அத்தியாயம் 1

61. காதறாக் கள்ளன்
முன்னுரை

சில ஆண்டுகளுக்கு முன்னால் திசையெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். (மாவட்டம் என்பது ஜில்லாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை. தமிழ் வளர்த்த திருநெல்வேலியாதலால் 'மாவட்டம்' என்ற சொல்லை போட்டு வைத்தேன்) சாலைகள் வெகு மனோரம்யமாகயிருந்தன. வழியில் தோன்றிய ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு கால்வாயும் ஒவ்வொரு ரஸமான கதை சொல்லும் எனத் தோன்றிற்று. ஆனால் ஊரில் காற்றெனக் கடுகிச் சென்று கொண்டிருக்கையில் கதை கேட்பதற்கு நேரம் எங்கே?

நல்ல வேளையாக, சிற்றாறு ஒன்று எதிர்ப்பட்டது. அதற்குப் பாலம் கிடையாது. நதியில் இறங்கித்தான் போக வேண்டும். டிரைவர் சிற்றாற்றின் கரையில் வண்டியை நிறுத்தினான். அங்கே ஒரு விசாலமான மருத மரத்தின் அடியில் முறுக்கு வடையும், வெற்றிலை பாக்கும் விற்கும் ஒரு பெண் பிள்ளை தம் கூடைக் கடையுடன் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பெண் பிள்ளைக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் வீற்றிருந்தார். அவருடைய பெரிய மீசை நரைத்திருந்த போதிலும் நன்றாக முறுக்கிவிடப்பட்டிருந்தது. அவர் அப்பெண் பிள்ளையிடம் முறுக்கு வாங்கிக் கையினால் அரைத்துத் தூளாக்கி அதை வாயில் போட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்தபடியே எங்களில் ஒருவர், "ஏன் ஐயா, ஆற்றில் தண்ணீர் அதிகமா? கார் போகுமா?" என்று கேட்டார். அதற்குப் பெரியவர், "தண்ணீர் கொஞ்சந்தான்; முழங்காலுக்குக் கூட வராது" என்றார்.

இதைக் கேட்ட டிரைவர் வண்டியை ஆற்றில் இறக்கினான். பெரியவர் சொன்னது சரிதான். தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஆகையால் கார் சுலபமாகத் தண்ணீரைக் கடந்து போய்விட்டது. ஆனால் தண்ணீருக்கு அப்பால் நெடுந்தூரம் பரந்து கிடந்த மணலை காரினால் தாண்ட முடியவில்லை. சில அடி தூரம் போனதும் காரின் சக்கரங்கள் மணலிலேயே நன்றாய்ப் புதைந்து விட்டன. காரின் விசைகளை டிரைவர் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். பயங்கரமான சத்தங்கள் உண்டாயின. மணலும் புகையும் கலந்து பறந்தன. முதலில் சிறிது நேரம் சக்கரங்கள் இருந்த இடத்திலேயே சுழன்றன. அப்புறம் சுழலவும் மறுத்துவிட்டுப் பூரண வேலை நிறுத்தம் செய்தன. வண்டிக்குள் இருந்தவர்கள் இறங்கி வெளியே வந்தோம். எங்களாலேதான் வண்டி நகரவில்லை என்று நினைத்தானோ என்னமோ டிரைவர் நாங்கள் இறங்கியதும் மறுபடி ஒரு முறை பிரயத்தனம் செய்தான். அதுவும் பலிக்கவில்லை.

பிறகு டிரைவரும் காரிலிருந்து கீழே இறங்கினான். சிறிது நேரம் காரைச் சுற்றிப் பிரதட்சணம் வந்தோம். எங்களில் ஒரு ஹாஸ்யக்காரர் காருக்கு முன்னால் நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டு "அப்பா! காரப்பா! சரணம்! சரணம்!" என்றார். அதனாலும் அந்தக் கார் அசைந்துக் கொடுக்கவில்லை.

வெயிலில் சுடுகிற மணலில் என்னால் நிற்க முடியாது என்று நான் கோபமாய் சொல்லிவிட்டு ஆற்றின் தண்ணீரைத் திரும்ப காலினால் நடந்தே கடந்து கரைக்கு வந்தேன். மருத மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த பெரியவர் பக்கத்தில் சென்று மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தேன்.

"ஏன் ஐயா! இப்படிச் செய்யலாமா? கார் ஆற்றைக் கடக்காது என்று சொல்ல வேண்டாமா?" என்றேன்.

"அழகாயிருக்கிறது! தண்ணீர் முழங்கால் வரை கூட வராது என்று சொன்னேன். அப்படியேயிருந்ததா, இல்லையா? உங்கள் ஓட்டை மோட்டார் மணலிலே போகாது என்பது எனக்கு எப்படித் தெரியும்? நல்ல கதை! காதறாக் கள்ளன் மரகதவல்லியைக் குதிரையிலே ஏற்றிக் கொண்டு வந்ததனாலே தப்பிப் பிழைத்தான்! உங்கள் மாதிரி மோட்டார் காரிலே வந்திருந்தால் அகப்பட்டுக் கொண்டு விழித்திருப்பான்!" என்றார்.

நான் அப்போது அடைந்த குதூகலத்துக்கு அளவில்லை. "ஆற்று மணலில் கார் அகப்பட்டுக் கொண்டதே நல்லதாய்ப் போயிற்று; நமக்கு ஒரு நல்ல கதை கிடைக்கப் போகிறது" என்று எண்ணி உற்சாகம் அடைந்தேன்.

"அது என்ன கதை? காதறாக் கள்ளன் என்றால் யார்? அப்படி ஒரு கள்ளனா? நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றேன்.

"நீங்கள் கேள்விப்படாத காரியங்கள் எத்தனையோ இருக்கலாம்! அதற்கு நானா பொறுப்பாளி?" என்று சொன்னார் அந்தப் பெரியவர்.

"கோபித்துக் கொள்ளாதீர்கள்! கதையைச் சொல்லுங்கள்!" என்றேன்.

நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அருமையான கதை ஒன்று கிடைத்தது. 'அருமையான கதை' என்று எனக்குத் தோன்றியதைத்தான் சொல்லுகிறேன். கேட்டுவிட்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

பெரியவர் சொன்ன கதை

அதோ, ஆற்றைக் கடந்ததும், அப்பால் ஒரு கிராமம் தெரிகிறதல்லவா? அதன் பெயர் என்னவென்று தெரியுமோ? 'பரி உயிர் காத்த நல்லூர்' என்று பெயர். ஆமாம்; திருநெல்வேலிச் சீமையில் ஊரின் பெயர்கள் கொஞ்சம் நீளமாகத் தான் இருக்கும். சிலர் 'பரி உயிர் நீத்த நல்லூர்' என்று சொல்லுவதுண்டு. இந்தக் கிராமத்துக் கோயிலில் உள்ள கல்வெட்டு சாஸனங்களில் 'பரி உயிர் காத்த நல்லூர்' என்று தான் இருக்கிறது. அதுதான் சரியான பெயர் என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இந்தக் கிராமத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்ற கதையைத் தான் இப்போது சொல்லப் போகிறேன்.

சற்று நீங்கள் வந்த வழியைத் திரும்பிப் பாருங்கள் அதோ ஒரு 'பொத்தை' தெருகிறதல்லவா? உங்கள் நாட்டில் என்ன சொல்வீர்களோ தெரியாது. இந்த நாட்டில் சிறிய மொட்டைக் குன்றுகளுக்குப் 'பொத்தை' என்ற பெயர். அந்தப் பொத்தைக்கு அப்பாலே ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ, தெரியாது. காரில் பறந்து வருகிறவர்கள் எங்கே பார்க்கப் போகிறீர்கள்? நான் சொல்லுகிறதை நம்ப வேண்டியதுதான். அங்கே ஒரு புளியமர தோப்பு இருக்கிறது. எனக்கு வயது நாற்பது ஆகியிருந்த போது அங்கே புளியஞ்செடி நட்டார்கள். இப்போது மரங்களாகியிருக்கின்றன. இந்த நாளிலே ஒருவரும் மரம் நடுகிறதில்லை. அந்தந்த வருஷத்திலே பயன் தருகிற விவசாயமே செய்கிறார்கள். இப்போதுள்ள புளியமரமெல்லாம் போய்விட்டால், நம்முடைய சந்நதியில் வரும் ஜனங்கள் புளிக்கு என்ன செய்வார்களோ தெரியாது. ஒரு புளியம் பழம் ஒரு ரூபாய்க்கு விற்கும் காலம் வந்தாலும் வரும்! நல்ல வேளை அப்படிப்பட்ட காலத்தை பார்ப்பதற்கு இருக்க மாட்டேன்.

அந்தப் பொத்தைக்குப் பக்கத்தில் இப்போது புளியந்தோப்பு இருக்கும் இடத்தில் அறுபது வருஷத்துக்கு முன்னாலும் ஒரு புளியந்தோப்பு இருந்தது. ஒரு நாள் பௌர்ணமியன்று சாயங்காலம் அந்தப் புளியந்தோப்பில் ஆள்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். ஆள்கள் என்றால் இந்தக் காலத்து மனிதர்களைப் போல் நோஞ்சைகள் அல்ல. ஆறு அடி உயரம், ஆஜானுபாகுவான ஆள்கள். அவர்களில் சிலர் கையில் தடி வைத்திருந்தார்கள். சிலர் கத்தி, கபடா, வேல், ஈட்டி முதலிய ஆயுதங்களும் வைத்திருந்தார்கள். அவர்கள் வாள்களையும் வேல்களையும் விளையாட்டாக ஒன்றோடொன்று மோதவிட்டபோது டணார் டனார் என்று சத்தம் எழுந்தது. தடிகளோடு தடிகள் முட்டிய போது சடமடா என்ற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் ஒருவரோடொருவர் பேசிய வீர வாதங்கள் பாபநாசத்து அருவி விழும் ஓசையைப் போல் பேரிரைச்சலாகக் கேட்டது.

சூரியன் மேற்கே அஸ்தமித்தது. அஸ்தமித்ததற்கு அடையாளமாக மேற்கு வானத்தில் சில சிவப்புக் கோடுகள் மட்டும் தெரிந்தன. அப்போது கிழக்கே பூரண சந்திரன் திருமாலின் கையில் சுழலும் சக்கரத்தைப்போல் தகதகவென்று உதயமானான். அதே சமயத்தில் குதிரைகள் வரும் காலடிச் சத்தம் கேட்டது. உடனே அந்தப் புளியந்தோப்பில் பேச்சு அடங்கி நிசப்தம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் காதோடு "மகாராஜா வருகிறார்" என்று சொல்லிக் கொண்டார்கள்.

சற்று நேரத்துக்கெல்லாம் ஏழெட்டுக் குதிரைகள் வந்தன. ஒவ்வொரு குதிரையின் மேலும் ஒரு வீரன் வந்தான். எல்லோருக்கும் முதலில் வந்தவன் அவர்களுடைய தலைவன். அவன் பெயர் தில்லைமுத்துத்தேவன். அவனைத்தான் "மகாராஜா" என்று அந்த வீரர்கள் அழைத்தார்கள். தில்லைமுத்துத்தேவன் ஒரு பெரிய பாளையக்காரன். அறுபது கிராமங்களுக்கு அதிபதி. அவன் சொல்லிவிட்டால், எந்த நேரமும் ஆயிரம் ஆட்கள் வந்து விடுவார்கள். சண்டையில் உயிரைக் கொடுக்கத் தயாராக வருவார்கள்.

பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் புளியந்தோப்புக்கு வந்ததும், தோப்பில் இடைவெளியிருந்த ஒரு இடத்தைப் பிடித்து அங்கே குதிரையிலிருந்து கீழே இறங்கினான். மற்றவர்களும் இறங்கினார்கள். முன்னமே தயாராக வைத்திருந்த ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு வந்து போட்டார்கள். அதன் பேரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தில்லைமுத்துத்தேவன் உட்கார்ந்தான்.

அவனுடைய மதிமந்திரியான நல்லமுத்துத்தேவன் உடனே வெற்றிலை பாக்குப் பெட்டியை எடுத்துப் பாக்கும் வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தான்.

பாளையக்காரன் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டே "நல்லமுத்து! உனக்கு என்ன தோன்றுகிறது? கருடாசலத்தேவன் சொல்லி அனுப்பியபடி ராஜி பேசுவதற்கு வருவான் என்று நினைக்கிறாயா?" என்று கேட்டான்.

"கட்டாயம் வருவான், மகாராஜா! அவன் தலை என்ன இரும்பா? அப்படி வராவிட்டால் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாதா" என்றான் நல்லமுத்துத் தேவன்.

"அவன் வராவிட்டால் என்ன நடக்கும்? உன் உத்தேசம் என்ன?" என்று பாளையக்காரன் கேட்டான்.

"முதல் ஜாமம் முடிவதற்குள் அவன் இங்கே வந்து மகாராஜா சொல்கிறபடி நடக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் நம்முடைய காரியத்தை நடத்த வேண்டியதுதான்!..."

"நம்முடைய காரியம் என்றால்..."

"கருடாசலத்தேவனின் அரண்மனை, சவுக்கண்டி களஞ்சியம், வைக்கற்போர், மாட்டுக் கொட்டகை குதிரைலாயம் எல்லாவற்றையும் அக்னி தேவனுக்கு இரையாக்க வேண்டியதுதான்!"

"அட பாவி!..."

"மகாராஜா! யார் பாவி? இருபது வயதான மருமகப் பெண்ணை யாருக்கும் கட்டிக் கொடுக்காமல் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கிறானே, அவன் பாவியா? நான் பாவியா? பெற்று வளர்த்த பிள்ளையைக் கொஞ்சங்கூட மனத்தில் ஈவிரக்கமில்லாமல் வீட்டைவிட்டு விரட்டியடித்தானே அந்த மனுஷன் பாவியா? நான் பாவியா?"

"அது எல்லாம் சரிதானப்பா! கருடாசலத்தேவன் மேல் இரக்கப்பட்டு நான் ஒன்றும் சொல்லவில்லை. அரண்மனைக்கு தீ வைத்துக் கொளுத்தினால் அந்தப் பெண் மரகதவல்லிக்கும் ஒரு வேளை ஏதாவது ஆபத்து வரலாம் அல்லவா?"

"வந்தால் வந்ததுதான்! அதற்காக நாம் என்னத்தை செய்கிறது? அந்தக் கிழவனுக்கல்லவா அதைப் பற்றிக் கவலையாயிருக்க வேண்டும்?"

"இருந்தபோதிலும் என்னுடைய யுக்தி பலித்தால் ஒரு ஆபத்தும் இல்லாமல், ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் காரியம் கைகூடிவிடும் அல்லவா?"

"அதிலே என்ன இலாபம்? மகாராஜா இரத்தம் சிந்துவதற்குப் பயப்படும்படியான காலம் இப்போது என்ன வந்துவிட்டது? போயும் போயும் மகாராஜா ஒரு கள்ளப் பயலிடம் நம்பிக்கை வைத்து ஒரு காரியத்துக்கு ஏவுகிறதென்பது எனக்குப் பிடிக்கவில்லை..."

"நல்லமுத்து! அவன் சாதாரணக் கள்ளன் இல்லை. உலகமெல்லாம் சொல்லுகிறார்களே! கள்ளனாயிருந்தாலும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். சொன்ன சொல் தவறமாட்டான்..."

"இதெல்லாம் பெண் பிள்ளைகள் கட்டிவிட்ட கதை 'காதறாக் கள்ளன்' என்ற பட்டம் அவனுக்குப் பெண் பிள்ளைகள் கொடுத்ததுதானே? அதை எஜமானரும் நம்புகிறீர்களே?"

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது புளியந்தோப்பை நெருங்கி ஒரு ஒற்றைக் குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. தோப்பில் கூடியிருந்த ஆட்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் கசு முசு வென்று பேசத் தொடங்கினார்கள்.

"அந்த ஆள் தான் போலிருக்கிறது" என்றான் பாளையக்காரன்.

நல்லமுத்துத்தேவன் எழுந்து நின்று கழுத்தை வளைத்துப் பார்த்துவிட்டு, "ஆமாம்; அவன் தான் போலிருக்கிறது. நீங்கள் ஆச்சு; உங்கள் காதறாக் கள்ளன் ஆச்சு; எப்படியானும் போங்கள். நான் விலகிக் கொள்ளுகிறேன்" என்று சொல்லிவிட்டு அப்பாற் போனான்.


விவாதங்கள் (6)