அத்தியாயம் 1

15.94k படித்தவர்கள்
2 கருத்துகள்


குறிஞ்சி மலர்
13

பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்

காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?

      -- குண்டலகேசி


வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில் கடிகாரத்தையும் மனதில் ஆசைகளையும் கட்டிக்கொண்டு எதற்கோ, எங்கோ விரைவாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் கூட்டம் பெருகியும், தனித்தும், பொங்கியும், புடைபரந்தும், வற்றாமல், வாடாமல் உயிர்வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிற துடிப்பு, சந்தித்து விசாரித்துக் கொள்ளும் குரல்கள், பிரிந்து விடைபெறும் குரல்கள், கடைகளின் வியாபாரம், பேரம் பேசுதல், கார்கள், ரிக்ஷா, குதிரை வண்டிகள் ஓடும் ஒலிகள் - வாழ்க்கையை அஞ்சல் செய்து ஒலி பரப்புவது போல் ஒரு தொனி, இந்த வீதியில் கண்ணை மூடிக் கொண்டு நிற்பவர்களுக்குக் கூடக் கேட்கும்.


அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. இந்தக் கலகலப்பான வீதியில் இரு சிறகிலும் பொய்கள் பூத்து மின்னுவதுபோல் விளக்குகள் தோன்றின. மனத்தில் சிந்தனை முறுக்கேறி நிற்கிற சில சமயங்களில் அரவிந்தன் அச்சகத்து வாசலில் நின்று ஒருவிதமான நோக்கமுமின்றிக் கவின்கண்களால் இந்தக் காட்சிகளைப் பருகிக் கொண்டிருப்பது வழக்கம். அன்று அவனால் நெடுநேரம் அப்படி நின்று வீதியின் அழகை அனுபவித்து நோக்க முடியவில்லை. உள்ளே அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறையக் கிடந்தன. அன்று காலையில் தான் அவன் வெளியூரிலிருந்து வந்திருந்தான். ஏறக்குறைய நண்பகல் வரை திருப்பரங்குன்றம் சென்று பூரணியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதில் நேரம் கழிந்துவிட்டது. பின்பு மாலையில் அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தோடு வரவு செலவுக் கணக்கு, புதிய அச்சு இயந்திரங்கள், இவைபற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டான். திருத்த வேண்டிய அச்சுப் பிரதிகள் குவிந்திருந்தன. உடனிருந்து அச்சுப் பிரதிகளை ஒப்புநோக்கிப் படிப்பதற்கும் உதவுவதற்கும் முருகானந்தத்தை வரச் சொல்லியிருந்தான் அவன். இரவு ஒன்பது மணிக்கு மேல் முருகானந்தத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் விழித்திருந்து வேலைகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த அரவிந்தன் முருகானந்தத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.


முருகானந்தம் தையல் கடையைப் பூட்டிவிட்டுச் சாவிக் கொத்தை விரலில் கோத்துச் சுழற்றிக் கொண்டே வந்து சேர்ந்த போது மணி ஒன்பதே முக்கால்.


"இங்கே வேலை முடிய அதிக நேரம் ஆகும். நீ சாப்பிட்டாயிற்றா முருகானந்தம்?" என்று கேட்டான் அரவிந்தன்.


"அதெல்லாம் வரும்போது ஓட்டலில் முடித்துக் கொண்டு தான் வந்தேன். உன்னை நம்பி இங்கே வந்தால் நீ நாலு நிலக்கடலைப் பருப்பையும் பாதி வாழைப் பழத்தையும் கொடுத்துப் பட்டினி போடுவாய். முன்னெச்சரிக்கையாக நானே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்துவிட்டேன். படுக்கை இங்கே தான். வீட்டுக்குச் சொல்லியனுப்பியாயிற்று" என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினான் முருகானந்தம். அவனுடைய வீடு பொன்னகரத்தின் நெருக்கமான சந்து ஒன்றில் இருந்தது. முருகானந்தத்தின் குடும்பத்தில் அத்தனை பேரும் உழைப்பாளிகள். தாயார், தகப்பனார், சகோதரி மூவருக்கும் மில்லில் வேலை. அவன் தான் அந்த வழியிலிருந்து சிறிது விலகித் தையில கடை வைத்திருந்தான். உள்ளங்கை அகலத்துக்கு ஓர் இடத்தில் ஒரே தையல் இயந்திரத்தோடு அந்தக் கடையைத் தொடங்கினான் அவன். தொடக்கத்தில் அளவு எடுப்பதிலிருந்து பித்தான்களுக்குத் துளை போடுவதுவரை எல்லா வேலைகளையும் ஒரே ஆளாக இருந்துகொண்டு செய்தவன், திறமையாலும் சுறுசுறுப்பாலும் படிப்படியாக வளர்ந்து இன்று தன்னோடு இரண்டு தையற்காரர்களை உடன் வைத்துக் கொண்டு வேலை வாங்குகிற அளவு முன்னேறியிருந்தான். ஒவ்வோர் ஊரிலும் குறிப்பிட்ட தொழிலில் பலர் இருந்தாலும் சிலருக்குத்தான் அந்தத் தொழிலில் பெரும் புகழும் வந்து பொருந்தும். மதுரையில் அத்தகைய பேரும் புகழும் பொருந்திய சில தையற்காரர்களில் முருகானந்தம் முதன்மை பெற்றிருந்தான்.


அரவிந்தனின் நட்பும், பழக்கமும் முருகானந்தத்திற்குத் தமிழ்ப் பற்றும் அறிவு உணர்ச்சியும் அளித்திருந்தன. ஆவேசம் நிறைந்த மேடைப் பேச்சாளனாகவும் அவன் உருவாகியிருந்தான். பொன்னகரம், பிட்டுத்தோப்பு, ஆரப்பாளையும், மணிநகரம் ஆகிய பகுதிகள் மதுரை நகரத்தின் உழைக்கும் மக்கள் பெரும்பாலோர் வசிக்கும் இடம். கைகளில் உழைப்பும், மனத்திலும் வீட்டிலும் ஏழ்மையுமாக வாழும் அந்தத் தொழில் உலகத்தில் முருகானந்தம் ஒரு பிரமுகர் போல் மதிப்புப் பெற்றிருந்தான். இத்தனை சிறு வயதில் அவ்வளவு பெருமை வருவதற்குக் காரணம் அவன் மற்றவர்களோடு பழகுகிற எளிய முறைதான். கூசாமல் எங்கே துன்பத்தைக் கண்டாலும் புகுந்து உதவுகிற மனம், எந்த இடத்திலும் யாருக்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும் தனக்கே இழைக்கப்பட்டது போல் உணர்ந்து குமுறிக் கொதிக்கிற பண்பு, சுற்றித் திரிந்து பல இடங்களில் அலைந்து பலரோடு பழகும் இயல்பு, இவற்றால் முருகானந்தம் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியில் அப்படி ஒரு செல்வாக்கைப் பெற்றிருந்தான். வெளியில் இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்த அவன் அரவிந்தனிடம் பழகிய விதமே தனிப்பட்டது. கருத்துக்களையும் இலட்சியங்களையும் கற்கும்போது ஆசிரியனுக்கு முன் பணிவான மாணவனைப் போல் அவன் பழகினான். நண்பனாகப் பழகும்போது தோளில் கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பழகினான். உதவி செய்ய வருகிறபோது வேலைக்காரனைப் போல் கூப்பிட்டவுடன் வந்து உதவினான். ஆனால் அரவிந்தனுக்கும் முருகானந்தத்துக்கும் உள்ள வேறுபாடு இலட்சியங்களைச் செயல்படுத்துகிற விதத்தில் இருந்தது. ஒழுங்கையும் மனத் திடத்தையும் கொண்டு இலட்சியங்களை நிறைவேற்ற ஆசைப்பட்டான் அரவிந்தன். முரட்டுத்தனத்தையும் உடல் வன்மையையும் கொண்டு இலட்சியங்களை உருவாக்க ஆசைப்பட்டான் முருகானந்தம். அதற்கேற்ற உடல்கட்டும் அவனுக்கு இருந்தது.


அரவிந்தனுக்கு அச்சுப் பிரதிகள் படித்துத் திருத்துவதற்கு உதவும் நாட்களில் இரவில் நீண்ட நேரம் வரை கண்விழிக்க வேண்டியிருக்குமாகையால் முருகானந்தம் அவனோடு அச்சகத்திலேயே படுத்துக் கொண்டுவிடுவான். வேலை முடிந்து படுத்துக் கொண்ட பிறகும் படுக்கையில் கிடந்தவாறே பல செய்திகளைப் பற்றிப் பேசிவிட்டுக் கண்கள் சோர்ந்த பின்பே அவர்கள் உறங்குவார்கள். அன்றைக்கோ அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து வேலையைத் தொடங்கும்போதே ஏறக்குறைய இரவு பத்துமணி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போகிற கூட்டமும், முதல் ஆட்டம் விட்டு வருகிற கூட்டமுமாக வீதி பொலிவிழக்காமலிருந்தது.


"நீ கொஞ்சம் விரைவாகவே வந்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேன். நேரமாக்கிவிட்டாய் முருகானந்தம்... இந்தா, இதை நீ வைத்துக்கொண்டுப் படி. நான் சரி பார்க்கிறேன். முடிந்த வரை பார்த்துவிட்டுப் படுக்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கையெழுத்துப் பிரதிகளாகிய மூலத்தாள்களை முருகானந்தத்திடம் கொடுத்தான் அரவிந்தன்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


அவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு "தையல் கடையில் இன்றைக்கு ஒரு வம்பு வந்து சேர்ந்தது. துணியைத் தைத்துக் கொண்டு கடன் சொல்லுகிறவர்களையும் பேரம் பண்ணுகிறவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். காலையில் ஒரு வெளியூர் மனிதன் தைத்த துணியை வாங்கிக் கொண்டு போகிற போது மணிபர்ஸை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வாங்கிக் கொண்டு போக வருவானோ என்று நானாகவே சிறிது அதிக நேரம் காத்திருந்தேன். வழக்கமாக வருகிற மனிதனுமில்லை அவன். ஆனால் எனக்குக் கடையின் நாணயமோ, பேரோ கெட்டுவிடக் கூடாதென்று பயம். அதுதான் காத்துப் பார்த்தேன். ஆள் வரக்காணோம். பையைத் திறந்து பார்த்தால் ஏதோ கடிதம், புகைப்படங்கள். இரண்டு மூன்று நூறு ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் இருக்கின்றன. அதற்காகவே வழக்கமாகக் கடைப் பூட்டுகிற நேரத்துக்கு மேலும் திறந்து வைத்துக் கொண்டு இருந்தேன். இல்லாவிட்டால் ஒன்பது மணிக்கே இங்கு வந்திருப்பேன்" என்று தாமதத்துக்குக் காரணம் சொன்னான் முருகானந்தம்.


"சரி... சரி... நீ படிக்க ஆரம்பிக்கலாம். இன்னும் ஏதாவது கதையளந்து நேரத்தை வீணாக்காதே" என்று அரவிந்தன் துரிதப்படுத்தவே முருகானந்தம் பேச்சை நிறுத்திவிட்டுப் படிக்கத் தொடங்கினான். பூரணியின் தந்தை பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் எழுதிய 'தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை நெறி' என்னும் புத்தகத்துக்கான அச்சுப்பிரதிகள் அவை. முதல் திருத்தத்துக்கான காலி புரூஃப்கள்.


"கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்." சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. "காலி புரூஃபில் மட்டும் இவ்வளவு அதிகமாகப் பிழைகள் இருக்கின்றனவே? இதற்கு என்ன காரணம்?" என்று அரவிந்தனைக் கேட்டான் முருகானந்தம்.


"இந்தக் காலி புரூஃப் படிக்கும்போதெல்லாம் நான் நம்முடைய தமிழ்நாட்டுச் சமூக வாழ்வை நினைத்துக் கொள்வேன் முருகானந்தம். காலியில் திருத்தவேண்டிய பிழைகள் அதிகமாயிருக்கும். நம்முடைய சமுதாய வாழ்விலும் இன்றைக்குத் திருத்தம் பெறவேண்டிய தவறுகள் மிகுதி..." என்று முருகானந்தத்தின் கேள்விக்கு ஆழமான ஒப்பு நோக்கோடு மறுமொழி சொன்னான் அரவிந்தன்.


"உண்மை! ஆனால் இதைப் பேனாவினால் திருத்தமுடியாது அரவிந்தன். ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று பாரதி பாடினானே அப்படியொரு யுகப்புரட்சி ஏற்பட்டால் தான் விடியும். இன்றைக்குள்ள நம்முடைய சமுதாய வாழ்வில் எந்த அறநூல் மருத்துவராலும் இன்னதென்று கண்டுபிடித்துக் கூறமுடியாத எல்லா நோய்களிலும் சிறிது சிறிதாக இணைந்த ஏதோ ஒரு பெரிய நோய் இருக்கிறது. தீய வழியால் ஆக்கப் பெறுவோரைக் கண்டும் அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி பெறுதலைக் கண்டும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்கிறார்கள். சூடு சொரணையற்றுப் போயிருக்கிறார்கள்..." என்று முருகானந்தம் சொற்பொழிவில் இறஙகிவிட்டபோது, அரவிந்தன் குறுக்கிட்டு வேலையை நினைவு படுத்தினான்.


"தம்பி! இந்தக் கனல் கக்கும் கருத்துக்களை எல்லாம் இங்கேயே சொல்லித் தீர்த்துவிடாதே. பொன்னகரத்து மேடைகளிலும், பிட்டுத்தோப்புப் பொதுக்கூட்டங்களிலும் பேசுவதற்கு மீதம் வைத்துக் கொள். இங்கே வேலை நடக்க வேண்டும். நேற்று இரவெல்லாம் இரயிலில் பயணம் செய்து வந்த அலுப்பு என்னால் தாங்க முடியவில்லை. பன்னிரண்டு மணிக்காவது நான் படுத்தாக வேண்டும்."


முருகானந்தம் அடங்கினான், வேலை தொடர்ந்தது. வாயிற்புரம் யாரோ ஒரு பையன் வந்து தயங்கி நிற்பதை முருகானந்தம் பார்த்துவிட்டான்.


"வாசலில் யாரோ பையன் வந்து நிற்கிற மாதிரி இருக்கிறது. இங்கே அச்சகத்தில் வேலைப் பார்க்கிற பையன் எவனையாவது வரச் சொல்லியிருந்தாயா நீ?" என்று முருகானந்தம், அரவிந்தனைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, 'சார்' என்று குரல் கொடுத்தான் வெளியில் நின்ற பையன்.


"நான் யாரையும் வரச் சொல்லவில்லையே? ஒருவேளை தந்திப் பியூனோ என்னவோ? போய்ப்பார்" என்று அரவிந்தனிடமிருந்து பதில் வந்தது.


முருகானந்தம் வெளியே எழுந்துபோய் நின்று கொண்டிருந்த பையனை விசாரித்துக் கொண்டு வந்தான். "பையன் உன்னைப் பார்க்க வந்ததாகத்தான் கூறுகிறான். நீ போய் என்னவென்று கேள் அரவிந்தா."


அரவிந்தன் எழுந்து போய் பார்த்தான். பூரணியின் தம்பி திருநாவுக்கரசு அழுக்குச் சட்டையும் வாரப்படாத தலையுமாக நின்றுகொண்டிருந்தான்.


"என்னடா இந்த நேரத்தில் வந்தாய்?"


"ஒன்றுமில்லை, அக்கா உங்களிடமிருந்து ஒரு அஞ்சு ரூபாய் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாங்க... அவசரம்..." பையன் வார்த்தைகளைத் தட்டுத்தடுமாறிச் சொன்னான். அவன் விழித்துப் பார்த்த கண்களில் - பார்வையில் ஏதோ பொய்மை மருட்சியைக் கண்டான் அரவிந்தன்.


"ஏண்டா ஐந்து ரூபாய்க்காக இராத்திரிப் பத்து மணிக்குமேல் உன்னை இங்கே துரத்தினாளா உன் அக்கா. நான் காலையில் அங்கே வந்து அக்காவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேனே. அப்போது அக்கா என்னிடம் பணம் வேண்டுமென்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கையிலிருந்ததைக் கொடுத்துவிட்டு வந்திருப்பேனே."


பையன் மேலும் விழித்தான். அவன் நின்ற நிலை, கேட்ட விதம், உருட்டி உருட்டிக் கண்களை விழித்த மாதிரி எல்லாம் அரவிந்தனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் சட்டைப் பையிலிருந்து ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.


"இந்தா இதைக்கொண்டு போ. காலையில் நான் அக்காவைப் பார்க்க வருவேன்."


பதில் ஒன்றும் சொல்லாமல் நோட்டை வாங்கிக் கொண்டு நழுவினான் திருநாவுக்கரசு. சிறிது நேரம் அவன் போவதைப் பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்ற அரவிந்தன், "முருகானந்தம் கொஞ்சம் இங்கே வா..." என்றான். உள்ளிருந்து முருகானந்தம் வந்தான்.


"வேலை இருக்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நான் சொல்லுகிறபடி ஒரு காரியம் செய். இந்தப் பையனைப் பின் தொடர்ந்து போய்க் கண்காணித்துக் கொண்டு வா."


"யார் இந்தப் பையன்?"


"அதைப்பற்றி இப்போதென்ன? சொல்கிறேன். முதலில் நீ புறப்படு."

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


முருகானந்தம் புறப்பட்டான். அவனை அனுப்பிவிட்டு உள்ளே திரும்பி தானாகவே அச்சுப் பிரதிகளைத் திருத்தத் தொடங்கினான் அரவிந்தன். பூரணியின் தம்பியைப் பற்றிய சந்தேகத்தினால் கலவரமுற்றிருந்த அவன் மனம் அழகியசிற்றம்பலம் தத்துவச் செறிவோடு ஆராய்ந்து எழுதியிருந்த கருத்துக்கள் சில்வற்றை அச்சுப்பிரதியில் கண்டு அவற்றில் இலயித்தது. பண்பாடுமிக்க அவ்வுயரிய கருத்துக்களில் அவன் மூழ்கிவிட்டான் என்றே சொல்லலாம். "வாழ்க்கையில் இறுதி நாள் ஒன்றைத்தான் சாவு என்று உலக வழக்குப்படி கூறுகிறோம். ஆனால் மனித ஆயுளின் நிறைவான காலத்துக்குள் ஒவ்வொரு பருவத்தின் முடிவும் ஒரு சாவு. ஒவ்வொரு பருவத்தின் ஆரம்பமும் ஒரு புதுப்பிறவி. குழந்தைப் பருவம் அழிந்தால் பிள்ளைப் பருவம் பிறக்கிறது. பிள்ளைப் பருவம் அழிந்தால், வாலிபப் பருவம் பிறக்கிறது. வாலிபப் பருவம் இறந்தால் முதுமை பிறக்கிறது. இப்படி ஒரு பருவம் அழிந்து அடுத்த பருவம் பிறக்கும் காலம் மனிதனுடைய பழக்கங்களும் அனுபவங்களும் மாறுகிற காலம். இந்த மாற்றத்தினால் அழிவது மரணம். புதிதாகச் சேர்வது பிறவி. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து அழித்தவை மரணம்தான். ஆனால் அதற்காக நாம் அழுவதில்லை. அது நமக்குப் புரியாத தத்துவம்" என்று எழுதி குண்டலகேசியிலிருந்து ஒரு செய்யுள் எடுத்து உதாரணம் காட்டியிருந்தார் பேராசிரியர். உடனே அந்தச் செய்யுளையும் அந்த வாக்கியங்களையும் தனது டைரியில் குறித்துக் கொண்டு விட வேண்டுமென்ற ஆர்வம் அரவிந்தனுக்கு உண்டாயிற்று. பேராசிரியர் அழகிய சிறம்பலம் மட்டும் உயிரோடு இருந்து தமிழ்நாட்டின் சார்பில் மேற்கு நாடுகளில் பயணம் செய்திருந்தால் மேலைநாட்டார் மறுபடியும் ஒரு விவேகானந்தரைப் பார்த்திருப்பார்கள். அவருடைய ஆங்கில அறிவிற்கும், தமிழ் அறிவுக்கும், தத்துவ ஞானத்துக்கும் நாடு அவரை மிகவும் குறைவாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டு விட்டதே" என்று ஓர் ஏக்கம் அரவிந்தன் மனத்தில் அப்போது படர்ந்தது. அவன் நெட்டுயிர்த்தான். பழகத் தொடங்கிய புதிதில் ஒருநாள், "உங்கள் தந்தையார் விட்டுச் சென்ற பணிகளில் பெரும் பகுதி உங்களால் நிறைவேற வேண்டும். அதற்குரிய தகுதி உங்களிடம் இருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் குறைவின்றிக் கற்றிருக்கிறீர்கள். வாய்ப்பு வரும்போது உலகத்து வீதிகளில் தமிழ் மணம் பரப்பி முழக்கமிட உங்கள் குரல் தயாராயிருக்க வேண்டும்" என்று பூரணியிடம் சொல்லியிருந்தான் அவன். அப்போது அவள் சிரித்துக் கொண்டே "நீங்கள் என்னைப் பற்றி மிகப்பெரிய கனவுகள் காண்கிறீர்கள்" என்று தன்னடக்கமாகப் பதில் சொல்லிவிட்டாள்.


"அப்படிச் சொல்லக்கூடாது. உங்களால் அது முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது" என்று அப்போது தான் வற்புறுத்திச் சொன்னதை மீண்டும் நினைத்துக் கொண்டான் அரவிந்தன். அதன் பின் தங்களுடைய பழக்கம் அன்பும் நெருக்கமும் பெற்று இத்தகைய உறவாக மாறியதையும் நினைத்தான். தொடக்கத்தில் பூரணியின் உறவு இந்த விதத்தில் இப்படித் தன்னோடு நெருங்குமென அவன் எண்ணியதே இல்லை. அவனைப் பெருமை கொள்ள வைத்த உறவு இது. இத்தகைய சிந்தனையோடு பேராசிரியரின் அந்த வாக்கியங்களைத் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்த அவன் அச்சகத்தின் பின்புறமிருந்து ஏதோ ஓசை கேட்கவே திகைப்புடன் எழுதுவதை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்கலானான். யாரோ சுவரில் கால் வைத்து ஏறுகிற மாதிரி 'சர சர'வென்று ஓசைகேட்டது.


அச்சகத்தில் வலது பக்கம் ஓர் ஓட்டல், இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் ஓட்டலுக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. ஓட்டலின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த இடத்தில் நுழைகிற துணிவு வேறு யாருக்கும் இருக்க முடியாது. அச்சகத்தின் பின் பக்கத்துச் சுவர் அவ்வளவாகப் பாதுகாப்பானதில்லை. பழைய சுவர் என்ற குறை மட்டுமில்லை, அதிக உயரமில்லை என்ற குறையும் கொண்டது. பின்பக்கத்துத் தாழ்வாரத்தில் தான் விசாலமான இடம். தைத்தல், பைண்டிங் போன்ற வேலைகளுக்கு வசதியாகப் புத்தகத்துக்கென்று அச்சாகிய 'பாரங்கள்' அங்கேதான் அடுக்கப்பட்டிருந்தன. கொல்லைக் கதவுக்கு அடுத்தாற்போல் உள்பக்கம் மல்லிகை, அந்திமந்தாரைச் செடிகள் அடங்கிய ஒரு சிறு நிலப்பகுதி உண்டு. இந்த இடத்துக்கு அடுத்து உள்பகுதிதான் அச்சு யந்திரங்களும், 'பைண்டிங்' பகுதியும் அடங்கிய பரந்த தாழ்வாரம். இவ்விடத்தை நம்பிக்கையின் பேரில் காவல் பயமில்லாமல் வைத்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.


பக்கத்து ஓட்டல் வேலை நாட்களில் இரவு பன்னிரண்டு மணியானாலும் மாவரைக்கிற 'கடமுட' ஒலியும் பாத்திரம் கழுவுகிற ஓசையுமாகக் கொல்லைப்பக்கம் கலகலப்பாயிருக்கும். மறுநாள் ஓட்டலுக்கு வாராந்திர விடுமுறையாதலால் அன்று அந்தக் கலகலப்பு இல்லை. அரவிந்தன் தயங்கிக் கொண்டு நிற்கவில்லை. வாசற்கதவை உள்பக்கமாகத் தாழிட்டுவிட்டுக் கொல்லை பக்கம் விரைந்தான். நீண்ட வீடு அது. போகும்போதே ஒவ்வொரு பகுதிக்கும் உரிய மின் விளக்கைப் போட்டுக் கொண்டு போனான். அந்த அச்சகத்தில் இரவு நேரங்களில் தனியாக இருக்கிறபோது இப்படி ஓர் அனுபவம் இதுவரையில் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இன்று ஏற்படுகிறது. முதன்முதலாக ஏற்படுகிறது.


அவன் கடைசி விளக்கைப் போட்டுவிட்டுச் செடிகள் இருந்த பக்கம் நுழைந்தபோது மல்லிகைச் செடிகளின் ஓரமாகப் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்த ஆள் ஒருவன் திடுமென விளக்கு ஒளி பாய்வதையும் யாரோ வருவதையும் உணர்ந்து திரும்பி ஓடிச் சுவரில் ஏறிவிட்டான். "யாரது?" என்று பெருங்குரலில் இரைந்து கொண்டு விரைந்தான் அரவிந்தன். சுவருக்கு மேல் விளிம்பிலிருந்து ஒரு பழைய செங்கல் சரிந்து அரவிந்தனின் கால் கட்டை விரலில் விழுந்ததுதான் மீதம். ஆள் அகப்படவில்லை. இன்னாரெனக் கண்டுகொள்ளவும் முடியவில்லை. பின்புறம் குதித்து ஓடும் ஒலி கேட்டது. அவன் சுவர் ஏறின இடத்தில் கீழே மல்லிகைச் செடியின் அருகில் மண்ணெண்ணெயில் முக்கிய ஒரு துணிச்சுருளும் தீப்பெட்டியும் கிடப்பதைக் கண்டான் அரவிந்தன். வந்தவன் என்ன காரியத்துக்காக வந்திருக்க வேண்டுமென்று அதைக் கண்டபோதுதான் அவன் உணர்ந்தான். கொல்லையில் அந்த ஓசை கேட்டதும் வந்து பார்க்காமல் தான் இன்னும் சிறிது நாழிகைப்போது அலட்சியமாக இருந்திருந்தால் தாழ்வாரத்தில் அச்சிட்டு அடுக்கியிருக்கும் பேராசிரியரது நூற்பகுதிகளின் சாம்பலைத்தான் காண முடியும் என்ற பயங்கர உண்மை அவனுக்குப் புரிந்தது. இந்தவிதமான எதிர்ப்புகளும் பகைகளும் மீனாட்சி அச்சகத்துக்கும் அவனுக்கும் இப்போதுதான் முதன் முதலில் ஏற்படத் தொடங்குகிற புதிய அனுபவங்கள்.


பின்புறம் அந்த இருளில் கொல்லைப் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு துரத்த முடியாதென்று பட்டது அவனுக்கு. கதவுக்கு அப்பால் தரையில் கால் வைக்க முடியாத ஆபாசம்! வந்தவன் எல்லா ஆபாசங்களுக்கும் துணிந்துதான் வந்திருக்க வேண்டும். வாசல் பக்கம் ஓடி ஓட்டலில் யாரையாவது எழுப்பித் துணைக்குக் கூட்டிக்கொண்டு சந்து வழியாகப் போய்த் தேடிப் பார்க்கலாமா என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. அச்சகத்துக் கதவை அடைத்துப் பூட்டிக்கொண்டு ஓட்டலில் ஆளை எழுப்பிப் போய்த் தேடுவதற்குள் காலம் கடந்த முயற்சியாகி விடும். 'முருகானந்தம் வரட்டும் அவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு இரவு இங்கேயே தாழ்வாரத்தில் படுக்கலாம்' என்று துரத்தும் முயற்சியைக் கைவிட்டான் அவன். எவ்வளவுதான் துணிவு உள்ளவனாயிருந்தாலும் மனத்தில் இனம் புரியாத பயம் எழுந்தது. நடக்க இருந்ததை நினைத்துப் பார்த்தபோது உடல் நடுங்கியது. வந்தவனுடைய விருப்பம் நிறைவேறியிருந்தால் எவ்வளவு பேரிழப்பு ஆகியிருக்கும்? இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டு அச்சிட்ட நூல்களெல்லாம் அழிந்திருக்குமே.


வாயிற்புறக் கதவு தட்டப்பட்டது. விளக்குகளை அணைக்காமல் முன்புறம் வந்து கதவைத் திறந்தான் அரவிந்தன். முருகானந்தம் திரும்பியிருந்தான்.


"சுத்த காலிப்பையன். மங்கம்மாள் சத்திரத்துக்குப் பின் பக்கம் தெருவிளக்கின் அடியில் மூணு சீட்டு விளையாடப் போய்விட்டான். நீ ஒன்றும் சொல்லவில்லையே என்றுதான் பேசாமல் பார்த்துக் கொண்டு வந்தேன். இல்லாவிட்டால் முதுகில் பலமாக நாலு அறை வைத்து இங்கே இழுத்து வந்திருப்பேன். சிறு வயதிலேயே விடலைத்தனமாக இப்படிக் கெட்டுப் போகிற பிள்ளைகளின் தொகை ஊருக்கு ஊர் இப்போது அதிகரித்திருக்கிறது" என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தன் திகைத்தான். "பேராசிரியருடைய பிள்ளை இப்படி ஆவதா?" என்ற வேதனை வாட்டியது. வேதனையோடு அரவிந்தன் கூறினான், "முருகானந்தம்! சிரமத்தைப் பாராமல் மறுபடியும் ஒரு நடை போய் நான் சொன்னேனென்று அந்தப் பையனைக் கூப்பிடு. அடி, உதை ஒன்றும் வேண்டாம். காலையில் திருப்பரங்குன்றத்தில் பார்த்தோமே அந்தப் பெண்ணின் தம்பி அவன். பேராசிரியர் பையன். அவன் வந்து பணம் கேட்டபோதே எனக்குச் சந்தேகமாயிருந்தது. அதுதான் உன்னைப் பின்னால் அனுப்பினேன். விரைவாகப் போய் அவனை அழைத்து வந்துவிடு."


அரவிந்தன் வேண்டுகோளை மறுக்க இயலாமல் மறுபடியும் போனான் முருகானந்தம். அவன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாளின் கார் அச்சகத்து வாசலில் வந்து நின்றது. பூரணியும் அந்த அம்மாளும் காரிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் முகங்களில் கவலையும் பரபரப்பும் குடி கொண்டிருந்தன.


பூரணியின் தம்பியைப் பற்றி அறிந்ததனாலும் அச்சக்த்தின் பின்புறம் நடந்த நிகழ்ச்சியாலும் மனம் குழம்பிப்போய் இருந்த அரவிந்தன், அவர்களைப் பார்த்து மேலும் குழப்பமடைந்தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு வரவேற்றான். மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றி அரவிந்தனிடம் விவரமாகச் சொல்லி, என்ன செய்யலாம், எப்படித் தேடலாம் என்று கேட்டாள் பூரணி. அந்த நள்ளிரவில் தன்னைத் தேடிக்கொண்டு திருப்பரங்குன்றம் வந்து அந்த அம்மாள் கூறிய செய்தியைக் கேட்டபோது தன் தம்பி காணாமற்போனதும் கெட்டுத்திரிவதும் மறந்துவிட்டது அவளுக்கு. வயது வந்து பெண்ணைக் காணாமல் கலங்கித் தவிக்கும் அந்த அம்மாளின் துயரம் தான் பெரிதாகத் தோன்றியது. "என்னைப் போலவே இந்த அம்மாளும் ஆண்பிள்ளைத் துணையில்லாது குடும்பத்தைக் கட்டிக் காக்கிறவர்கள். எவ்வளவோ பணவசதியும், தைரியமும் உள்ளவர்கள்; இந்தச் சம்பவத்தினால் ஒன்றும் செய்யத் தோன்றாமல் இடிந்துபோய் என்னிடம் வந்து கதறினார்கள். நான் என்ன செய்வேன்? உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள்; மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள்" என்று அரவிந்தனிடம் கூறி உதவி கோரினாள் பூரணி. "போலீஸில் சொல்லிப் புகைப்படம் கொடுத்துத் தேடச் சொல்லலாமா? அல்லது செய்தித்தாள்களில் படத்தோடு விளம்பரம் போடலாமா?" என்று பதற்றத்தில் தோன்றிய வழிகளை எல்லாம் கூறினாள் அந்த அம்மாள். இப்படி ஒரு நிலையில் தாயின் வேதனை தாங்க முடியாதது.


"பதற்றப்படாதீர்கள் அம்மா! பெண் வயது வந்தவள் என்கிறீர்கள். இப்படியெல்லாம் படம், விளம்பரம், போலீஸ் என்று போனால் பின்னால் பெண்ணின் வாழ்க்கை வம்புக்கு இலக்காகிவிடும். நடந்ததை நீங்களே பெரிதுபடுத்தின மாதிரி ஆகிவிடும். நிதானமாக யோசித்து ஒரு வழி செய்யலாம்" என்றான் அரவிந்தன்.


பின்பு பூரணியைத் தனியாக உட்புறம் அழைத்துப் போய், "உன் தம்பி சங்கதி தெரியுமோ?" என்று தொடங்கி நடந்ததையெல்லாம் அரவிந்தன் சொன்னான். முருகானந்தத்தை அனுப்பியிருப்பதையும் கூறினான்.


"விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை" என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். "காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீஸ் லாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு லாரியில் ஏறிவிட்டான்" என்று முருகானந்தம் கூறியதும் "அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?" என்று முருகானந்தத்தை உட்கார்த்தி வைத்து விவரத்தைக் கூறினான் அரவிந்தன்.


--------------------------------