற்றும் போர்த்துகீசியர்கள் என வாணிபம் செய்ய வந்த ஐரோப்பியர் தாங்கள் தமிழகத்தை அடிமைப்படுத்தும் முயற்சியில் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதோடு, உள்நாட்டு ஆட்சியாளர்களைத் தங்கள் கைப்பாவைகளாக்கி அவர்களின் எண்ணப்படி ஆட்டுவித்துக் கொண்டும் அவரவர் தங்கள் திட்டங்களை தடங்கல்கள் இல்லாமல் நடைமுறைப் படுத்திக் கொண்டிருந்தனர்.
தமிழினமோ இக்கொடுமைச் சூழலில் கட்டுண்டு தன் அரசியற் பண்பாட்டையும், நல்லாட்சியின் பொன்னான வரலாற்றையும் தன் கண்முன்னேயே தொலைத்துக் கொண்டிருந்தது. தமிழர் தம் நாகரிகத் தொட்டிலின் பூச்சரங்கள் அறுந்துபட்டுக் கொண்டிருந்தன. ஆமாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் பாவிகள் பலரின் பாழ்பட்ட கூடாரமாக அமைந்துவிட்ட மிகப் பரிதாபமான காலகட்டம் அது!
அக்காலகட்டத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைக்கு மேற்காகவும், தஞ்சை புதுக்கோட்டைக்கு தெற்காகவும், மதுரை மாவட்டத்திற்கு கிழக்காகவும், நெல்லையின் வடக்காகவும் அமைந்திருந்தது இராமநாதபுர சீமை. தமிழ் ‘கண்டதோர் வைகை’, மதுரையை வளமுறச் செய்துவிட்டு வங்கக் கடல் நோக்கிச் செல்லும் வழியில் அதன் வடகிழக்குப் பகுதி நிலங்களை நஞ்சையாக மாற்றி வளஞ்சேர்த்தது. இது மட்டுமின்றி விரிசுழி ஆறு, அரிசிலை ஆறு, மணிமுத்தாறு, கோட்டைக்கரை ஆறு, குண்டாறு, மலட்டாறு, வைப்பாறு, பாலாறு, பாம்பாறு (இன்று அம்மாவட்டம் ஒரு வறட்சி மண்டலமாக இருப்பதே பெரும் அவலம்) போன்ற பல சிற்றாறுகளும் பாய்ந்து வளம் மிக்கதொரு நாடாக விளங்கியது இராமநாதபுரச் சீமை. இப்பகுதிகளில் சேதுபதி மன்னர்கள் தன்னாட்சி பெற்று விளங்கியதால் இவர்களது ஆட்சிப் பகுதி சேது நாடு என்றும், மறவர் சீமை என்றும் வழங்கப் பெற்றது. இராமநாதபுரச்சீமையில் இருந்து தன் தங்கைக்காக மன்னர் செல்லமுத்து சேதுபதியால் தனி பாளையமாக பிரிக்கப்பட்டிருந்தது பருத்திக்குடி.
பருத்திக்குடி, அன்று கதிரவன் மறைந்து நாழிகைள் பலவாகிய காலம் நடுநிசியைக் கடந்து நகர்ந்துகொண்டிருந்தது. ஒளியற்ற வேளையில் இருள்கூட்டும் வானில் ஒளிவீசித் துடிக்கின்ற பல வெள்ளி விண்மீன்களின் ஊடே, உலவுகின்ற எழிற்கன்னியென இன்முகத்தால் குளிர்நகையைத் தெளித்துக் கொண்டிருந்தாள் முழுமதியாள்; அவளின் நகையில் மயங்கிய வாசமுல்லை தன்னிதழ் மலரவும், அதைக் கண்டு பாசமிகு உள்ளத்தில் பண் ஒலியாய் வண்டிருந்து பாடவும்; பருவத்தைக் கண்டவுடன் பட்டுவிட்ட மரங்களும், ஆசையுடன் தளிரிலைகள் வீசுகின்ற தென்றலிலே சலசலத்துப் ஆடவும்; அதனைத் இயற்கைத் தாயவளின் தாலாட்டெனக் கொண்டு நாள் முழுக்க உழைத்த தமிழ்க் குடிகள் களைப்பாறக் கண்ணயர்ந்து நித்திரையில் மூழ்கியிருந்தனர்.
இவ்வாறு ஆள், அரவம் இல்லாத அவ்வீதிகள் ஆழ்கடல் அமைதியினால் ஆட்கொள்ளப் பட்டிருந்த வேளையில், திடீரென ‘படார்...படார்!’ என்று இரண்டு துவக்குகள் வெடிக்கும் ஓசை பயங்கரமாக ஒலித்து அப்பகுதியையே திடுக்கிடச் செய்தது. ஆந்தைகள் அலறின! மரங்களின் கூட்டில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள் படபடத்துச் சிறகடித்தன! நாய்கள் ஊளையிட்டு அவ்வீதிகளில் மிரண்டு ஓடத்துவங்கின! அந்நாட்டில் அதுவரை இருந்த அமைதி நிலை மாறி திடீர் பரபரப்பு பற்றிக் கொண்டிருந்தது. மக்கள் வீதிகளிலும், வீடுகளிலும் “என்னவாயிற்று! எங்கிருந்து வந்தது இந்தப் பயங்கர ஒலி” என்று ஒருவருக்கொருவர் வினவியவாறு ஒன்றும் புரியாமல் பதற்றத்துடனும் பீதியுடனும் அலைமோதிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில்,
“ஏலேய்!! தளபதியும் உபதளபதியும் மோசம் பண்ணிட்டானுவ லேய்...வெள்ளக் காரனுவ நம்ம தலைவர் மொக்க பழனியப்ப சேர்வையையும், தாயி பொன்னாத்தாளையும் கைது பண்ணிட்டானுவலே....மருது தம்பிய தாயி தப்பிக்க வெச்சுருச்சு..ஓடியாங்க!” என்று கதறியவாறு தன் பின்னங்கால் பிடரியில் அடிக்க, அவ்வீதிவழியே ஓடி வந்தான் வயக்காட்டு காவலுக்குச் சென்ற குடியானவன் ஒருவன்.
அதுவரை அமைதிச் சோலையாய் இருந்த பருத்திக்குடி மக்களின் நெஞ்சில் இந்தச் செய்தி பேரிடியாய் இறங்கியது. அவர்களின் மனம் துடித்து கலவரமயமானது, “ஐயோ! காளீசுரா!” என்று பெண்கள் தங்கள் மாரில் அடித்துக் கொண்டு கதறிய ஒப்பாரி ஓலங்களும், அழுகுரல்களும் ஆட்கொள்ளத் தொடங்கின.
அறிவும் ஆண்மையும் நிறைந்து, கொடை வளமிக்க கருணைத் திறத்தாலும், வேல் எதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் கொண்ட நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்!’, என்ற உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சி, “வாணிபம் செய்து பிழைக்க வந்தவன் எம்மக்களை ஆள நினைப்பதா?” என்று சூளுரைத்து ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற பருத்திக்குடி பாளையத்தின் பொறுப்பாளர் மாவீரன் மொக்க பழனியப்ப சேர்வை கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி காட்டுத் தீப்போல எட்டுத் திக்கிலும் பரவியது.
துடித்தன தமிழ் நெஞ்சங்கள், துன்பக் கண்ணீர் வடித்த நிலையில் வாடி வதங்கின...நடித்த தமிழ் துரோகிகளெல்லாம் நயவஞ்சகச் சிரிப்பு சிரித்து தன் பதவியைக் காப்பாற்றி, தன் மடியையும் நிரப்பிக் கொண்டு மகிழ்ந்தனர். மங்காத வீர மறவர்கள் பிறக்கும் இத்தமிழ்த் திருநாட்டில் தான், எதற்கும் பயனற்ற எத்தர்களும், பித்தர்களும், வஞ்சகர்களும் பிறக்கிறார்கள் என்ற உண்மை அன்று தான் தமிழ் மக்கட்கு புரிந்தது, துன்பத்தால் உடைந்து ஒழுகினர். தங்கள் தளபதி இராமசேனனும், உபதளபதி மாரப்பனும் இவ்வளவுத் தரங்கெட்ட வஞ்சகத்தை செய்வார்கள் என்பது அம்மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
இத்தனைக்கும் போர் மூண்டபோது, தன் நம்பிக்கைக்குரியவர்களை ஏவி தன் வாய்மொழி அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார் பழனியப்ப சேர்வை.
“இது தமிழுக்கும் அந்நிய மொழிக்கும் நடைபெறும், நடைபெறுகிற போர்..தன்னுடல் நரம்பில் தமிழ்க்குருதி ஓடாதார் ஒதுங்கிடுக! ஒரு நாளில் மூவேளைக்கே குடல் நிரப்பும் தொழிலொன்றே பெரிதென்னும் கோழையர்கள் வழிவிடுக; மடியர்கள் செல்க! அடிமை நலம் விரும்பிடுவோர் வெருண்டொதுங்கிக் கொள்க! தமிழ் மானங்காக்கும் அடல்மறவர் வெங்களிற்றுக் கூட்டமென கிளர்ந்தெழுந்தோம், என்நடைக்குத் தடைசெய்யாதீர்!” என்பதே அவ்வறிக்கை. அப்படி இருந்தும் தமிழ் மண்ணைச் சேர்ந்த பலரும் தனது தமிழ் இன உறவுகளுக்கே துரோகம் செய்து விட்டார்கள் என்று கேள்விப்படும்போது எவர் நெஞ்சம் தான் குமுறாது?
இந்தச் செய்தி இராமநாதபுரச் சீமை என்னும் மறவர் சீமை மன்னன் செல்லமுத்து சேதுபதிக்கு அதிகாலையில் எட்டியது.. அப்போது அவர் தன் அரண்மனை முன் இருந்த கொற்றவை கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு வாயிலின் வழியே வந்து கொண்டிருந்தார்.இந்தச் செய்தியைக் கேட்டு நெஞ்சம் துடித்து உள்ளம் ஒடிந்து போன மன்னர்,
“என்ன...! பழனியப்ப சேர்வை அகப்பட்டு விட்டானா?” என்று கூறி அதிர்ச்சியில் உறைந்து அப்படியே கோயில் படிக்கட்டில் நொந்து அமர்ந்தார்...அப்போது அவரின் மனதில் பழனியப்ப சேர்வையின் சிந்தனைகள் மட்டுமே சுழன்று கொண்டிருந்தன. மௌனமாய் தன் நண்பனின் வீரச் செருக்குகளையும், அவர்தம் சாகசங்களையும் தன் மனக்கண்ணில் காட்சிகளாக ஓடவிட்டுக் கொண்டிருந்தார் மன்னர். சில நிமிடச் சிந்தனைக்குப் பின் மன்னர் திடீரென்று தன் மனதில் ஏதோ தட்டுப்பட்டது போல தன் ஒற்றனை நோக்கி,
“நிச்சயமாக இருக்காது, இதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்க வேண்டும். தெளிவுறக் கூறு, அகப்பட்டானா இல்லை அகப்படுத்தப் பட்டானா?சீறிச் சிலிர்த்துச் சங்கநாதம் செய்யும் மாவீரன் என் நண்பன்...என் தோழனை போரில் வெல்வது அத்துணை எளிதல்ல என்பதை நானறிவேன்....” என்றார்.
ஆம் இராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் உயிர்த் தோழன் தான் இந்த மொக்க பழனியப்பன். மன்னரின் தங்கை சிவகாமி நாச்சியாரருக்கு தனது படைத் தளபதி பொருநன் சேர்வைக்கு காதல் திருமணம் செய்து வைத்த பிறகு, தனது தங்கைக்காக தம் ஆளுகைக்குட்பட்ட அருப்புக்கோட்டையைத் தனி பாளையமாக்கி அதற்குத் தன் மைத்துனனை மன்னரக்கினார். அப்பாளையத்திற்கு நம்பிக்கைக்குரிய ஒரு தளபதி தேவை என்றுணர்ந்து, நரிக்குடியில் வாழ்ந்து வந்த மாவீரனும் தன் உயிர்த் தோழனுமான மொக்க பழனியப்ப சேர்வையை அப்பதவியில் நியமித்தார் அரசர். பாளையத்தாரின் மறைவிற்குப் பின் அவர்தம் மனைவி சிவகாமி நாச்சியாரும் துயர் தாளாமல் உயிர் நீத்தார். அதன் பின் மக்கள் வேண்டுகோளின் படியும், மன்னனின் ஆணைப்படியும் பழனியப்ப சேர்வை இப்பாளையத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மன்னரின் கேள்வியைப் பெற்றுக்கொண்ட அவ்வொற்றன், அதற்கு பதிலுரைத்தான் “மன்னரின் வார்த்தைகள் உண்மைதான். பலமுறை போர் தொடுத்தும் வெல்ல முடியாத வெள்ளையர், பின் தன் வஞ்சக செயலைத் துவங்கினர். அவ்வாறு அவர்கள் அரங்கேற்றிய வஞ்சகத்திற்கு பலியானவர்கள் மொக்க பழனியப்ப சேர்வையின் தளபதி இராமசேனனும், உபதளபதி மாரப்பரும். அவர்களின் உதவியால் யாதொரு முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக மாளிகைக்குள் புகுந்த வெள்ளைப் படையாட்கள் அவரையும் நிறைமாத கர்ப்பிணியான அவர்தம் மனைவி பொன்னாத்தாளையும் சிறைப்படுத்தினர்...அவர் படை வேண்டி தங்களுக்கு அனுப்பிய ஓலையைத் தாங்கி வந்த தூதுவனையும் கொன்று உதவி வராமல் தடுத்துள்ளனர் தளபதியும் உபதளபதியும்” என்றான்.
இதனைக் கேட்டு நெஞ்சம் நொறுங்கியவராய் மன்னர், வேதனை தாங்காமல் தன் முகத்தை வானோக்கி உயர்த்தி “காளீசுரா!” என்று இறைவனைக் கடிந்தார். பின், தான் தன் நண்பருடன் கழித்த பழைய நினைவுகளை எண்ணியவாறு அமைதியாய் அமர்ந்திருந்தார். துன்பம் தாளாமல் அவரின் நாவறண்டது, வார்த்தைகள் வெளிவர முடியாமல் அடைபட்டது, கண்களில் மடை கொப்பளிக்கக் கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன. “செயற்கரிய யாவுள நட்பாயும், வினைக்கரிய யாவுள காப்பாயும் இருந்தாயே என் நண்பா!!!! உன் தளபதியின் குணமும், குற்றமும், அவர்தம் குன்றிய சுற்றாரையும் அறியாமல் போனாயே!!! தமிழ்க் குருதியின் மேம்பட்ட பண்புடைய வீரத்திருமகன், சூழ்ச்சியால் இப்படி அகப்படுத்தப் பட்டிருக்கிறாயே!!! இனி நான் என்ன செய்யப் போகிறேன்!” என்று கண்களை மூடி மனதிற்குள் விம்மினார் மன்னர்.
இவ்வாறு இடிந்து போய்க் கோவில் படிக்கட்டில் அமர்ந்திருந்த மன்னரைச் சட்டென்று எழுப்பியது “தந்தையே!” என்று அழைத்த அவர் தம் மகளின் குரல். அக்குரல் வந்த திசையறிந்து தன் முகத்தைக் கோவிலின் வாயிலை நோக்கி திருப்பினார் மன்னர், அப்போது அவ்வாயில் வழியே நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவளுமாய் தன் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தாள் இளவரசி வேலு நாச்சியார். புன்னகைத்தவாறு வெளியில் வந்த இளவரசி ஒளியிழந்த தன் தந்தையின் முகத்தைப் பார்த்து, “அப்பா! என்னவாயிற்று!” என்று அதிர்ச்சியுற்று, அவரை எழுப்பி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள்.