அத்தியாயம் 1

அத்தியாயம் 1
கிரிஜா காபித்தூளை அடைத்து, ஃபில்டரில் கொதி நீரை ஊற்றி விட்டு, ரொட்டித் துண்டுகளுக்கிடையில் ‘சீஸ்கறி’யைப் பொதிந்து, வாட்டும் கூட்டுக்குள் நெய் தடவி மூடித் தீயில் வாட்டுகையில் மணம் எட்டுருக்குப் பரவுகிறது.


“அம்மா, ஜமேதாரி வந்திருக்கா!” என்று அறிவித்துக் கொண்டு சாரு சமையலறைக்குள் வருகிறாள். “ஹை, எனக்குக் கொஞ்சம் சீஸ் கறிம்மா!” என்று கையில் அவள் அனுமதி இன்றியே எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஒடுகிறாள்.


“காலங்காத்தால, பல்லுக்கூடத் தேய்க்காம...சை!”


பன்னிரண்டு வயசுக்கு எந்தப் பொறுப்பும் தெரியாத தீனிப்பட்டறை! உடம்பு பக்கவாட்டில் வளாச்சி பெற்று ‘விகாரம்’ என்று சொல்லும் எல்லைக்குப் போயாகி விட்டது


“ஏ, கழுதை! குருவியை வேடிக்கை பார்க்கிறியே? வந்தனாவுக்கு வாசக்கதவைத் திறந்து விடு? உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும்!”


“பாட்டி ரூம்ல எழுந்து உக்காந்திண்டிருக்கா!”


இது எச்சரிக்கைக் குரல். பாட்டியின் அறையில் இருந்து மொட்டை மாடிக்கும், அவளுடைய குளியலறைக்கும் வரலாம். மொட்டை மாடியில்தான் ‘கச்சடா டப்பா’ எனப் பெறும் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சாப் பாட்டுத் தட்டுக்களில் இருந்து கழிக்கப் பெறும் கறிவேப்பிலை, முருங்கை சக்கை, பழத்தோல் போன்ற எச்சிற் குப்பைகள் இடம்பெறக் கூடிய குப்பைத் தொட்டி, உள்புறம் இடம் பெறக் கூடாது என்பது பாட்டியின் சட்ட திட்டம். கீழ்ப்புறம் விசையுள்ள மூடித்திறக்கக் கூடிய சுகாதாரமான குப்பைத் தொட்டிதான் என்றாலும் அதற்குரிய இடம் வெளிப்புற மூலை. அதை அன்றாடம் துப்புரவு செய்ய வரும் துப்புரவுக்காரியும் வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பாட்டியின் இன்னொரு சட்டம்.


வந்தனாவை “ஜமேதாரி” (ஜிம்மேதாரி) என்று சொன்னாலே கோபித்துக் கொள்வாள். ‘என் பேரைச் சொல்!” என்று ஆணையிடுவாள். அதுவும் நியாயம். அவள் குப்பை எடுத்துச் செல்பவளாகவா தோற்றமளிக்கிறாள்?


பளிச்சென்ற குங்குமப் பொட்டும், வாரிய கூந்தலும், சிறிதும் அழுக்கு ஒட்டாமல் பூத்துக் குலுங்கும் ஸல்வார் கமீஸுமாக, புத்தம் புதிய மலர் போல் இருக்கிறாள். கால்களிலுள்ள செருப்பைக்கூட வாயிலிலேயே கழற்றி விட்டுத் தான் நீண்ட நடை கடந்து வருகிறாள்.


தன் கைவாளியில் குப்பையைக் கவிழ்த்துவிட்டு, தொட்டியைச் சுத்தம் செய்ய, கிரிஜா தண்ணி கொண்டு வந்து ஊற்றுகிறாள். துப்புரவாக வடித்து, அடியில் ஒரு காகிதமும் போட்டுவிட்டு, துடைப்பமும் வாளியுமா வந்தனா போகிறாள்.


மணி ஆறரை அடித்தாயிற்று. பெரிய பெண் கவிதா இன்னமும் எழுந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு!


ஏழரைக்குள் வீட்டை விட்டுக் கிளம்பியாக வேண்டும்.


“சாரு, கவிய எழுப்பு! ‘அஞ்சுமணிக்கு எழுப்பு, அஞ்சரைக்கு எழுப்பு’ம்பா, எழுப்பினா எழுந்திருந்தாதானே?’


வேலைக்காரி வருவதற்கு ஒன்பது மணியாகும். அதற்குள் வந்தனா வந்துபோன இடத்தைத் தண்ணிர் தெளித்துத் துடைக்கிறாளா மருமகள் என்று கிழவி பார்த்துக் கொண்டிருப்பாள்.


கிரிஜாவுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று முள்ளாய் நெருட பெருக்கித் துடைக்கிறாள்.


வந்தனா ‘வாஷ்பேஷின்’ குளியலறை நெடுகிலும் நன்றாகச் சுத்தம் செய்வாள். ஆனால் இந்த மாமியாரின் ஆணை அவை எல்லாவற்றையும் மருமகளுக்கு ஒதுக்கி யிருக்கிறாள். குளித்து, மடியில்லாத சமையல் ஒன்று முடித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளின் தந்தை வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறார். அடுத்த வாரம் திரும்பி விடுவார். அதுவரையிலும் அந்த நெருக்கடிக்கு விடுதலை. குளிரலமாரியில் முதல் நாளைய குழம்பும் கூட்டும் இருக்கிறது. அவற்றைக் கொதிக்க வைத்து, சோறு மட்டும் குக்கரில் பொங்கி வைத்து, இவர்கள் சாப் பாட்டை முடிக்கலாம். பகலுக்குத் தான் சீஸ்கறி ஸாண்ட் விட்ச் பண்ணி டப்பிகளில் போட்டாயிற்று.


கடைக்குட்டி பரத்துக்கு எழுந்து வந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டாக வேண்டும், இவனுக்கு ஒன்பது வயது தான். பள்ளிக்கூடம் தொலைவிலில்லை.


“அம்மா, எனக்கு கிரெயான் கலர் வேணும். மிஸ் கொண்டு வரச்சொல்லி இருக்கா...”


“அதுக்கு இப்பத்தான் சொல்றதா? போனவாரம் ஒரு கலர் பாக்ஸ் வாங்கிக் குடுத்தேனே, அது எங்கே?”


சாரு எடுத்துண்டு போய் ஒடிச்சிட்டா...”

“பொய்...பொய்மா...இவன் என் ஜாமட்ரி பாக்ஸ்ை எடுத்து ஒடச்சி வச்சிட்டு பொய் சொல்றான்...”


இந்த மாதிரித் தகராறுகளைப் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் தான் கொண்டு வருவார்கள். இவர்கள் வெளியேறி சந்தடி அடங்கிய பின்னரே, மாமியார் காலைக் கடன்களை முடிக்க வருவாள்.


மூன்று படுக்கையறைகளும், இரண்டு குளியலறைகளும் கொண்ட இந்த முதல் மாடிக் குடியிருப்புக்குச் சுளையாக மூவாயிரத்தைந்நூறு வாடகை. இந்தியத் தலைநகரில், அரசுக் குடியிருப்புக்கள் முக்கியத்துவம் பெற்றவை. இந்த வாடகையை, அவர்களுக்காக அவன் சார்ந்திருக்கும் வியாபார நிறுவனம் கொடுக்கிறது. மூவாயிரத்தைந்நூறு ரூபாயை வீட்டு வாடகையாகக் கொடுக்கவும் இன்னும் பல வசதிகளை அளிக்கவும் முன்வரும் அளவுக்கு அவள் கணவனின் வாணிப மதிப்பு உயர்ந்தது...ஆனால்...?


பெண்கள் பள்ளி சென்ற பிறகு வந்து பார்க்கையில், மூத்த பெண் கவிதா பாட்டியின் குளியலறையில் துணிகளை விசிறி இருப்பதைப் பார்க்கிறாள். குளித்திருக்க மாட்டாள். சோம்பேறி. மாலையிலோ, இரவிலோ குளிப்பாள்... ‘க்ளோஸெட்’டை ஃப்ளஷ்’ செய்யக் கூடாது?


கிரிஜா ஆத்திரமும் அருவருப்புமாகச் சுத்தம் செய்கிறாள்.


மாமியாருக்குக், கெய்ஸ்ரைப் போட்டுவிட்டு, கடைக் குட்டிப் பையனைப் பள்ளிக்கு அனுப்பச் சித்தம் செய்கிறாள்.


மாமியார் காலைக் கடன்களை முடித்து, நீராடி வெளிவரக் குறைந்த பட்சம் முக்கால் மணியாகும்.


பரத்துக்குக் காலை நேரத்தில்சாப்பாடு இலகுவில் உள்ளே செல்லாது. பாட்டி, அப்பா சலுகையில் இன்னமும் குழந்தையாக, அம்மாவைச் சாதம் ஊட்டச் சொல்கிறான். அவனைக் கீழே தெருவிலிறங்கும் வரையிலும் புத்தகப் பை சுமந்து கொடுத்து, தெருக் கோடியில் செல்லும் வரை நின்று ‘டாடா’ காட்ட வேண்டும். தெருத் திரும்பினால் பள்ளியின் பஸ் வரும்.


பிறகு மேலே வந்து, மாமியாரின் தெய்வங்களுக்கு, முன் இடம் துடைத்து, கோலம் போட வேண்டும். கீழே, வீட்டுச் சொந்தக்காரன் மல்ஹோத்ரா, வாசலில் மலர்ந்த பிச்சி, மந்தாரை, ஒன்றிரண்டு செம்பரத்தை மலர்களைக் கொய்து வைத்திருப்பான். முதியவளின் ஆசாரங்களில் மிகுந்த மரியாதை உள்ளவன். அவனுக்கு எழுபது வயசிருக்கலாம். மனைவி இல்லை. மூன்று மகன்கள்-மருமக்கள் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகக் கீழ்ப் பகுதியில் வாழ்கிறார்கள்.


அவனுடைய மருமகள் ஒருத்தியும் மாமனாருக்கு வேலை வைக்க மாட்டார்கள். வாயிலில், மனிதர் நடமாட இடமின்றி ஒரு அம்பாஸ்டரும், மாருதியும் போர்த்துக் கொண்டு வீட்டுச் சொந்தக்காரரின் அந்தஸ்தைப் பறையடிக்கின்றன!


உதவுபடிக்கு, மூன்று பிள்ளைகளுக்கும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு நேபாளத்து வேலைக்காரன். அடுப்பு வேலை. மேல் வேலை எல்லாம் செய்வான். வேலைக்காரி நிருபா எட்டுமணிக்குத்தான் வருவாள்.


கிரிஜா குழந்தைகள் துணிகளைச் சேகரித்துக் குழாயடிக்குக் கொண்டு வருகையில, கீழே முற்றத்தின் பக்கம் இரண்டாம் மருமகள் நீண்ட வீட்டங்கியுடன் கை நகத்துக்குச் சிங்காரம் செய்து கொண்டிருக்கிறாள், ஒரே மகன் ‘டுன்’ பள்ளியில் படிக்கிறான்.


“குட்மார்னிங் ஆன்டிஜி...”


“குட்மார்னிங்” என்று சொல்லும் கிரிஜாவுக்குச் சிரிப்பு வரவில்லை.


அவளுக்கு இவளை ‘ஆன்டி’ என்று சொல்லும் அளவுக்கு வயது குறைவா? இல்லை, சொல்லப் போனால், அந்தப் பெண்கள் அனைவரும் மேற்கத்தியப் பூச்சு நாகரிகத்தில் மீதப்பவர்கள். குட்டை முடி, உதடு. நகங்களில் பளிர்ச் சிவப்பு, வெளியே செல்லும்போது உடுத்தும் சேலையிலும் அடக்க மில்லாத எடுத்துக்காட்டு மோகங்கள் என்று ஆடம்பரமாக வாழ்பவர்கள். ஆனால் ஒருத்தி கூட முழுசாகக் கல்லூரிப் பட்டம் எடுத்தவளில்லை. ஆனால் அவளுடைய தோற்றத்தில் கிரிஜாவின் எம். ஏ. பி. எட். பட்டம் இருந்த இடம் தெரியாமல் அழுந்தியே போய் விட்டது.


கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள நேரமில்லை என்பது முற்றிலும் உண்மையன்று. ஆனால் பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் மனமும் எங்கோ தொலைந்து விட்டன. இவளுடைய மடிச் சேலைத் துணிகள், மாமியாரின் ஒன்பது கஜ நார்மடிப் பட்டு எல்லாம் உயர நடையின் நீண்ட கொடி யில் காய்கின்றன. அதனால் தான் வந்தனா அங்கு வருவதற்குத் தடை.


கொம்பில் தன் சேலை-பாவாடை முதலிய துணிகளைக் கொண்டு போய் வெளியில் வைத்துக்கொள்கிறாள்.


நீராடி ஈரம் சொட்டும் சேலையுடன் மடித் துணிகளை எடுத்துக் கொண்டு தலை துவட்டிக் கொள்ள வேண்டும். ஈரக் கூந்தலைச் சுற்றிய துண்டும் மடிச் சேலையுமாக மாமியாருக்கு. உலர் புடவை கொண்டு போகிறாள் இன்னொரு குளியல றையில். --


அப்போது தான் பொட்டு வைத்துக் கொள்ள மறந்தது. நினைவுக்கு வருகிறது.


கண்ணாடியைப் பார்த்து அவசரமாக ஒரு பொட்டை, குங்குமச் சிமிழ் திறந்து தொட்டு வைத்துக் கொள்கிறாள். வயிற்றில் கபகபவென்று பசி, எரிச்சல் கிளர்ந்தெழுகிறது.


நறுக்கென்று சீஸ் பொதிந்த மொறு மொறு ஸாண்ட் விச்சை எடுத்துக் கடித்துக் கொண்டு, நாற்காலியில் சாய்ந்து சூடான காபியைச் சிறிது சிறிதாக ரசித்துப் பருகினால்.... வெட்டு!


“கிரி.. புடவை கொண்டு வரியாம்மா...?”


“இதோ வந்துட்டேம்மா!”


கைப் புடவை, துண்டு இரண்டையும் குளியலறைக் கதவடியில் கொண்டு வந்து நீட்டுகிறாள்.


பரங்கிப் பழமாகப் பழுத்துத் தொங்கும் மார்பும் வயிறும், ஈரத் துணிக்குள் ஒட்டித் தெரிய, லேசாகப் பூசியப் பூச்சுப் போல் வெண்முடி படர்ந்த தலையும், கிரிஜாவுக்குப் பார்த்துப் பழகிய இரக்கத்தைத் தோற்றுவிக்கும் வடிவம்.


கடந்த பதினேழு வருஷங்களாக இவளைப் பூச்சியாக்கி வைத்திருக்கிறாள் என்ற உணர்வும் கூடவே இணைந்து எரிச்சலின் இழையைத் தோற்றுவிக்கிறது.


சேலையைச் சுற்றிக் கொண்டதும் மெள்ளக் குளியலறையை விட்டு வருகிறாள். விபூதிச் சம்புடம், மடி நீர்ச் செம்பு எல்லாம் சுவாமி அலமாரிக்கு அருகில் வைக்கப்பட்டிருக் கின்றன.


“குழந்தை ஸ்கூலுக்குப் போயிட்டானா?”


“ம்...”


“ராத்திரியெல்லாம் லொக்கு லொக்குனு இருமித்தே, மருந்து குடுத்தியா?”


“ம்”


“விளக்கேத்தி வச்சுட்டுப் போ. இன்னிக்குக் கிருத்திகை யாயிருக்கு, துளிப் பாயாசம் வேணா வை...”

-------


விவாதங்கள் (7)