அத்தியாயம் 1

16.03k படித்தவர்கள்
5 கருத்துகள்

1. ஊர் வயல் நட்டு...

ஊர்க்குளம் பெருகிவிட்டது.


எப்பேர்ப்பட்ட மழையிலும், தலைகீழாக நின்றால் கழுத்துவரை நிற்கும் நீரைக் கொண்ட குளம், இப்போது தலைகீழாக மாறிவிட்டது. ஆண்டுக்கணக்கில் வற்றிப் போயிருந்த அந்த மலட்டுக் குளம், இப்போது கர்ப்பிணிப் பெண் போல் தளதளத்தது. அரைக்கோள வடிவத்தில் அமைந்த அதன் கரையில் நின்று பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர் நிரம்பிய நிலப்பரப்புகளில் 'தொழி வேலையும்', ஆங்காங்கே நடவு வேலையும், உழவு வேலையும் நடப்பது தெரியும். வெள்ளை வெளேரென்று இருந்த நீர்ப்பகுதியையும், அதன் இடையிடையே இருந்த நாற்றுக்களையும் பார்த்தால், வெள்ளைத் தாளின் சில இடங்களில் பச்சை மையில், ஒரு சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருப்பது போல் தோன்றும். கோணைத் தென்னை மரங்கள், அந்த வாக்கியங்களுக்குக் கேள்விக் குறிகள் போலவும், கிணறுகளை ஒட்டியிருந்த 'சரல்கள்' முற்றுப் புள்ளிகள் போலவும் காட்சியளித்தன.


குளம் பெருகியதை நம்ப முடியாதவர்கள் போல், ஊர்க்காரர்கள், நீருக்குள் கைகளை விட்டுப் பார்த்துக் கொண்டார்கள். சொல்லப் போனால், அது குளமுமல்ல; ஏரியுமல்ல. 'இரண்டுங் கெட்டான்' மைதானம் அது. மைதானம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. குட்டாம்பட்டியில் ஜனித்த ஒவ்வொருவரும், அறுபதாண்டுகள் வாழ்ந்தால், அந்தக் குளம் நிரம்புவதை இரண்டு மூன்று தடவை பார்க்கலாம். இப்போது பத்துப் பதினைந்து வயதில் இருக்கும் சிறுவர்கள் குளப்பெருக்கத்தை இப்போதுதான் பார்க்கிறார்கள். சிறு வயதில் பார்த்ததுபோல் தோன்றிய நீர்ப்பெருக்கை வாலிபர்களால் நினைவு படுத்திக் கொள்ள முடிந்தது.


வயற்பரப்பின் சில இடங்களில், எள் விதைத்திருந்தார்கள். அப்படி விதைத்ததால், அந்தப் பக்கமாக வரும் கணக்கப் பிள்ளைக்கு அடிக்கடி இளநீர் பறித்துக் கொடுப்பதும் உண்டு. அங்கே வரும்போதெல்லாம் பிள்ளைக்கு நீர்த்தாகம் எடுப்பதும் உண்டு. இப்போது பெருகிவிட்ட நீரில், 'ஆழ்ந்து போன நிலங்களையும்' எள்ளையும் சுட்டிக்காட்டி, இவர்கள் வாயிலும் வயிற்றுலும் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்த அளவில் 'எள் விழ இடமில்லை' என்ற பழமொழி உண்மையாகிவிட்டது. அரசாங்கத்திடம் சொல்லி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு 'நிவாரணம்' அளிப்பதாக, கணக்குப்பிள்ளை வாக்களித்திருக்கிறாராம். அவருக்கு இதற்காக ஓசியில் நாற்றும், தலா ஒரு மூட்டை நெல்லும் கொடுத்து, 'பதில் நிவாரணம்' அளிப்பதாக 'பாதிக்கப்பட்டவர்கள்' வாக்களித்திருக்கிறார்களாம். எவர், எதை முதலில் கொடுப்பது என்ற பிரச்சினையில், விவகாரம் தொங்குவதாகக் கணக்குபிள்ளைக்கு வேண்டாத கிராம முன்சீப் பிரச்சாரம் செய்து வருகிறார்.


சில ஆசாமிகள் குளக்கரையையே ஒரு கை பார்த்தவர்கள். குளத்தை ஒட்டி நிலம் வைத்திருந்த அவர்கள், குளக்கரையில் பாதியைக் குடைந்து நிலமெடுத்தார்கள். ஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த குளக்கரை மேலும் ஒல்லியாகி, நீர் கசிந்து கொண்டிருக்கிறது. நீரழுத்தத்தால், தங்கள் வயல் பக்கமுள்ள கரை உடைந்து வெள்ளம் புகுந்துவிட்டால், வெள்ளாமை வீணாகிவிடுமே என்று இப்போதுதான் ஞானோதயம் வந்தவர்கள் போலவும், அதே சமயம், வயலான கரைப் பகுதியை 'நெம்ப' மனமில்லா 'மாயை'யிலும் சிக்கித் தவிக்கிறார்கள். 'கர ஒடயாதுடா... கவலப்படாத' என்று அவர்களுக்கு சில சகுனி மாமாக்கள் ஆலோசனை சொன்னார்கள். கரை உடையாவிட்டால் "பாத்தியா... நான் சொன்னது மாதிரி உடையல" என்று சொல்லலாம். அப்படியே உடைந்தாலும் - குடி முழுகிவிடாது - ஆலோசனை வாதிகளின் குடி.


குளத்தை 'ஒரு கை பார்த்தவர்கள்', குளக்கரையையே 'இரு கை பார்த்தவர்களோடு' இன்னொரு ரக ஆசாமிகளும், கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வரப்பு வெட்டித் திலகங்கள். மடைக்கால்வாயை வெட்டி, தத்தம் வயல்களுக்கு 'குட்டி வயல்' சேர்த்தவர்கள். இப்போது மடை நீர் வாய்க்கால் இல்லாத வயலுக்குள் பாய்ந்து, கிட்டத்தட்ட குட்டிக் குளம் மாதிரி பெருகிவிட்டது. வயலுக்குக் குட்டி சேர்த்தவர்கள், குளமும் குட்டி சேர்ப்பதைப் பார்த்து, என்ன பண்ணலாம் என்று தத்தம் தலைகளைக் குட்டிக் கொண்டார்கள்.


லேசாக உடைந்த முட்டையிலிருந்து, வெள்ளைக்கரு கசிவது போல், குளத்தின் 'மடை' வழியாக நீர் கசிந்து கொண்டிருந்தது. இன்னும் நாலு 'பிடி' பெருகிய பிறகுதான், மதகைத் திறப்பது என்று ஊர்க்காரர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் குளத்து நீரை நம்பி, அதற்குக் கிழக்கேயுள்ள கொண்டலப்பேரி குளம் 'வயிறு காய்ந்து' கிடந்தது. கொண்டலப்பேரிக்காரர்கள், மதகைத் திறந்து விடும்படி, குட்டாம்பட்டிக்காரர்களை கெஞ்சிப் பார்த்தார்கள். பயனில்லை. இப்போது மிஞ்சிப் பார்க்கலாமா என்று நினைக்கிறார்கள். ஊரை ஒட்டி, குளத்துக் கரையின் வடமுனையில் இருக்கும் இந்த மடைக்குச் சற்றுக் கீழே ஒரு ஓடை துவங்குகிறது. இந்த ஓடை வழியாகத்தான் கொண்டலப்பேரிக்கு நீர் போக வேண்டும்.


அந்தக் குளத்துப் பாசனத்தில் முந்நூறு ஏக்கர் நிலமும் இருநூறு கிணறுகளும் இருக்கலாம். கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. அம்பாசமுத்திரம் பக்கம் கதிரறுக்கப் போய் நீச்சலையும் கற்றுக் கொண்டு வந்த வாலிபர்கள், கிணற்றின் 'குத்துக்காலில்' ஏறி நீருக்குள் பல்டி அடித்தார்கள். அவர்கள் அப்படிக் குதிப்பதை சில பையன்கள் ஆச்சரியப்படத்தக்க முறையிலும், சில முதியவர்கள் ஆச்சரியப்படத் தகாத முறையிலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில பையன்களுக்கு இடுப்பில் கயிறு கட்டப்பட்டு, பெரியவர்கள் கயிறுகளைப் பிடித்துக் கொள்ள, பையன்கள் கிணற்றுக்குள் நீச்சல் கற்றார்கள். 'எம்மா, எய்யா, வாண்டாம், தூக்கும் மாமா, தூக்கும் மாமா' என்று ஒரு பையன் கத்த, கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாமா சிரித்துக் கொண்டே பையனைக் கயிற்றின் மூலம் வெளியே தூக்கி விடுகிறார். உடனே மச்சான்காரன், 'அரவம்' தெரியாமல் பின்னால் வந்து, பையனைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கைதட்டிச் சிரிக்கிறான். பையன் மீண்டும், 'எம்மா, எய்யா, செத்தேன், செத்தேன், தூக்கும், செத்தேன், எம்மா எய்யா' என்று நீருக்குள் புழுங்குகிறான்.


வேறு சில கிணறுகளில், நாற்று நட்டுக் கொண்டிருக்கும் பெண்களை 'வசியம்' செய்வது போல், சில வாலிபர்கள் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கொழுஞ்சிச் செடியைக் கொண்டு போய் கிணற்றுக்குள் எவ்வளவு ஆழத்திற்குப் போக முடியுமோ, அவ்வளவு ஆழம் போய், விட்டுவிட்டு வர வேண்டும். இன்னொருவன், அதை எடுத்துக் கொண்டு வர வேண்டும். சிலர், தென்னை மரத்தில் பாதி தூரம் ஏறி நின்று கொண்டு, அங்கேயிருந்து கிணற்றுக்குள் குதித்தார்கள். இதுவரை அனாவசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் இப்போது ஆச்சரியமாக அந்த இளைஞர்களைப் பார்த்தது மட்டும் அல்லாமல், 'ஏ... அப்பாவு! எப்படிக் குதிக்க முடியுது? கொளுப்ப பாத்தியளா?' என்று செல்லமாக ஒருவருக்கொருவர் சிணுங்கினார்கள். எல்லாப் பெண்களும் தென்னை மரங்களைப் பார்ப்பதைக் கவனித்த 'கொழுஞ்சிச் செடி' வீரர்களும் தென்னை மரங்களில் ஏறப் போனார்கள். 'பயல்கள் ஏறுகிற கையோட இளனியையும் புடுங்கினாலும் புடுங்கலாமுன்னு' நினைத்த அய்யாவுத் தாத்தா, 'ஏ பரதேசிப் பயமவன்களா, கீழே இறங்கி, ஒப்பமாருக்குப் போயி ஒத்தாசை பண்ணுங்கல' என்று கத்தினார்.


அந்த வயல் காட்டில் பதினெட்டாம் நூற்றாண்டும், இருபதாம் நூற்றாண்டும் ஒன்றாக இயங்கி வந்தன. மாரிமுத்து நாடார் வயலில் டிராக்டர் உழுதது. இழை தழைக்குப் பதிலாக 'சீம்' உரம் போடப்பட்டிருந்தது. கிணற்றில், கமலைக் கிடங்கிற்குப் பதிலாக, ஒரு சின்ன காரைக் கட்டிடம்; கிழட்டு மாடுகளுக்குப் பதிலாக 'பம்ப் ஸெட்'.


'குளத்தடி' நிலம் அவருடையது. சுமார் ஏழு 'கோட்டை' விதைப்பாடு இருக்கலாம். போதாக் குறைக்கு வேறு பகுதிகளில் சில வயல்களை 'ஒத்திக்கு' வாங்கியிருக்கிறார். ஒத்தி வைத்தவர்களில் பெரும்பாலோர் உருப்படாதவர்கள். 'கெரயத்துக்கு எடுத்துக்கிடும்' என்று முன்வருபவர்களை "ஏண்டா கிரயம் கிரயமுன்னு கிறுக்குத்தனம் பண்ணுத? ஒன்னோட பூர்வீக சொத்த விக்கலாமா? பேசாம ஒத்தி வையி. எப்ப முடியுதோ அப்ப மூட்டிக்க' என்பார். இவரின் கருணை வெள்ளத்தால் திக்குமுக்காடும் சில்லறை வியாபாரிகள், அவர் சொன்னபடியே ஒத்தி வைத்துவிட்டு, ஒரேயடியாய் உருப்படாமல் போய் விடுவார்கள். அப்படி அவர்கள் போவதைப் பார்க்கத் துடிப்பவர் போல், மாரிமுத்து நாடாரும் "இந்தா காக்கிலோ கறி, காசு வேண்டாம். ஒன் கணக்கிலே எழுதிக்கிறேன். இந்தா ஒனக்கு ஒரு வேட்டி வாங்கியாந்தேன். பணம் வேண்டாம், கணக்கு வச்சிட்டேன்" என்று சொல்லியே ஒத்திப் பணத்தை உப்புக்கும் புளிக்குமாகக் கொடுத்து உப்பிப் போனவர்.


அவர் வயல்களில் ஒன்றே ஒன்றைத் தவிர, எல்லா வயல்களிலும் 'நடவு' வேலை முடிந்து விட்டது. ஒரே ஒரு வயலில் மட்டும் பத்துப் பதினைந்து பெண்கள் 'நட்டுக்' கொண்டிருந்தார்கள். முக்கால்வாசி பேர் கல்யாணமாகாதவர்கள். கல்யாணமாகாத பெண்களில் எல்லோரும் இளம் பெண்கள் அல்ல. இளம் பெண்களில் எல்லோரும் அழகிகளும் அல்ல. அழகிகளில் எல்லோரும் அடக்கமானவர்களும் இல்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாலைந்து பெண்களுக்கு வயது, அழகு, பண்பு ஆகிய மூன்றிலும் முப்பத்தைந்துக்கு மேல் மார்க் போடலாம்.


கிணற்றடியில் நாற்றங்காலில் இருந்து பத்துப் பதினைந்து நாற்றுக்கற்றைகளை அருகில் வைத்துக் கொண்டு, ஒரே ஒரு நாற்றுக்கற்றையை மட்டும் இடது கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாற்றையும் வலது கையால் எடுத்து வயலுக்குள் ஊன்றிக் கொண்டிருந்தார்கள். இரண்டரை ரூபாய் தினக்கூலி. விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கூலியைப் பற்றி அதிகப் பட்சம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை கோழிமுட்டைதான். ஆகையால் மனக்குறை இல்லாமல் பெண்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள். காலையிலேயே கண்காணிப்புக்கு வரும் மாரிமுத்து நாடார் வராததால் சோம்பலாகவும், அதே நேரத்தில் அவர் வந்து விடுவார் என்று வேகமாகவும், மாறி மாறி இயங்கி வந்தார்கள். நாடாரின் அண்ணன் மகன் வெள்ளைச்சாமி கிணற்றடியில் இருந்து நாற்றுக்கற்றைகளைக் கொண்டு வந்து பெண்களிடம் கொடுத்தான். அப்பன் சொத்தை விற்றுத் தின்றுவிட்டு, சின்னையாவிடம் வேலை பார்த்து வருகிறான். அவனை எல்லோரும் 'பிராந்தன்' என்பார்கள். 'லூஸ்' என்ற பட்டணத்து வார்த்தை கிராமப் பிரவேசம் செய்தால், அதற்குப் பெயர் தான் 'பிராந்தன்' என்பது.


முழுக்கருப்பான வெள்ளைச்சாமி, "அகலமா நடுங்க, சேத்து நடாதிய" என்று வரப்பில் இருந்து கொண்டே அதட்டினான்.


அதைக் கேட்டு, உலகம்மை சிரித்தாள். அவளுக்கருகில் நட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவி, "எதுக்கு பூ சிரிச்ச" என்றாள்.


"பிராந்தன் பேசினது காதுல விழல பாட்டி?"


"என்ன சொன்னாள்?"


"அகலமா நடணுமாம்."


"அதுக்கென்ன நட்டாப் போச்சி. நமக்கும் முடிஞ்ச மாதிரி இருக்கும்."


"நீ தான் மெச்சிக்கணும். இந்த வேல முடிஞ்சிட்டுன்னா மாரிமுத்து மாமா வேற வேல குடுப்பார். சூரியன் சாயுறது வறக்கிம் விடமாட்டாரு. மஞ்ச வெயிலு அடிச்சாத்தான் மஞ்ச தேச்சிக் குளிக்க முடியும்."


வெள்ளைச்சாமி மீண்டும் கத்தினான். பிள்ளைக்குட்டி இல்லாத சின்னய்யா சொத்து தனக்குச் சேரும் என்று எண்ணுபவன். அவன் நினைக்காமல் இருக்கும்போதே, ஊர்க்காரர்கள், அப்படி அவனை நினைக்க வைத்து சும்மா கிடந்த பிராந்தன் காதை ஊதிக் கெடுத்தார்கள். ஆகையால் பெத்த அப்பனையே அப்பனாய் நினைக்காத அவன், சின்னய்யாவை சொந்த அய்யாவாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களும் அப்படி நினைக்க வேண்டும் என்பது போல் கத்தினான்.


"ஒன்னத்தான பாட்டி."


"எனக்கு இன்னும் முப்பது கூட முடியல. ஒனக்கு நான் பாட்டியா? இதுக்குத்தான் ஒன்னை பிராந்..."

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


"என்ன சொன்ன? பிராந்தன்னு சொல்றியா? உன்ன..."


"வெள்ளைச்சாமி, இந்த சட்டை நல்லா இருக்கே. எங்க எடுத்த? இது ஒன்ன ராசா மாதிரி காட்டு."


"இது தென்காசில எடுத்தேன்."


வெள்ளைச்சாமி கிணற்றுப் பக்கம் போய்விட்டான். பெண்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். "பிராந்தன சமாளிச்சிட்ட" என்றாள் உலகம்மை.


"பிராந்தனுக்குக் கோபம் வந்ததுன்னா, நெலயா நிப்பான். நல்லவேள, பேச்ச மாத்திட்ட" என்றாள் இன்னொருத்தி.


குத்துக்காலில் சாய்ந்து கொண்டு, இளம் பெண்களை, குறிப்பாக உலகம்மையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி, அவனைப் பார்த்து அவளும் சிரிப்பதை காதல் சகுனமாக எடுத்துக் கொண்டான். அவளிடம் 'பவுசு' காட்டும் வேகத்தோடு, "அகலமா நடுங்கன்னா, கேக்க மாட்டிங்கியள. அகலமா நடுங்க" என்றான்.


"இதுக்கு மேல அகலமா நட்டா, அடுத்த வயலுல போயி தான் நடணும். பிராந்தன் கத்துறதப் பாரு. உலகம்ம ஒனக்கு என்னழா கேடு? ஏன் இப்படிச் சிரிக்கிற?"


"விபரமாச் சொல்லிட்டுச் சிரியேன், பிள்ள."


"நேத்து நம்ம ஊர்ல யாரோ வந்து சினிமா போட்டாங்கல்ல. அதுல ஒரு ஆளு நாத்த அகலமா நடுறது மாதிரி பிள்ளியள இடவளிவிட்டுப் பெத்தா பிள்ளைக்கும் நல்லது, தாயிக்கும் நல்லதுன்னார். அதைப் பிடிச்சுக்கிட்டு இவன் குதிக்கிறான்."


"ஓ, அதுதான பார்த்தேன். பிராந்தனுக்கு நாத்த அகலமா நடுறது எப்டி தெரியுமுன்னு நெனச்சேன். சரியாச் சொல்லிட்ட. ஆமா, நீ பீடி சுத்திக்கிட்டு இருந்துட்டு இதுக்கு ஏன் வந்த? அதுல, இதவிட அதிக ரூபா வருமே?"


உலகம்மை பேசாமலும், நாற்றை நடாமலும் சிறிது தயங்கினாள்.


"சும்மா சொல்லு."


"அவன் பீடி ஏசெண்டு ராமசாமி இருக்காமுல்ல, அவன் பார்வ சரியில்ல. பீடி இலய குடுக்கிற சாக்குல ஒரு நாளு இலையோட சேத்துக் கையத் தேச்சான். தெரியாம பட்டிருக்குமுன்னு பேசாம இருந்தேன். இன்னொரு தடவை கணக்கப்பிள்ளகிட்ட பீடிய சோதித்தது மாதிரி என்ன இடிச்சான். நான் ஒதுங்கிக்கிட்டேன். பெறவும் லேசா இடிச்சான்."


"நீ என்ன பண்ணுன?"


"அறிவிருக்காடான்னு கேட்டேன். ஒன் அக்கா தங்கச்சிய போயி இடியேன்னு கேட்டேன். அவன் மொகஞ் சின்னதாய் போச்சு. பக்கத்துல நின்னவளுக ஏங்கா, ஏஜெண்ட்ட இப்படிப் பேசுறன்னு கேட்டாளுகளே தவிர, அவன் செஞ்சத ஒரு வார்த்த தட்டிக் கேக்கல. இந்த முண்டைங்க கண்ணுல முழிக்கப்படாதுன்னு இங்க வந்துட்டேன்."


ஏஜெண்ட் தன்னிடத்தில் தகாத முறையில் நடந்ததை விட, பக்கத்தில் இருந்த பெண்கள், அவனுக்கு 'சப்போர்ட்' செய்யும் தோரணையில் பேசியதையே பெரிதாக எடுத்துக் கொண்டவள் போல், உலகம்மை பேசாமல் நின்றாள். அவள் தோழி, ஆதரவாகப் பேசினாள்.


"பீடிக்கட வந்தாலும் வந்துது... இவளுவ, ஜிலுக்கிறதும், மினுக்கிறதும், குலுக்கிறதும், சொல்லி முடியல... ஏஜெண்டப் பார்த்து சிரிச்சி - சிரிச்சி எலய அதிகமா வாங்கறது, கணக்கப் பிள்ளகிட்ட பல்லக் காட்டி கழிவண்டலு இல்லாம செய்றது, பீடி ஒட்டுறவனப் பார்த்து சிரிச்சி, சே... சே... விடு பேச்ச."


"அதுக்கில்ல புஷ்பம், ஒரு வார்த்த தட்டித்தான் கேக்கல, சும்மாவாவது இருக்கலாமுல்ல?"


ஒரு கிழவி இடைமறித்தாள்.


"விடு களுதய, அவன சப்போட்டா பேசுனா பீடிய கழிக்க மாட்டான், பணத்தை ஒடனே குடுத்திடுவான். ஒங்கிட்ட என்ன இருக்கு குடுக்க? உலகமே மோசமா போயிட்டு. நாமுல்லாம் ஒன்ன மாதிரி இருக்கையில..."


"நீ ஒன் பிலாக்கணத்த நிறுத்து பாட்டி. ஒலகம்மா! நீ அவன அங்கயே செருப்ப வச்சி அடிச்சிருக்கணும்."


"நீன்னா அடிக்கலாம். ஒனக்கு அண்ணன் தம்பி சொக்காரன் சொகக்காரன் இருக்கு. எனக்கு யாரிருக்கா? அவன் திருப்பியடிச்சா கேக்க நாதியில்லிய. இல்லாதவன் பொண்ணு எல்லாத்துக்கும் மயினிதான்."


பாட்டி பிலாக்கணத்தைத் தொடர்ந்தாள்.


"அதத்தான் சொல்ல வந்தேன். இவா அதட்டிட்டா! ஒரு காலத்துல, பொம்பிள தப்பா நடந்தாலும் சரி, ஆம்பிள தப்பா நடந்தாலும் சரி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, தலையில மணல் மூட்டையை ஏத்தி, தெருத்தெருவா கொண்டு போவாங்க. இப்பப் பாரு, நீயே சொன்ன, ஒன்ன அவன் இடிச்சா, இவளுவ அவனுக்குத்தான் பேசுறாளுக."


இன்னொரு பெண்ணும் குறுக்கிட்டாள். இவள் பீடி சுற்றத் தகுதி இல்லாதவள் என்று ஒதுக்கப்பட்டவள்.


"அந்தக் கழுதகள ஏன் பேசுறிய? நம்மள இடிக்கயில இனிக்குது. இவளுக்கு எப்படி கசக்குமுன்னு நெனச்சிருப்பாளுக."


"காலம் கெட்டுப் போச்சு. கன்னி கழியாதவளுகளும் கசட்டு முண்டையா போயிட்டாளுங்க."


பேசிக் கொண்டிருந்த பெண்கள், திடீரென்று வேக வேகமாக நடத்துவங்கினார்கள். மாரிமுத்து நாடார் கொஞ்சம் வேகமாகவே நடந்து வந்தார். "என்னம்மா குறுக்கு வலிக்கியெம்மா" என்று பாதி நிமிர்ந்த உலகம்மை. அப்பிடியே உடம்பைக் குனிந்து கொண்டாள். "எல்லாம் பொண்ணுகளயும் ஒட்டு மொத்தமா சொல்றது தப்பு பாட்டின்னு" சொல்ல வாயைத் திறந்த புஷ்பம். 'பூ'ன்னு ஊதிக் கொண்டே, நாற்றை எடுத்தாள். குத்துக்காலில் சொந்தத் தலையைச் சாய்த்தபடி நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி "வயலுன்னு நெனச்சியா? ஒன் வைப்பாட்டின்னு நினைச்சியா? குத்துக் காலுல சாயுறியே, வயலு சீதேவி. மூதேவி இல்ல, மூதேவி!" என்ற வார்த்தைகளைக் கேட்டு, விழித்துத் திடுக்கிட்டானா, திடுக்கிட்டு விழித்தானா என்பது தெரியவில்லை. நாடார் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்பது மட்டும் தெரிந்து, வெள்ளைச்சாமி, நாற்றுக்கட்டுகளை எடுத்துக் கொண்டு நடவுப் பக்கம் ஓடினான்.


மாரிமுத்து நாடாரும் நடவுப்பக்கம் வந்தார். அறுபது வயதைத் தாண்டப் போகிறவர். ஆனால் வயதை மறைத்தது உடற்கட்டு. அந்த உடல்கட்டில் எட்டு முழ மல்வேட்டி இறுகித் தழுவ, அரைக்கை சட்டை, தொளதொளன்னு காற்றில் ஆடியது. சிவப்பும் கருப்பும் இல்லாத மாநிறம் கொண்டவர். ஒரு பாக்கெட், ரூபாய் நாணயங்களின் கனம் தாங்காமல் தனியாகத் தொங்கியது. நரைத்துப் போன நறுக்கு மீசை, உதட்டையும் மீறி, வாய்க்குள் எட்டிப் பார்த்தது. இடது கையில் இரண்டு மோதிரங்கள் மின்னின.


நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களை உற்றுப் பார்த்தார். ஒவ்வொரு பெண்ணும் தன் வேலையைத் தான் அவர் கவனிப்பதாக நினைத்துக் கொண்டு, 'இந்த அகலத்த அதிகமுன்னு சொல்லுவாரோ, இவ்வளவுதான் நட்டுயளான்னு சத்தம் போடுவாரோ' என்று சிந்தனையை வேலையாக்கியதால் வேலையில் சிந்தனை ஓடாமல் இருந்தார்கள்.


அவருக்குப் பயந்தார்கள் என்றால், அதற்குக் காரணம் உண்டு. எவளாவது சரியாக வேலை பார்க்கவில்லையென்றால், அங்கேயே அவள் கணக்கை முடித்து, சில்லறையைக் கொடுத்து அனுப்பிவிடுவார். விவகாரம் அத்தோடு நிற்காது. அதற்குப்பிறகு, அவரிடம் நல்லதுக்கோ, கெட்டதுக்கோ 'கைமாத்து' வாங்க முடியாது. மற்ற விவசாயிகளிடமும் 'சின்னாத்தாவைக் கூப்பிடாத தட்டுக் கெட்டவ' என்று சொல்லி விடுவார்.


என்றாலும், மாரிமுத்து நாடார் யாரையும் திட்டவில்லை. உலகம்மையைச் சிறிது நேரம் உற்றுக் கவனித்து விட்டுப் பேசினார்.


"ஏய் உலகம்மா. ஒன்னத்தான். வீட்டுல கொஞ்சம் வேல இருக்கு. எங்கூட வா. ஏமுழா முழிக்க. முழுக் கூலியும் கெடைக்கும். நாத்த போட்டுடு, வாம்மா."

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


உலகம்மை என்ன வேலை என்று கேட்கவில்லை. அப்படிக் கேட்பது அவருக்குப் பிடிக்காது என்பது அவளுக்குத் தெரியும். இதர பெண்களிடமும் 'போறேன்னு' சொல்லாமலே, தலையை நிமிர்த்தினாள். இடுப்பில செருகிய கணுக்கால் சேலையை எடுத்து விட்டுக் கொண்டு, நாடார் பின்னால் நடந்தாள். இருவரும் கிணற்றுப் பக்கம் வந்தார்கள்.


"ஒலகம்மா கிணத்துல குளிச்சிடு. ஒடம்புல்லாம் சவதியா இருக்கு."


"மொகங்கால மட்டும் கழுவிக்கிறேன். சாயங்காலமாத் தான் குளிக்கணும்."


"சொல்றதச் செய்ழா. நான் சொல்லுறேன்னா காரணமுல்லாமலா இருக்கும்? சீக்கிரமா ஆவட்டும். ராகுகாலம் வந்துடப் போவது, ஜல்தி."


உலகம்மை தயங்கிக் கொண்டே கிணற்றுக்குள் இறங்கினாள். சேலையை அவிழ்த்து, மார்பு வரை கட்டிக் கொண்டு, 'மூலப்படியில்' உட்கார்ந்து கொண்டாள். தண்ணீர் இடுப்பு வரைக்கும் வந்தது. இரண்டு கைகளால் தண்ணீரை ஊற்றிக் கொண்டாள். குத்துக்காலைப் பிடித்துக் கொண்டு நின்ற மாரிமுத்து நாடார், அந்தப் பத்தொன்பது வயது மங்கையின் சிவந்த மேனியின் அழகைத் தற்செயலாகப் பார்த்து, லேசாகச் சலனப்பட்டார். அங்கேயே நிற்கலாமா வேண்டாமா என்பது போல், தலையைச் சொறிந்தார். பிறகு 'நம்ம வயசுக்குத் தகாது' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, உடம்போடு ஒட்டியிருந்த புடவையையும், அந்த ஈரத்துணிக்குள் எட்டிப்பார்த்த உடல் அழகையும் கண்களால் விழுங்கிக் கொண்டே 'கமலக்கிடங்கு' பக்கமாகப் போனார்.


மாரிமுத்து நாடார் அகன்றுவிட்டதை ஓரக்கண்ணால் பார்த்த உலகம்மை கிணற்றுக்குள் பாய்ந்தாள். மூக்கைப் பிடித்துக் கொண்டு 'முங்கினாள்'. பின்னர் மூக்கில் இருந்த கையை எடுத்து, இரண்டு கைகளாலும், தண்ணீரை மேல் நோக்கித் தள்ளிக் கொண்டு, அவள் கீழ் நோக்கிப் போனாள். கைகளிரண்டால் தலையைக் கோதி விட்டாள். கால்கள் இரண்டையும் தண்ணீருக்குள் மேலும் கீழுமாக உதைத்து அழுத்திக் கொண்டே உடம்பு முழுவதையும் தேய்த்து விட்டாள். மாரிமுத்து நாடார் பிராந்தனை அதட்டுவது அவளுக்குக் கேட்டது.


"சீக்கிரமா ஆவட்டும். இன்னுமா குளிக்க? ஏல, வெள்ளைச்சாமி! இங்க யாமுல வார? பொம்பிள குளிக்கிற இடத்துல ஆம்பிளக்கி என்னல வேலை? அங்கேய நில்லுல படவாப்பயல."


உலகம்மை நெற்றியில் விழுந்த முடிகளைப் பின்புறமாக விலக்கிக் கொண்டு, மூலப்படிக்கு வந்து, சேலையின் ஒரு நுனியைப் பிழிந்து, கசக்கிவிட்டு, பிறகு அதைக் கட்டிக் கொண்டே இன்னொரு முனையை அலசிக் கொண்டிருந்த போது, மாரிமுத்து நாடார் எட்டிப் பார்த்தார். அவளுக்கு வெட்கமாக இருந்தது.


"இன்னுமா முடியல? சீக்கரம்..."


"நீரு போம் மாமா. நான் பின்னாலயே வாரேன்."


"நீ எனக்குச் சொல்லித் தாறியோ. நல்லாயிருக்கு. நான் போயிட்டா, நீ வாரத்துக்குள்ளே ராகுகாலம் வந்துடும். உம் சீக்கிரம். அழுக்குத் தீர குளிச்சியளும் இல்ல, ஆச தீர..."


மாரிமுத்து நாடார் சொல்ல வந்ததை, இடம், பொருள், ஏவல் தெரியாமல் சொல்லப் போறோமே என்று நினைத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டார்.


உலகம்மையும், மாரிமுத்து நாடாரும் கரைக்கு வந்து விட்டார்கள். குளத்தின் தெற்கு எல்லையான கைக்கண்டார் கோவிலில் இருந்து புறப்பட்ட அவர்கள், வடக்கு எல்லையான உதிரமாடசாமி கோவிலை உற்றுப் பார்த்தார்கள். இரண்டு கிலோமீட்டர் தேறும். 'இவ்வளவையும் ராகுகாலம் வாறதுக்குள்ள நடந்திட முடியுமான்னு' கணக்குப் பார்த்துக் கொண்டே மாரிமுத்து நாடார் முன்னால் நடக்க உலகம்மை எதுக்காக கூப்பிடுகிறார் என்று புரியாமல் பின்னால் போனாள்.


வெடவெடன்னு முள் தைக்கிறது மாதிரி பேசும் மாரிமுத்து நாடாரும் அவளிடம், பாசத்தோடு பேசிக் கொண்டு வந்தார்.


"ஏந்தாயி, பீடி சுத்துறத விட்டுட்ட...?"


ஏஜெண்டைப் பற்றிச் சொல்லலாமா என்று உலகம்மை நினைத்தாள். பிறகு, விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாமென்றும், ஏஜெண்ட் அவரின் சொந்தக்காரன் என்பதாலும் பேசாமல் நடந்தாள்.


"ஏம்மா, பீடிய விட்டுட்ட..."


"ஒரே இடத்துல இருந்தா, காலு பெருச்சாளி பத்திப் போவுது மாமா; இந்த வயசுல ஓடியாடி வேல பாக்கணுமுன்னு நெனைச்சேன்."


ஊரை நெருங்க நெருங்க, அவர் நடையில் வேகம் தெரிந்தது. உலகம்மையும் மான்குட்டி மாதிரி துள்ளிக் கொண்டும், கன்றுக்குட்டி மாதிரி பாய்ந்து கொண்டும், மாராப்புச் சேலை காய்ந்து விட்டதா என்று எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டும் நடந்தாள்.


"வேகமா நடம்மா" என்றார் நாடார்.


மாரிமுத்து நாடார் சகஜமாகப் பேசியதால், உலகம்மையின் இயல்பான குறும்புத்தனம் வெளியே தலைகாட்டியது.


"அகலக் கால் வச்சா, ஆபத்தாச்சே மாமா."


உலகம்மை அப்படிச் சொன்னாலும், அகலமாகத்தான் கால் வைத்தாள்.

----------------