அத்தியாயம் 1

66.12k படித்தவர்கள்
36 கருத்துகள்

விசிறி வாழை - குருத்து ஒன்று


ராஜா!......


மாடியிலிருந்து ஒலித்தது அந்த அதிகாரக் குரல். கண்ணியமும் கம்பீரமும் மிக்க அந்தக் குரலுக்குரியவரின் பெயர் பார்வதி; குரலினின்று பார்வதியின் உருவத்தை - நிறத்தை அழகை - வயதைக் கற்பனை செய்ய முயலுகிறோம். முடிய வில்லை.


இன்னும் சிறிது நேரத்தில், அந்தக் கன்னிப் பெண் - இல்லை. வயதான மங்கை,- ஊஹம், குமாரி பார்வதி, அதுவும் சரியில்லை - பின் எப்படித்தான் அழைப்பது? சாரதாமணிக் கல்லூரியின் தலைவி டாக்டர் குமாரி பார்வதி, அது, தான் சரி - இப்போது கீழே இறங்கி வரப்போகிறாள். அப்போது நேரிலேயே பார்த்து விடலாம்.


மேஜை மீது வைக்கப்பட்டுள்ள காப்பி ஆறுவது கூடத் தெரியாமல் அந்தப் புத்தகத்திலுள்ள சில வரிகளில் மனத்தைச் செலுத்தி அவற்றையே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அவளை அவ்வளவு தூரம் கவர்ந்து விட்ட அந்தப் புத்தகம் வேறொன்றுமில்லை. 'பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ்' என்னும் நூல் தான்.


பார்வதி தற்செயலாகத் தலை நிமிர்ந்தபோது எதிரில் ஆறிக் கொண்டிருக்கும் காப்பியைக் கவனித்தாள். சாப்பிடுவதற்குப் பக்குவமாக இருந்த சூடு இப்போது அதில் இல்லை. ஆறிப் போயிருந்தது. ஆயினும் அவள் அதைப் பொருட் படுத்தாமல் எடுத்துக் குடித்தாள். அவள் பார்வை பல கணியின் வழியாக ஊடுருவிச் சென்று சற்றுத் தூரத்தில் தெரிந்த சாரதாமணிக் கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் பதிந்தது. அந்த வெண்மையான தூய நிறக் கட்டடத்தைக் கண்டபோது அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்தன. எண்ணம் ஆறு மாதங்களுக்குப் பின் நோக்கிச் சென்று, அப்போது நிகழ்ந்த ஒரு காட்சியைச் சலனப் பட மாக்கி, மனத் திரைக்குக் கொண்டு வந்தது.


ஆறு மாதங்களுக்கு முன்புதான் பார்வதி - முதல் முறையாக அவரைச் சந்தித்தாள். அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, வார்த்தைகளைத் தராசிலே நிறுத்துப் போட்டுச் செலவழிக்கும் சிக்கனம், கல கல வென்ற குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு! - எல்லாம் நினைவில் தோன்றி நெஞ் சத்தை நிறைத்தன. அவள் தன்னுள் வியந்துகொண்டாள். ஒரு முறை அந்த ஹாஸ்டல் கட்டடத்தின் கம்பீரத்தைக் கண்ணுற்றாள். இருப்பது ஒரே நாள். நாளைக் காலைக்குள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்தாக வேண்டும். மாலையில் விழா ஒரே கோலாகலமாயிருக்கும். அவர் வந்து புதிய ஹாஸ்டல் கட்டடத்தைத் திறந்து வைப்பார். அழகாகப் பேசுவார். மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள், கலை நிகழ்ச்சியின் குதூகலத்துடன் ஆண்டு விழா இனிது முடிவுறும். அப்புறம்?... மறுநாள் திங்களன்று காலை வழக்கம் போல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்போது கலகலப்பெல்லாம் ஓய்ந்து, திருவிழாக் கோலம் கலைந்து பேரமைதி நிலவும் - இந்தக் காட்சியையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.


'ராஜா!''


மீண்டும் குரல் கொடுத்தாள் பார்வதி. பதில் இல்லை; பதில் கொடுக்க வேண்டியவன் அங்கே இல்லை.


கீழே சாம்பிராணிப் புகை கம்மென்று மணம் வீசி அந்தப் பங்களா முழுவதும் நெளிந்து வளைந்து அடர்த்தியாக மண்டியது. அம்மம்மா! என்ன மணம்! அந்தத் தெய்விக மணத்தை நுகரும்போது உள்ளத்தில் எத்தனை நிம்மதி பிறக்கிறது! முன்வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த கெடிகாரத்தின் பெண்டுலம் அமைதியாக வாசலாடிக் கொண்டிருந்தது.


பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், அன்னை சாரதா மணி தேவியாரும் ஹால் சுவரின் இன்னொரு புறத்தை அலங்கரித்தார்கள்.


’ஒரு வீட்டில் மாட்டப்பட்டுள்ள படங்களே அந்த வீட்டில் வசிப்பவர்களின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் காட்டும் சின்னங்கள்' என்று யாரோ எப்போதோ கூறிய தாக ஞாபகம்.


”ராஜா!...''


வீணையின் ரீங்காரம் போல் மூன்றாம் முறையாக ஒலித்தது அக்குரல்.


"ராஜா இல்லை அம்மா!... விடியற்காலை ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போனவர்தான். இன்னும் வரவில்லை. என்.ஸி.ஸி. போலிருக்கிறது...'' சமையல்காரி ஞானம் குரல் கொடுத்தாள்.


வாசல், 'போர்ட்டிகோ'வுக்கு முன்னால் துடிப்பாக வளர்ந்து கொண்டிருந்த விசிறி வாழையின் இரண்டொரு இலைகள் அசைவதைத் தவிர, அந்தப் பங்களாவுக்குள் வேறு சலனமே இல்லை. காம்பவுண்ட் கேட்டருகில் தேய்ந்து போன முக்காலியில் உட்கார்ந்திருந்தான் கூன் முதுகுப் பெருமாள். அவனுக்கு அந்தப் பங்களாவுக்குள்ளே, வெளியே நடக்கிற விவகாரம் எதுவுமே தெரியாது. காரணம், காது கொஞ்சம் மந்தம். முன்னெல்லாம், அதாவது அவனுடைய அறுபதாவது வயதில் இப்படியில்லை. இப்போது ஒரே டமாரச் செவிடு! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகம் ஒன்றும், அல்லி அரசாணி மாலையும், வயது முதிர்ந்து காலத்தின் சுழலிலே தாக்குண்டு, பழுப்பேறி,ஏடு நைந்து தொட்டால் துகளாக உதிர்ந்துவிடும் நிலையில் அவன் அறிவுத் தோழர்களாக அவனுடனேயே இருந்து கொண்டிருந்தன. பெருமாள் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். அது சர்விஸில் ஏற்பட்ட பழக்கம்! நரம்புகள் தளர்ச்சியுற்று உடல் முழுவதும் சுருக்கங்கள் கண்டு, முதுகில் கூன் விழுந்த பிறகும் அவனை வெளியே அனுப்பிவிடப் பார்வதியின் இளகிய மனம் இடம் தரவில்லை.


கல்லூரியின் சேவகனாக ஐம்பது ஆண்டுக்காலம் தொண்டாற்றிய அந்தத் தொண்டுக் கிழவனை அநாதரவாக விட்டு விட மனமின்றித் தன்னுடைய பங்களாக் காவலனாக அமர்த்திக் கொண்டாள்.


சாப்பாட்டு ஹாலில் ராஜாவுக்கும் பார்வதிக்கும் மணை போட்டுத் தயாராக வைத்திருந்தாள் ஞானம். மணி ஒன்பதரை ஆயிற்று. தினமும் இதற்குள் சாப்பிட்டு முடிந்திருக்கும். இன்று கொஞ்சம் லேட். ராஜா வந்தால் சாப்பிட உட்கார வேண்டியது தான். அது ஏனோ, பார்வதிக்கு ராஜா இல்லாமல் தனித்துச் சாப்பிடத் தோன்றவில்லை. பழக்கமும் இல்லை. ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது, பெருமாளுக்கு அல்ல. வேப்பமரத்து நிழல் அவனை நல்ல உறக்கத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது. ராஜா அவனை ஏக வசனத்தில் திட்டிக்கொண்டே ஸ்கூட்டரை நிறுத்திக் கீழே இறங்கிக் கதவைத் தானே திறந்துகொண்டு உள்ளே சென்றான். காலையில் செய்த 'கசரத்’தில் அவனுக்கு உடல் களைத்துப் போயிருந்தது. நல்ல பசி வேறு. சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த தக்காளி ரசத்தின் வாசனை, சாம்பிராணிப் புகையுடன் கலந்து வந்தபோது அவனுடைய பசியை மேலும் தூண்டியது.


வீட்டுக்குள் நுழையும் போதே ”அத்தை ! பசி! பசி!... வா அத்தை!'' என்று எக்காளமிட்டுக் கொண்டே சமையலறையை நோக்கி விரைந்தான். நொடிப் பொழுதில் காக்கி உடையைக் களைந்து, வேறு உடை மாற்றிக்கொண்டு மணையில் போய் உட்கார்ந்துவிட்டான்.


''தக்காளி ரசம் வாசனை மூக்கைத் துளைக்கிறதே! என்ன சமையல் இன்றைக்கு! அப்பளம் பொரித்திருந்தால் முதலில் கொண்டு வந்து போடு. அத்தை வருகிறவரை அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பசி தாங்கவில்லை. உஸ்ஸ்... இடியட்! பெருமாள்! நெற்றி முழுதும் நாமத்தைப் பட்டையாகத் தீட்டிக்கொண்டு......... உட்கார்ந்தபடியே எப்படித்தான் நாள் முழுவதும் தூங்க முடிகிறதோ அவனால்!...'' வார்த்தைகளைப் பொரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் ராஜா.


சமையலறையில் பச்சைப் பட்டாணியும் முட்டைக் கோஸும் எவர்ஸில்வர் வாணலியில் இளம் பதமாக வதங்கிப் பக்குவமாகிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது.


''அந்தக் கறியில் கொஞ்சம் கொண்டுவந்து போடு... பசி தாங்கவில்லை. அத்தையைக் காணோமே... அத்தே! அத்தே! நீ வரப் போகிறாயா.... நான் சாப்பிடட்டுமா?”


ஞானம் புகையப் புகைய கோஸ் கறியைக் கொண்டு வந்து பறிமாறினாள். அவசரமாக அதைச் சட்டென்று எடுத்து வாயில் போட்டுக்கொண்ட ராஜா, நாக்கைச் சுட்டுக் கொண்டு சூடு பொறுக்காமல் திணறிப் போய் ''பூ! பூ!” என்று வாய்க்குள்ளாகவே ஊதிச் சுவைத்துக் கொண்டிருந்த இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த பார்வதி, சிரிப்பை அடக்கிக் கொண்டவளாய், ”ஏண்டா! ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லையா? உனக்காக நான் இத்தனை நேரம் காத்திருந்தேனே, நான் வருவதற்குள் என்ன அவசரம் வந்து விட்டது உனக்கு?''


ராஜா பதில் கூறவில்லை. பதில் கூறும் நிலையில் இல்லையே அவன்!


துல்லியமாக, எளிமையாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு கல்லூரியின் பிரின்ஸிபால் என்று கூறுவதற்குரிய வயதோ, தோற்றமோ, ஆடம்பரமோ அவளிடம் காணப்படவில்லை. அவளுடைய ஆழ்ந்த படிப்பும், விசாலமான அறிவும் அவளுடைய எளிமையான அடக்கமான தோற்றத்தில் அமுங்கிப் போயிருந்தன. நாகரிகம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் தங்களை அலங்காரம் செய்து கொண்டு வரும் அவலட்சணங்களைக் காணும்போதெல்லாம், அந்த அநாகரிகமான பண்பற்ற கோலங்களைக் கண்டிக்கத் தவறியதில்லை அவள்.

"ஏண்டா கறியைச் சுடச் சுட விழுங்கி விட்டாயா? அவசரக் குடுக்கை! ஆத்திரப்பட்டால் இப்படித்தான் ஆகும்...'' பார்வதி தன் செல்ல மருமகன் ராஜாவை நாசூக்காகக் கண்டித்தபடியே மணைமீது அமர்ந்தாள்.


''அதற்காக ஆறிப் போகும்படியும் விடக்கூடாது அத்தை! அப்போது ருசியை இழந்து விடுவோம்'' என்றான் ராஜா.


பார்வதிக்குச் சுருக்கென்றது.


’அளவுக்கு மீறிக் காலம் கடத்துவதும் கூடாது தான்.... ராஜா எதை மனத்தில் எண்ணிக்கொண்டு இப்படிச் சொல் கிறான்? இவனுக்குத் திருமணம் செய்யும் காலத்தைக் கடத்தி விடக் கூடாது என்று எச்சரிக்கிறானா? அல்லது...'


காலையில் மேஜை மீது ஆறிக்கிடந்த காப்பியை அருந்தும் போது கூட அவளுக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. சிந்தனையில் லயித்துக் காப்பியின் ருசியை இழந்து விட்டது கால தாமதத்தினால் நேர்ந்த இழப்புத்தானே?


'ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றின் சுகத்தைப் பெற முடியும். எதை அடைய விரும்புகிறோமோ, எந்த மாபெரும் காரியத்தைச் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தக் காரியமே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும்போது மற்ற இன்பங்களெல்லாம் அற்பமாகி விடுகின்றன. உலகத் தில் அரும் பெரும் காரியங்களைச் சாதித்தவர்கள், சாதிப்ப வர்களின் வாழ்க்கையைத் துருவினால், அவர்களின் சரித்திரத்தை ஆராய்ந்தால் இந்த உண்மை நமக்குப் புலனாகாமற் போகாது. சிற்சில சமயங்களில் என்னை நான் மறந்து விடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதனால் என் வாழ்க்கையில் நான் பெறவேண்டிய இன்பத்தைப் பெறத் தவறி விட்டேனா? காலம் கடந்து போய் விட்டதா?


பார்வதியின் சிந்தனையைக் கலைத்தான் ராஜா.


”அத்தை! இந்தச் செவிட்டுப் பெருமாளை எதற்காகத் தான் கேட்டில் உட்கார வைத்திருக்கிறாயோ? காதுதான் கேட்கவில்லை யென்றால் கண்களையும் மூடிக்கொண்டு நிம்மதியாகத் தூங்கி விடுகிறானே !”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


''பாவம்! அநாதைக் கிழவன். இந்த உலகத்தில் அவனுக்கு யாருமே இல்லை. அத்தோடு காது வேறு செவிடு. தன் வாழ்நாள் முழுவதும் நமது கல்லூரியிலேயே கழித்த வனைக் காப்பாற்றுவது நம் பொறுப்பு இல்லையா?...”


”கல்லூரி ஆண்டு விழா என்றைக்கு அத்தை?''


" நாளைக்குத்தான். விழாவைச் சிறப்பாக நடத்தும் பொருட்டு எங்கள் கல்லூரிக்கு மூன்று நாள் விடுமுறை விட்டிருக்கிறேன் ராஜா! உனக்கு இன்றும் நாளையும் லீவு தானே! நீயும் இப்போது என்னுடன் கல்லூரிக்கு வரலாம். நீ பெரிய என்ஜினீயர் படிப்பு படிப்பவனாயிற்றே! புதிய ஹாஸ்டல் கட்டடத்தை வந்து பார். அத்துடன் கல்லூரியில் 'டெகரேஷன்' வேலை நடந்து கொண்டிருக்கிறது. உனக்கு இதிலெல்லாம் ஒரு ’டேஸ்ட்' உண்டே !...''


”பெண்கள் கல்லூரிக்குள் நான் வரலாமா, அத்தை?''


''தாராளமாக வரலாம்; அங்கே இப்போது கலை நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். பாரதியும் இன்னும் சில பெண்களும் மட்டுமே வந்திருப்பார்கள். அவர்களைக் கண்டால் நீதான் வெட்கப்படுவாய்! ரொம்ப வாயாடிப் பெண்கள்!'' என்றாள் பார்வதி.


''பாரதியா? யார் அத்தை அது? எஸ். பாரதி, பி.எஸ்ஸி. ஸெகண்ட் இயர் ஸ்டூடன்ட்தானே! 'ஸ்லிம்' மாக சினிமா ஸ்டார் நூடன் மாதிரி இருப்பாளே, அந்தப் பெண்ணா?


''அவளை உனக்கு எப்படித் தெரியும், ராஜா?'' அத்தையின் விழிகள் வியப்பால் மலர்ந்தன.


"ரேடியோ க்விஸ் புரோக்ராமுக்கு அடிக்கடி வருகிற பெண்தானே? நானும் அவளும் க்விஸ் மாஸ்டரின் கேள்வி ஒன்றுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் பதில் கூறினோம். மாஸ்டர் அத்தப் பெண்ணுக்குத்தான் 'பாயின்ட்' கொடுத்தார். பிறகு என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே "லேடீஸ் ஃபஸ்ட்' என்று சொல்லிக் கண் சிமிட்டினார்.”


"அதென்னடா அப்படிப்பட்ட கேள்வி?" அத்தை கேட்டாள்.


”ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்வமிந்த நாட்டிலே........’ இந்தக் கவிதையைப் புனைந்த கவிஞன் யார்?' என்பது கேள்வி. பாரதி என்று நாங்கள் இருவரும் பதில் கூறினோம். ’சபாஷ்' என்று கூறிய மாஸ்டர், 'உன் பெயர் என்னம்மா?' என்று அந்தப் பெண்ணைக் கேட் டார் 'பாரதி' என்று நாணத்துடன் பதில் கூறினாள் அவள். அப்போது தான் எனக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியும்' என்று கூறினான் ராஜா.


'வெரி ஷ்ரூட் கர்ல்! இவ்வாண்டு சாரதாமணிக் கல்லூரி நடத்திய அழகுப் போட்டியிலும் கூட அவளுக்கே முதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதற்காக ஆண்டுவிழாவின் போது பரிசாகக் கொடுப்பதற்கென்று ஒரு பெரிய வெள்ளிக் கோப்பைகூட வாங்கி வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல. கலை நிகழ்ச்சியில் குறத்தி டான்ஸ் ஆடப்போகிறாள் அவள்......'' என்று கூறினாள் பார்வதி.


குறத்தி வடிவத்தில், குதூகலத்தின் எல்லையில், வாலிபத்தின் எக்களிப்போடு, ராஜாவின் மனக்கண் முன் தோன்றினாள் பாரதி.


ராஜா பால்பாயசத்தை உறிஞ்சிக்கொண்டே பாரதியின் அழகை அசை போடலானான்.


''உங்கள் இருவருக்கும் இன்னும் கொஞ்சம் பாயசம் போடுகிறேன்'' என்றாள் ஞானம்.


”என்ன ஞானம்? இன்றைக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் போட்டிருக்கிறாய்?'' என்று அப்போதுதான் விசாரித்தாள் பார்வதி.


"இன்றைக்கு உங்களுக்குப் பிறந்த தினமாயிற்றே! அது உங்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது, எந்நேரமும் கல்லூரியைப்பற்றிய நினைவுதான்.'' ஞானம் கூறினாள்.


”நாற்பத்தாறு வயதா ஆகி விட்டது எனக்கு? காலம் விளையாட்டாக ஓடிவிட்டது. கல்லூரிக்கும் எனக்கும் மூன்று வயது வித்தியாசம் தான். கல்லூரிக்கு நாளை ஐம்பதாவது ஆண்டு விழா. எனக்கு நாற்பத்தேழாவது பிறந்த நாள்.''


தான் வேறு, கல்லூரி வேறு என்ற உணர்வே அவளிடம் கிடையாது.


''இந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே லெக்சரராக வேலை பார்த்து, இப்போது அதன் தலைவியாகவும் ஆகி விட்டேன். ஹ்ம்ம். பெருமுச்சு ஒன்றை வெளியிட்டு மனத்தில் தோன்றிய எண்ணத்தை மறைக்க முயன்றாள்.


''அத்தை உனக்கு அடிக்கடி பிறந்தநாள் வர வேண்டும்'' என்று வாழ்த்திக் கொண்டே எழுந்தான் ராஜா.


"ஏண்டா நான் சீக்கிரத்திலேயே கிழவியாகிவிட வேண்டும் என்று வாழ்த்துகிறாயா?'' என்று கேட்டாள் பார்வதி.


''பாயசத்துடன் எழுந்து விட்டாயே, மோர் சாப்பிட வில்லையா ராஜா? என்று கேட்டாள் ஞானம்.


"ஹவுஸ் புல்!'' என்று கூறிக்கொண்டே திருப்தியுடன் ஓர் எப்பம் விட்டான் ராஜா.


"உனக்கு எப்போதும் இந்த சினிமாப் பேச்சுதான்.... சரி, போய் காரை எடு; காலேஜுக்குப் புறப்படலாம், என்று அத்தை கூறி முடிக்கு முன்பே, 'ஓ.கே!'' என்று வாசலுக்குப் பாய்ந்து ஓடினான் ராஜா.


பார்வதி வாசல் ஹாலுக்கு வந்து நின்று பகவானையும், தேவியையும் அண்ணாந்து பார்த்து வணங்கிவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள். கார் போர்ட்டிகோவை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், செவிட்டுப் பெருமாள் மரியாதையாக முக்காலியை விட்டு எழுந்து நின்றான்.


”அத்தை! இந்தச் செவிடனுக்கு நீ வெளியே போகிற நேரம் மட்டும் எப்படியோ மூக்கிலே வியர்த்து விடுகிறது. மற்ற நேரங்களில் காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவதில்லை. பெரிய வேஷக்காரன் அத்தை இவன்!... கையில் அல்லி அரசாணி மாலையைப் பாரு!'' என்றான் ராஜா.


”உன் மாதிரி 'ஹிட்ச்காக்' படம் பார்க்கச் சொல்கிறாயா, அவனை?”


ஹாரன் செய்தபடியே காரைக் கலாசாலைக் காம் பவுண்டுக்குள் செலுத்திப் பிரின்ஸிபால் அறைக்கு முன்னால் கொண்டு நிறுத்தினான் ராஜா. அந்த ஹாரன் சத்தம் கலாசாலையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று ஒலித்த போது, ஆங்காங்கே அதுவரை ’கேசமுசா' வென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் 'கப்சிப்'பென்றாகிப் 'பிரின்ஸிபால் வந்து விட்டார்' என்ற எச்சரிக்கை உணர்வுடன் வேலை செய்யத் தொடங்கினர்.


”ராஜா! புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் தான் மீட்டிங்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறப் போகின்றன. எலெக்ட்ரீஷியனை வரச்சொல்லி யிருக்கிறேன். அதற்கு முன்னால், காகிதப் பூத்தோரணங்களால் ஹாலை அழகுபடுத்த வேண்டும். ஹாஸ்டல் மாணவிகள் கலர் காகிதங்களில் விதம் விதமான தோரணங்கள் தொடுத்து வைத்திருக்கிறார்கள். நீ போய் அவற்றை யெல்லாம் அழகாகக் கட்டிவிடு. பாரதியும் ரிஹர்ஸலிலிருந்து வருகிற நேரமாயிற்று என் றாள் பார்வதி.


ராஜாவின் இதயம் உற்சாகத்தில் சீட்டியடித்தது. அடுத்த கணமே அவன் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் இருந்தான். ஹாலுக்குள் நுழையும்போதே அந்த வாயாடிப் பெண்களுக்கு முன்னால் சங்கோசமின்றிப் பழகவேண்டும் என்று தானாகவே எண்ணிக்கொண்டு, செயற்கையான அதட்டல் குரலில் மெள்ளப் பேச வேண்டிய விஷயத்தைக் கூட இரைந்து கத்தினான்.


''எங்கே தோரணமெல்லாம் ?............ எலெக்ட்ரீஷியன் வந்தாச்சா? ஆணி இல்லையா? சுத்தியல்....!... ” இப்படிப் பொதுவாக அதட்டல் போட்டுக் கொண்டே சுற்று முற்றும் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று ஒரு முறை கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டான். அங்கே யாருமே இல்லை : ஒரு மூலையில் குவிந்து கிடந்த காகிதத் தோரணங் களையும், இன்னொரு பக்கம் குத்திட்டு அடுக்கி வைக்கப் பட்டிருந்த மடக்கு நாற்காலிகளையும் தவிர......


ராஜா அந்த நாற்காலிகளில் ஒன்றை நடு ஹாலில் இழுத்துப் போட்டுக்கொண்டு, ’செட்டில்’ நட்சத்திரங்களின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு சினிமா டைரக்டரைப் போல் உட்கார்ந்துகொண்டான். அப்படி ஒரு நினைப்பு அவனுக்கு!


அடுத்த நிமிடம் 'கூடை முறம் கட்டுவோம், குறி சொல்லுவோம்' என்று ஊமை ராகத்தில் பாடியபடியே மறு நாள் ஆடப் போகும் குறத்தி நடனத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டவளாய்த் தன் தோழிகளுடன் ஹாலுக்குள் குதித்து வந்தாள் பாரதி. அங்கே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த ராஜாவைக் கண்டதும் அவள் முகம் வெட்கத்தால் சிவந்து போயிற்று !


"ஹல்லோ ! எஸ் பாரதி, பி.எஸ்ஸி, ஸெகண்ட் இயர், சாரதாமணி காலேஜ். டான்ஸ் ரொம்ப பிரமாதம்! கூடை முறம் அப்புறம் கட்டிக் கொள்ளலாம். இப்போது இந்தத் தோரணங்களை முதலில் கட்டி முடிக்கலாமா?'' ராஜா ரொம்பப் பழகியவன் போல் பேசினான்.


"இதோ நாங்கள் தோரணம் தொடுத்து ரெடியாக வைத்திருக்கிறோம்'' என்றாள் பாரதி.


"இவற்றை எப்படிக் கட்டுவதாம்? இங்கே யாருக்காவது ஏதாவது 'ஐடியா’ இருக்கா?'' என்று கேட்டான் ராஜா.


''என்ஜினீயர் படிக்கிறவர்களுக்கு இல்லாத ஐடியாவா?'' பாரதி வேடிக்கையாகக் கூறினாள்.


''என்ஜினீயர் என்றால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? ஒரு துறையில் புத்திசாலிகளாயிருந்தால் அவர்களுக்கு உலகத்திலுள்ள அத்தனை விஷயங்களும் தெரிந் திருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியானால் சர்ச்சிலுக்கு வேஷ்டி கட்டத் தெரியாது. குருஷ்காவுக்கு ஹாரிகாம்போதி பாடத் தெரியாது'' என்றான் ராஜா.


இந்த ஹாஸ்யத்துக்கு பலமாகச் சிரித்தார்கள் பாரதியின் சிநேகிதிகள்! அந்தப் பெண்கள் சிரித்ததும் ராஜாவுக்குத் தலை கிறுகிறுத்தது.


சுவர் ஓரமாக ஒரு பெஞ்சை இழுத்துப் போட்டு, அதன் மீது ஒரு ஸ்டூலை எடுத்து வைத்து அதன் மீது ஏறி நின்று கொண்ட அவன், ''ஆணி எங்கே, சுத்தியல் எங்கே?'' என்று அதிகாரம் செய்தான்.


ஆணிகளையும் சுத்தியலையும் கொண்டு வந்தாள் பாரதி.


ராஜா அவளிடமிருந்து ஆணி ஒன்றை வாங்கிச் சுவரிலே வைத்துச் சுத்தியால் ஓங்கி ஓர் அடி அடித்தான். ஆணி வளைத்துக் கொண்டது !


வளைந்த ஆணியை எரிச்சலோடு கீழே எறிந்துவிட்டு, ”பரவாயில்லையே! கட்டடம் ரொம்ப ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. உங்க அப்பா கட்டிக் கொடுத்த கட்டடம்

அல்லவா?”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


”இது எங்கப்பா கட்டியதில்லை........ கொத்தனார்........”' என்றாள் பாரதி.


ஏதோ அபூர்வ ஹாஸ்யத்தைக் கேட்டு விட்டது போல் அந்தக் கட்டடமே இடிந்து விழுகிற மாதிரி சிரித்தார்கள் அந்தப் பெண்கள்.


”சரி, இன்னொரு ஆணியைக் கொடுங்கள்'' என்று பாரதியைப் பார்த்துக் கேட்டான் ராஜா.


பாரதி கொஞ்சம் வலுவான ஆணியாகவே எடுத்துக் கொடுத்தாள்.


அதைக் கையில் வாங்கியபடியே, ”முதல் முதல் ஆணியைக் கண்டு பிடித்தவர் யார்?” என்று ஒரு குவிஸ் கேள்வி போட்டான் ராஜா.


''முதல் முதல் சுத்தியலைக் கண்டு பிடித்த மேதாவி யார்?” என்று பதிலுக்கு இன்னொரு குவிஸ் கேள்வி போட்டாள் பாரதி.


''யார் கண்டு பிடித்திருந்த போதிலும், அவ்விரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பெரிய எதிரிகள்'' என்றான் ராஜா.


"அதெப்படி?'' என்று கேட்டாள் பாரதி.


”ஆணியைக் கண்டால் அதன் மண்டையில் அடிக்கிறது இந்தச் சுத்தியல். சுத்தியலைக் கண்டால் எதிர்த்து நிற்கிறது இந்த ஆணி. ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிகள்!


இப்படியே நீங்கள் சுவர் முழுவதும் ஆணி அடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் இன்னொரு புதிய ஹாஸ்டலே கட்ட வேண்டியதுதான்... தரையில் பாருங்கள், எத்தனை ஆணிகளை வளைத்துப் போட்டிருக்கிறீர்கள்?''


இன்னொரு ஆணியை வாங்கிப் பலமாக அடித்த ராஜா, "ஐயோ! என்று அலறியபடியே கீழே குதித்து இடது கையை உதறிக் கொண்டான். சுத்தியல் அவன் இடது கைக் கட்டை விரலை நசுக்கிவிடவே இரத்தம் பெருகிவந்தது.


கையிலிருந்து பெருகி வழிந்த ரத்தத்தைக் கண்டதும் பாரதி பயந்து போய்விட்டாள்.


அவன் கட்டை விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், சிநேகிதிகள் பக்கமாகத் திரும்பி ''ஃபஸ்ட் எய்ட் பாக்ஸ் ப்ளீஸ்” என்று பரபரத்தாள்.


'பாணிக்கிரகணம் செய்து கொடுக்கப் போவதாகப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு....... என்று அந்தப் பொல்லாத பெண்கள் கண் சிமிட்டியபடியே முதல் உதவிப் பெட்டியைக் கொண்டுவர ஓடினார்கள்.


பிரின்ஸிபால் பார்வதி தமது அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்தபோது டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது. ரிசீவரை எடுத்துப் பேசி முடித்ததும் மேஜை மீதிருந்த கல்லூரியின் பொன் விழா அழைப்பிதழ் அவள் கவனத்தைக் கவர்ந்தது. வழவழப்பான காகிதத்தில் 'சேதுபதி' என்ற பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட்டிருந்தன. பார்வதி ஒருமுறை அப் பெயரை நெஞ்சம் நிறையச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். "இந்தப் பெயரில் என்ன மாய சக்தி இருக்கிறது? இதைக் காணும் போது எனக்கு ஏன் வியர்க்கவேண்டும்?' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அவள் சிந்தனை அவரையே சுற்றி வட்டமிட்டது.


''நாளை விழாவில் இவரை எவ்வாறு அறிமுகப்படுத்திப் பேசுவது? சுருக்கமாக அழகாகப் பேச வேண்டும். வளவளவென்று பேசினால் அவருக்குப் பிடிக்காது. பேசும்போது குரலில் தடுமாற்றம் இருக்கக்கூடாது. நடுக்கம் தொனிக்கக் கூடாது.''


பார்வதிக்குக் கூட்டமோ சொற்பொழிவோ புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ கூட்டங்களில் எவ்வளவோ முறை பேசியிருக்கிறாள். அறிவாளிகளின் பாராட்டுதல்களை யும் கரகோஷத்தையும் கூடப் பெற்றிருக்கிறாள். ஆனால் நாளைக்குப் பேசப் போவதைக் குறித்து எண்ணும்போதே அவளுக்குச் சற்று யோசனையாக இருந்தது.


வெண்மையான மல்லிகை மலர்களால் சுமக்க முடியாத அளவுக்ருப் பெரிய மாலையாகக் கம்பீரமான அவர் உருவத்துக்கு ஏற்ற முறையில் அழகாகத் தொடுத்துக் கொண்டு வரச் சொல்லி, அறிமுகப் பேச்சு முடிந்ததும்....


...'' முடிந்ததும் '' என்று பயங்கரமாக ஓர் எதிரொலி எழுந்தது. பார்வதி பயந்து போய்ச் சுற்றுமுற்றும் பார்த் தாள். வேறு ஒருவருமில்லை. அவள் உள் மனமேதான்!


அறிமுகம் முடிந்ததும் அவர் கழுத்தில் மாலையைச் சூட்ட வேண்டும். யார் சூட்டுவது? தன் உள்ளத்தின் அடி வாரத்தில், ஏதோ ஓர் அற்ப ஆசை நிழலாடுவதைப்போல் உணர்ந்தாள். அதுவரை தன் வாழ்நாட்களில் அனுபவித் தறியாத புதுமையான உணர்வு அது.


யாரைக் கொண்டு அவருக்கு மாலை சூட்டுவது என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை அவளுக்கு.


திடீரென்று கள்ளத்தனமாகத் தன்னுள் புகுந்து குருத்து விடத் தொடங்கியிருக்கும் அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடத் துணிந்தாள்; முடியவில்லை.


அந்தத் தங்க எழுத்துகள் மீண்டும் அவள் கவனத்தை ஈர்த்தன. அதைக் கண்ணுற்ற போது, ஆறு மாதங்களுக்கு முன் அவரைக் காணச் சென்றபோது நிகழ்ந்த விவரங்க ளெல்லாம் மறுபடியும் நினைவுக்கு வந்தன.


அதற்கு முன் அவள் அவரைப் பார்த்ததே இல்லை. நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். ’மிகவும் கண்டிப்பான வர்; அதிகம் பேசமாட்டார். யாருக்கும் அவருடைய பேட்டி எளிதில் கிட்டிவிடாது' என்பதே அவரைப்பற்றி அவள் அறிந்திருந்த விஷயம்.


தான் அவரைக் காண வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினால் நன்கொடை விஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை எளிதில் யூகித்து விடுவார்.


''இப்போது அவசர ஜோலியிருக்கிறது. அப்புறம் வந்து பார்க்கச்சொல் என்று பதில் கூறி அனுப்பிவிடுவார் என்ற எண்ணத்துடனேதான் அன்று புறப்பட்டுச் சென்றான். அங்கே போனபோது முற்றிலும் நேர்மாறாகவே நடந்தது.


தன் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி அனுப்பி விட்டு, உள்ளம் படபடக்க உட்கார்ந்திருந்தாள் பார்வதி. ஒரு கண நேரம் கூட ஆகவில்லை. தங்களை வரச் சொல்கிறார்' என்று பியூன் வந்து அழைத்தபோது வியப்புத் தாங்கவில்லை அவளுக்கு.


பார்வதி உள்ளே செல்லும் போதே அவர், "வாருங்கள், உட்காருங்கள். தங்களைப்பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். கல்லூரியை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்'' என்று பெருமிதத்தோடு சிரித்தார்.


"தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆசியும் தான் முக்கியம். இப்போது கூடக் கல்லூரி விஷயமாகத்தான் தங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தங்கள் நேரத்தை வீணாக்க மனமில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஹாஸ்டல் ஒன்று கட்டுவதற்கு நிதி திரட்டிக் கொண்டிருக் கிறோம். அதற்குத் தங்களுடைய உதவியை எதிர்பார்க்கிறோம்,'' என்று மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை அப்படியே கூறி முடித்தாள் பார்வதி.


''எனக்கு அதைப்பற்றியெல்லாம் இப்போது சிந்திக்க அவகாசம் இல்லை. நேரம் கிடைக்கும்போது நானே தங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்'' சேதுபதி நாலே வார்த்தைகளில் நடக்கென்று பேட்டியை முடித்து விட்டார். பார்வதிக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நன்கொடை இல்லையே என்பதல்ல; பேட்டி இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றுதான்.


அவரிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. ஆயினும் வணக்கம் என்று கூறி விடைபெற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.


அந்தத் தங்க எழுத்துக்களை உற்றுப் பார்த்தபடியே யோசிக்கலானாள் பார்வதி. அன்று அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொள்ளும்போது அவரைப் பிரிந்து செல்லவே அவளுக்கு மனமில்லை. இதுவரை அவள் யார் யாரையோ, எத்தனை எத்தனையோ அறிவாளிகளை, பிரமுகர்களை, தனவந்தர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறாள். அப்போதெல்லாம், ஏற்படாத வருத்தம் இவரைப் பிரியும்போது மட்டும் ஏன் ஏற்படவேண்டும்? இந்தக் கேள்விக்கு அன்று அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஏன் இன்றும் இன்னமும் கிடைக்கவில்லை.

----------------